Monday, June 13, 2011

காவல்நிலையத்தில் இருந்து 7 பேரை மீட்டுச் சென்ற அமைச்சர், எம்எல்ஏ !


செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் சென்னையில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரில் வந்து, அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் 12.06.2011 அன்று இரவு கொடி, தோரணம் மற்றும் வரவேற்பு தட்டிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தை முன்னிட்டு அந்த ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சிலோன் ஹோட்டலில் அமர்ந்து உணவு அருந்துபோது, விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு அப்பகுதியில் சென்றுள்ளார். ஹோட்டலில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அவர், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அந்த சமயத்தில் அதிமுகவினருக்கும், தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அதிமுகவினரை துணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் அதிமுக பகுதி செயலாளர் மாறன், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட 7 பேரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு துணை ஆணையர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

அதிமுகவினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட தகவல் அமைச்சர் செந்தமிழன், அதிமுக எம்எல்ஏ வளர்மதி ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் அதிமுகவினருடன் காவல்நிலையத்திற்கு சென்று எங்கள் கட்சிக்காரர்களை ஏன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொன்னதாக தெரிகிறது.

காவல்நிலையத்திற்கு அதிமுகவினர் அழைத்துவரப்பட்டதற்கான காரணம் தெரிவித்தும், அதனை அமைச்சர் செந்தமிழனும், எம்எல்ஏ வளர்மதியும் கேட்க மறுத்துவிட்டதாகவும், காவல்நிலையத்தில் உள்ள அதிமுகவினரை விடுவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீசார் வேறுவழியின்றி அதிமுகவினர் 7 பேரையும் விடுவித்துவிட்டனர்.

இந்தநிலையில் மாறன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் தங்களை தாக்கிய தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறைனர், புகார் பெற்றுக்கொண்டதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர். இதனால் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவினர் யாரும் காவல்நிலையத்திற்கு சென்று யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதையும் மீறி அமைச்சர் செந்தமிழன், எம்எல்ஏ வளர்மதி உள்ளிட்டோர் அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்றிருப்பதால், அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை இருக்குமா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானிய உளவுத்துறைக்குத் தெரியாமலேயே, பாகிஸ்தானுக்குள் சி.ஐ.ஏ. படம்பிடித்த 10 நிமிட வீடியோ.


சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய பகீர் ஆதாரங்களை காண்பித்திருக்கின்றார். பாகிஸ்தானில் வைத்தே, பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, மற்றும் உளவு அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இந்த ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.

“சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் செய்துவரும் பல ஆபரேஷன்கள் பற்றிய விபரங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு முன்கூட்டியே தெரியவந்து விடுகின்றன. இதனால் அவர்கள் உஷாராகி, தப்பி விடுகின்றனர். தீவிரவாதிகளுக்கு தகவல் போவது எப்படி? அதற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் தீவிரவாதிகளுக்கு ஆட்கள் இருக்க வேண்டும்” இவ்வாறு சி.ஐ.ஏ. சமீபகாலமாக வெளிப்படையாகக் கூறிவருகின்றது.

அதை பாகிஸ்தானியத் தலைமை மறுத்தும் வந்துள்ளது.

நிலைமை மோசமாகி வரவே சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, இரு தினங்களுக்குமுன் பாகிஸ்தானுக்கு நேரில் சென்றிருந்தார். பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஜெனரல் ஆஷ்பக் கயானி, உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப். ஜெனரல் அஹ்மட் பாஷா ஆகியோரை அவரச கூட்டம் ஒன்றுக்கு அழைத்தார்.

அப்போதும் பாகிஸ்தான் தரப்பு, “எமது பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்து ரகசியங்கள் ஏதும் தீவிரவாத அமைப்புகளுக்கு லீக் செய்யப்படுவதில்லை. நீங்கள் (சி.ஐ.ஏ.) கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு” என்பதையே மீண்டும் வலியுறுத்தினர்.

இதையடுத்து சி.ஐ.ஏ.யின் தலைவர், “எமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து, உங்களது ராணுவத்துக்கு உள்ளேயே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.

