Saturday, February 26, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -4)




46.உங்கள் ரோல்மாடல் யார்?
ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி, சாத்தூர்

டாகடர் அப்துல்கலாம் :
என்னுடைய ரோல் மாடல் பேராசிரியர் சதீஷ் தவான். அவரது தலைமைப்பண்புகள் என்னைக் கவர்ந்தது. முக்கியமான பணிகளை மேற்கொண்டிருக்கும் போது, பிரச்னைகள் வரும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து நாம் வெற்றி பெற வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார்.

47.நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியுமா?

கணேஷ்ராம், பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : ராணுவ படைகள் மற்றும் இடர்பாடு மேலாண்மைத் துறையினர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று, உதவி வருகிறார்கள்.நாம் நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமானால், சேதத்தை குறைக்கலாம். இதற்கான ஆராய்ச்சி துவங்கிவிட்டது. இடர்பாடு நிர்வாகத்துறையினர் சேத அளவை குறைக்கவும், நிவாரணப் பணியில் ஈடுபடவும் செய்கின்றனர். விஞ்ஞானிகளும் முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றனர். இது பேரிழப்புகளை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

48.ஹீலியம் - 3 எந்த அளவுக்கு நமக்குப் பயன்படும்?
அன்புச்செல்வன், டால்பின் மெட்ரிக் பள்ளி, பொன்மேனி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : சந்திரனில் ஹீலியம் -3 பெருமளவில் உள்ளது. எரிபொருளுக்கான மிக நேர்த்தியான மூலப்பொருள் இது. நல்ல ஆற்றல் அதே சமயம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. கதிர்வீச்சு இருக்காது. 21ம் நூற்றாண்டுக்கான எரிபொருள் இது என்று எல்லோரும் வரவேற்கிறார்கள்.

49.எதை வெற்றிகரமான சாதனையாக கருதமுடியும்?
எஸ்.சிவா, தங்கவேலு தொழில்நுட்ப கல்லூரி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : இது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. பிறரால் சாதிக்க முடியாத ஏதேனும் ஒன்றை, சாதித்துக்காட்டி ஜெயித்தால், நீங்களும் சாதனையாளரே.

50.உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உள்ளதா?
எஸ்.மகாலட்சுமி, ஸ்ரீ ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரி, மாமண்டூர்

டாகடர் அப்துல்கலாம் : விடாமுயற்சியுடனான, கடின உழைப்பும், வியர்வையுமே வெற்றியை பெற்றுத்தரும்.

51.இளைய தலைமுறைக்கு உங்களது அறிவுரை? அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ஆர்.ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சாத்தூர்

டாகடர் அப்துல்கலாம் : படிப்பில் சாதியுங்கள். அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் இலக்கை தீர்மானியுங்கள். அந்த இலக்கை நீங்கள் அடைய முயற்சிக்கும் போது, கண்டிப்பாக சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். பிரச்னைகள் உங்களை வீழ்த்திவிடக்கூடாது. நீங்கள் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு வீழ்த்துங்கள். நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்காற்றக் கூடிய அறிவான குடிமக்களாக நீங்கள் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

52.இந்த வயதில் எனக்கு ஏற்படும் மனச்சிதறல்களிலிருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
சிவா, டி.ஐ., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காரப்பாக்கம், சென்னை

டாகடர் அப்துல்கலாம் : மனச்சிதறல்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமே. மாணவப் பருவம் பொறுப்புள்ளது என்பதால் நம் பலம் மற்றும் ஆர்வத்தை அறிந்து கொள்ள வேண்டும். உங்களது லட்சியத்தை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக நீங்கள் தொடர்ந்து போராடுங்கள். இந்த லட்சியத்தை அடையும் போது நீங்கள் கண்டிப்பாக சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து உங்கள் லட்சியத்தில் நீங்கள் வெற்றி பெறுங்கள்.

