Thursday, September 29, 2011

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் இதுவரை 210 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு.



வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறை யினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான்கு இந்திய வனப்பணி அதிகாரிகள் உள்பட 210 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படாமல், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர்.

யார் யார் குற்றவாளி?

ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கனவே இறந்து விட்டார்.

என்னென்ன பிரிவுகளில் குற்றச்சாட்டு ?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 147, 149, 323, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அத்தனை பேர் மீ்தும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதேபோல பலர் மீது பாலியல் பலாத்காரத்திற்காக 376வது பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேபோல ஆதாரங்களை மறைத்தது தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தாக்கிக் காயப்படுத்தியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நடந்தது என்ன?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .

இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.

வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.

ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.

விசாரிக்க மறுத்த போலீஸ்

இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் கொடுத்த சூடு

இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐக்கு மாறிய வழக்கு

ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அவசரம்.



நாட்டில் முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரச் செய்ய எதிர்க்கட்சிகள் மிகுந்த அவசரப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் யாருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

5 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர். எனவே இன்னும் 2 ஆண்டுகள் காத்திருங்கள் என்று, எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் அரசு பற்றிய சில பலவீனமான அம்சங்களை வைத்துக் கொண்டு, முன்கூட்டியே தேர்தலை திணித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அரசைக் கவிழ்க்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால், மக்கள் அனுமதி அளித்து உள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு இந்த அரசு நிச்சயம் நீடிக்கும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு நினைக்கிறது. அமைச்சரவையில் எப்போதும் திறந்த மனதுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்களுக்குள் பல்வேறு எண்ணங்கள், கருத்துகள் இருக்கலாம். இதனால், எங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று அர்த்தமல்ல. கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வருவது போல் (பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு) எதுவும் நடக்கவில்லை. ப.சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்றத்தில் பல முக்கியமான மசோதாக்கள் விவாதிக்கப்படக் காத்திருக்கின்றன. ஆனால், தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பிக் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி நாடாளுமன்றம் செயல்படாமல் தடுக்கப்படுவதால் அந்த மசோதாக்கள் நிறைவேறாமல் முடக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது, பென்சன் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பொது கொள்முதல் கொள்கை மற்றும் லோக்பால் போன்ற முக்கிய பொருளாதார சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ராணுவத் தலையீடு மூலம் இன்னொரு நாட்டில் உள்நாட்டுப் பிரச்னையைத் தீர்க்க முயல்வது ஆபத்தில் முடியும். லிபியாவில் ஆட்சி மாற்றத்தால் அங்கே அமைதி நிலவிவிடும் என்று நம்ப முடியவில்லை. உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தால் அதன் விளைவுகள் லிபியாவை ஒரு சோமாலியா போல மாற்றிவிடக் கூடும் என்றார் மன்மோகன் சிங்.

ராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூன்று பேருக்கும், அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்த்து இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை எழுப்பி வருவது குறித்துக் கேட்டதற்கு, அது குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் சட்டத்தின் மேலாண்மை நிலைநிறுத்தப்படும் என்பதை மட்டும் தான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து கேட்டதற்கு, இது தொடர்பாக தமிழகத்தில் எழுப்பப்படும் எதிர்ப்புகள் விரும்பத்தக்கதல்ல. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துகள் பற்றித் தெரிந்த பின்னும் அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் போன்ற அணு மின் நிலையங்களை அமைக்க முன் வருமா என்பதை அவர்கள் யோசிக்க வேண்டாமா?.

இந்தியாவிலேயே தமிழகம்தான் தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இந் நிலையில் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால் அணு மின் நிலையம் அமைப்பதைத் தவிர வேறு உடனடி மாற்று வழியேதும் இல்லை. சுற்றுச்சூழலை பாதிக்காமல், குறைந்த செலவிலும் எரிசக்தி வேண்டுமானால், நாம் அணு மின் சக்தியை பயன்படுத்தியே தீர வேண்டும் என்றார்.

இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம் : மன்மோகன்சிங்.



அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பியக் கூட்டமைப்பு போன்ற வல்லரசுகளின் பொருளாதாரப் பிரச்னைகளால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம். உலகமயத்தால் பல நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும், ஆரம்ப கால நன்மைகளை அதன் பின் விளைவுகள் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

நான் சோஷலிஸ்டாக இருந்து, உலக மயமாக்கலின் ஆதரவாளனாக மாறி இருப்பவன் என்கிற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அந்தந்த சூழ்நிலையில் நாட்டுக்கு எது நன்மை பயக்குமோ, அதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உலக மயமாக்குதல் மூலமும், பொருளாதார சீர்திருத்தம் மூலமும் பல நன்மைகளை இந்தியா அடைந்திருக்கிறது. இதன் பயன் எல்லா தரப்பினரையும் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்றால், சில மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.

விலைவாசி உயர்வு என்பது உலகளாவிய பிரச்சனை. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. சீனாவில் விலைவாசியால் மக்கள் நம்மைவிட மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உணவு தானியங்களின் விலைவாசி ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், காய்கறிகள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றின் விலை தான் மிக அதிகமாக உள்ளது. மக்களின் வருமானம் உயர்ந்திருப்பதும், அவர்கள் இதுபோன்ற ஆரோக்கியமான சத்துணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதும்தான் இதற்குக் காரணம்

நமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால்தான் இந்த விலைவாசி உயர்வே தவிர பணவீக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வாக இதைக் கருத முடியாது என்றார்.