இதை கோபமாக மறுத்த பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, “ஆதாரம் ஏதுமில்லாமல் எமது ராணுவத்தினர்மீது குற்றம்சாட்டக் கூடாது” என்றார்.

அதன் பின்னரே லியோன் பனெடா, தம்மிடமுள்ள ஆதாரங்கள் சிலவற்றை மேஜையில் தூக்கிப் போட்டார்.

சி.ஐ.ஏ. தலைவர் காண்பித்த ஆதாரங்களில், பல டாக்குமென்ட்களுடன், 10 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவும் இருந்தது. பாகிஸ்தானிய உளவுத்துறைக்குத் தெரியாமலேயே, பாகிஸ்தானுக்கு உள்ளே படம்பிடிக்கப்பட்ட வீடியோ அது!

பாகிஸ்தானின் இரு பகுதிகளில் தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு தயாரிப்பு தொழிற்சாலைகளை நடாத்திவருவது பற்றிய உளவுத் தகவல்கள் சி.ஐ.ஏ.க்குக் கிட்டியிருந்தது. இதில் ஒரு வெடிகுண்டுத் தொழிற்சாலை வடக்கு வாசிரிஸ்தானிலும், மற்றையது தெற்கு வாசிரிஸ்தானிலும் அமைந்திருந்தன.

குறிப்பிட்ட தொழிற்சாலைகள் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்திருந்த சி.ஐ.ஏ., தம்மிடமிருந்த தகவல்களை பாகிஸ்தானிய ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டது. பாகிஸ்தானிய ராணுவத்தை வைத்தே, அந்த வெடிகுண்டுத் தொழிற்சாலைகள் இரண்டையும் ரெயிட் செய்யும் ஆபரேஷனை மேற்கொண்டது.

ஆனால், ரெயிட் நடைபெற்ற நேரத்தில், இரு இடங்களிலும் ஏதுமில்லை. எல்லாமே மாயமாகி விட்டிருந்தன.

“சி.ஐ.ஏ.க்கு கிடைத்த தவறான தகவலின் பேரில் நடைபெற்ற ரெயிட்” என்று கூறி, இரு ஆபரேஷன்களையும் முடித்துக் கொண்டது பாகிஸ்தானிய ராணுவம்.

இப்போது, சி.ஐ.ஏ. தலைவரினால் இஸ்லாமபாத்தில் வைத்துக் காண்பிக்கப்பட்ட 10 நிமிட வீடியோவில், மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னணி படமாக்கப்பட்டிருந்தது. எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோ, தீவிரவாத அமைப்பினரில் இரு வெடிகுண்டுத் தொழிற்சாலைகளிலும் ரகசியமாக எடுக்கப்பட்டவை!

தொழிற்சாலைகளை ராணுவம் சுற்றி வளைக்கப்போகும் தகவல், தீவிரவாத அமைப்பினருக்கு வந்து சேருவதும், உடனே அவர்கள் துரிதமாகச் செயற்பட்டு, தமது தொழிற்சாலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும் சி.ஐ.ஏ.யால் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருந்தன.

“எமக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் நாம் நேரடியாக ஆபரேஷன்களை பாகிஸ்தானுக்குள் செய்தால், அதையும் எதிர்க்கிறீர்கள். உளவுத் தகவல்களை உங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினால், உங்கள் ஆட்களாலேயே தகவல்கள் தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேருகின்றன” என்று சி.ஐ.ஏ.யின் தலைவர் கூறியதற்கு, பாகிஸ்தானின் தரப்பிலிருந்து கூறப்பட்ட பதில் என்ன?

“நாங்கள் இதுபற்றி விசாரிக்கிறோம்” அவ்வளவுதான்!

இந்திய சினிமா : வெளிநாடுகளில் என்ன நிலை?


ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் இயக்கிவரும் ‘BIG Cinemas’ தியேட்டர்கள், முன்பைவிட அதிக எண்ணிக்கையில் தமது கதவுகளைத் திறந்துள்ளன. வெளிநாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், இது சாத்தியமாகியுள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

“இந்தியத் திரைப்படங்களுக்கு முன்பைவிட அதிக வரவேற்பு வெளிநாடுகளில் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ள ரிலையன்ஸ் மீடியா வேர்க்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி அனில் அர்ஜூன், “இதனால்தான், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் தியேட்டர்களை வெற்றிகரமாக இயக்க எம்மால் முடிகின்றது” என்கிறார்.