53.நர்சிங் துறை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மூகாம்பிகை, மங்களசுந்தரி, மதர்தெரசா போஸ்ட் கிராஜுவேட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ், புதுச்சேரி

டாகடர் அப்துல்கலாம் : நர்சிங் மிகச்சிறந்த உன்னதமான பணி. இரவிலும் பகலிலும் வேதனையுறுவோருக்கு தேவையானதை செய்யும் பணி என்பதால் ஆஸ்பத்திரி வார்டுகளில் அவர்கள் தேவதை போல் காட்சியளிப்பார்கள். இந்த பணியில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உலகம் முழுவதும் இப்பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்திய நர்ஸ்கள் எங்கு போய் பணியாற்றினாலும் அவர்களுக்கு நல்ல மரியாதை உண்டு.

54.இந்தியாவில் ஏராளமான தோரியம் தாது உள்ளது.ஆனால் அணு உலைகளுக்கு எரிபொருளுக்கு அடுத்த நாடுகளை நம்பியிருக்கிறோமே?
பிரதீப் குமார், 12ம் வகுப்பு, பி.வி.எம்., பள்ளி, பொள்ளாச்சி

டாகடர் அப்துல்கலாம் : இன்னும் சில ஆண்டுகளில் நமது விஞ்ஞானிகள் இதில் வெற்றி கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.00ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில்

55.இந்தியா எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?
தரண்குமார், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை

டாகடர் அப்துல்கலாம் : ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தற்போது இதற்கான வசதி பெருகி வருகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு போதுமான சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து கூட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் திட்டங்கள் மேற்கொள்ள மாணவர்கள் வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலை மற்ற இன்ஜினியரிங் பிரிவுகளிலும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

56.ஒரு மதத்துக்குள்ளேயே பல பிரிவுகள் உள்ளபோது, நீங்கள் எப்படி பல்வேறு மதங்களை மதிக்கிறீர்கள்?
கமலாதரன், மருதுபாண்டியன் நகர், சிவகங்கை

டாகடர் அப்துல்கலாம் :
நமது மதங்கள் மிக அழகான தீவுகளைப் போன்றவை. மதம் என்பது ஆன்மிகமாக மறுமலர்ச்சி அடைய வேண்டும். எல்லோரிடமும் ஒருமைப்பாட்டை பார்க்க வேண்டும். மதம், ஜாதி மற்றும் மொழி வேறுபாட்டுக்கு ஆதரவாக செயல்படமாட்டேன் என்று எல்லா மாணவர்களும் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

57.சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சூரியன் என்னவாகும்?
கிரிதர்ராஜ், இ.பி.ஜி., மெட்ரிக். பள்ளி, மூன்றுமாவடி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : சூரியன் இதற்கு முன்பு 460 கோடி ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இயங்கி வந்திருக்கிறது. இன்னும் 50 லட்சம் ஆண்டுகளுக்கு அதிலுள்ள எரிபொருட்கள் தீராது. சூரியனின் கடைசி காலத்தில் அதிலுள்ள ஹீலியம் குறைந்து பிற தனிமங்களால் அது பெரிதாகத் துவங்கும், அவ்வாறு விரிவடையும் போது, அது பூமியையே விழுங்கிவிடும்.

58.உங்களைப் போன்று உயர்ந்த பணிகளை மேற்கொள்ள நானும் விரும்புகிறேன். வழி சொல்லுங்களேன்.
உமர் பரூக், யாதவா கல்லூரி, மதுரை. சத்யா, பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, வத்தலக்குண்டு

டாகடர் அப்துல்கலாம் : இளைஞர்களாகிய உங்களுக்கு வாழ்வில் லட்சியம் வேண்டும். இலக்கை தீர்மானித்த உடன் அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. சலிக்காத மனம், இடைவிடாத கடின உழைப்பு இருந்தால் தடைகளை தாண்டி இறுதியில் வெற்றி பெறலாம்.

59.கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
ஹேமா, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை.

டாகடர் அப்துல்கலாம் : நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன் மற்றும் சர் சி.வி.ராமன் போன்றோர் கூட இந்த அண்ட சராசரத்தை படைத்த கடவுளின் விந்தையை கண்டு பிரமித்தனர். ராமன் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். என்னைப் பொறுத்தவரை நமக்கு இறைவன் மீது நம்பிக்கை இருந்தால், நமது முயற்சியின் முடிவு பல மடங்காகப் பெருகும்.

60.நேனோ டெக்னாலஜியின் எதிர்காலம் என்ன?
ஜெகநாதன், அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர். கவிதா, கலைமகள் கல்லூரி, கோவை. ஷியாம் சுந்தர், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம். முருகேசன், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்

டாகடர் அப்துல்கலாம் : மிக நேர்த்தியான தொழில்நுட்பத்தைக் கொண்டது நேனோ டெக்னாலஜி. மருத்துவத்துறையில் இந்த தொழில்நுட்பம் சாமான்யர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. பயோ இன்பர்மாடிக்ஸ் துறையுடன் இந்த துறை எதிர்காலத்தில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது. அது மருத்துவத் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

61.வளர்ந்த நாடாக இந்தியா உருவாகும் போது விவசாயத்தின் நிலை என்ன?
ராஜபிரபு, பி.எஸ்.என்.ஏ., கல்லூரி, திண்டுக்கல். சதீஷ்ராஜா, குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி, கரூர்

டாகடர் அப்துல்கலாம் : நம் நாட்டில் 70 கோடி மக்கள் இன்னும் கிராமத்தில் வாழ்கிறார்கள். இதற்காக குறைந்தபட்சம் 7 ஆயிரம் கிராமங்களை நகர்ப்புறங்களுக்கு இணையான வசதி கொண்ட தொகுப்புகளாக மாற்ற வேண்டும். இதனால் அக்குறிப்பிட்ட கிராமங்களுடன் அதை சுற்றியுள்ள கிராமங்கள் சாலை வசதிகள், மின்னணு வசதி, தொலைதொடர்பு வசதி கிடைக்கும். அக்கிராமங்களும் முன்னேற்றம் அடையும். தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள வல்லம் கிராமம் 65 கிராமங்களை தன்னுடன் இணைத்து நகர்ப்புறத்துக்கு இணையாக திகழ்கிறது. வளர்ந்த நாடாக மாறும்போது கிராமங்கள் வளர்ந்தால்தான் விவசாயமும் விளைபொருட்களும் உயரும்.

62.இன்றைய வாழ்க்கையில் அறிவியல் இரண்டற கலந்துவிட்டது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
தீபக் ராஜ், குலப்பட்டி பாலகிருஷ்ணா ஜோஷி குருகுலம் பள்ளி, கொளத்தூர்

டாகடர் அப்துல்கலாம் : ‘டிவி, ரேடியோ, தொலைதொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் அறிவியலின் விளைவுகளே. எதிர்காலத்திலும் இவற்றில் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும். பண்ணைகளில் உற்பத்தியை பெருக்குவது, கடலில் குறிப்பிட்ட இடங்களில் மீன்களை அறிவது, வானிலை அறிக்கை ஆகிய அனைத்துமே அறிவியல் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்.

63.இந்தியா முழுவதும் ஆறுகளை எப்போது இணைப்பார்கள்?
ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு

டாகடர் அப்துல்கலாம் : ஆறுகளை இணைப்பது மிகுந்த பலன் தரக்கூடியது. மத்திய பிரதேசத்தில் சிறு ஆறுகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் தலைமுறைக்கு இது முக்கியமான பணி.

64.ஏழ்மையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
தினேஷ், சி.ஐ.டி., பாலிடெக்னிக், கோவை

டாகடர் அப்துல்கலாம் : கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை உருவாக்கித் தரும் புறா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஏழ்மையை ஒழிக்க முடியும். இது கிராமப்புற மக்களின் தொழில் வாய்ப்பையும் தொழில்முனையும் திறனையும் அதிகரித்து அவர்களது வாழ்க்கையை வளம் பெற செய்யும்.

65.இந்திய மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?
கார்த்திக், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி, கோவை

டாகடர் அப்துல்கலாம் : எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும். அந்த வல்லரசான நாட்டில் மாணவர்கள் வாழ வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இந்த சூழலில் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வளர்ச்சியும் ஏற்படும்.

66.எதிர்கால சந்ததியினரிடம் எதிர்பார்ப்பது என்ன?

மதுமிதா, ஸ்ரீசாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை கனவாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். நீங்கள் ஒரு லட்சியத்தை கொண்டு, எதிர்வரும் தடைகளை தகர்த்து, சிறப்படைய வேண்டும். விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்கள் லட்சியங்களை தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பாக கொள்ள வேண்டும். இயலாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்

நன்றி : கல்வி மலர்