‘BIG Cinemas’ தியேட்டர்கள், 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் நியூ ஜேர்சியிலும், ஜோர்ஜியாவிலும் முதன்முதலாகத் தமது தியேட்டர்களைத் திறந்தது. தற்போது ‘BIG Cinemas’ தியேட்டர்கள், Illinois, California, Florida, Georgia, Kansas, Kentucky, Nevada, New Jersey, New York, North Carolina, Ohio, Tennessee, Virginia ஆகிய மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மொத்தம் 24 நகரங்களில், 250 தியேட்டர்களை நடாத்துகின்றது ரிலையன்ஸ். அமெரிக்காவில் திரையிடப்படும் 20-30% ஹிந்திப் படங்களும், 70% தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களும் தமது நிறுவனத்தாலேயே வெளியிடப்படுவதாகக் கூறுகின்றது ரிலையன்ஸ்.

“எமது தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், வெளிநாட்டுவாழ் இந்தியர்களாலேயே அதிகம் பார்க்கப்படுகின்றன என்றும் கூறியுள்ள அனில் அர்ஜூன், ஸ்டார் வேல்யூ உடைய திரைப்படங்களான Dabangg, 3 Idiots, My Name is Khan, Robot போன்றவை, தியேட்டரின் 100% சீட்கள் நிரம்பிய நிலையில் காண்பிக்கப்படுவது சகஜம்” என்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் இருக்கும் காரணத்தால், மலேசியா, மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் தற்போது தியேட்டர்களைத் திறந்துள்ளது ரிலையன்ஸ். மலேசியாவில் இவர்களால் 72 தியேட்டர்கள் நடாத்தப்படுகின்றன.

சமீப காலமாக இந்தியத் திரைப்படங்கள் இன்டர்நேஷனல் பேனர்களில் தயாரிக்கப்படத் தொடங்கியுள்ளன. My Name is Khan, Kites ஆகிய திரைப்படங்கள் இப்படித் தயாரிக்கப்பட்டு வெற்றியடைந்த திரைப்படங்கள். ஹாலிவூட் திரைப்பட பாக்ஸ் ஆபீஸ் வரிசைகளிலும் இந்தத் திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆரம்ப நாட்களில் குறைந்தளவு காப்பிகள், மற்றும் தியேட்டர்களிலேயே வெளியிடப்பட்ட இந்தியத் திரைப்படங்களை, அமெரிக்காவில் தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது 3 Idiots திரைப்படம்தான் என்கிறார் அனில் அர்ஜூன். “தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களும், வெளிநாட்டு மார்க்கெட்டையும் மனதில் வைத்தே தயாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது” எனவும் கூறுகிறார் அவர்.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில், அதிக சதவீதமான ரசிகர்கள் ஈழத் தமிழர்கள் என்பதே நிலை. இதனால், வெளிநாட்டு மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தும் தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், ஈழத் தமிழர்களை மனதில் வைத்தும் சில காட்சிகளைச் சேர்ப்பது நடைபெறுகின்றது.

வலி நிவாரண மருந்தாகும் அபின்.


இந்திய உணவுப் பொருட்களில் கசகசா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது மார்ஃபைன் மருந்திற்காக உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. கசகசா செடியின் மலர்கள், காய், விதை மற்றும் விதை எண்ணெய் போன்றவை மருத்துவ பயன் உடைய பகுதிகளாகும்.

மரபு மருத்துவத்தில் அபின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 4000 ஆண்டுகளாக பயிரிடப்படும் மருந்து தாவரமாகும். அரேபியர்களால் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. சீனாவில் 7- ம் நூற்றாண்டுக்குப் பின்னரும், ஜப்பானில் 15 – ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் அபின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அபினில் காணப்படும் அல்கலாய்டுகள் மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதில் மார்ஃபைன், கொடைன், தியபெயின், நார்கோடைன், பெப்பருவரைன், போன்ற பல செயல் ஊக்கப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு உள்ளன.

அபின், ஓபியம்

கசகசா செடியின் காய்களின் மீது கூரிய கத்தி கொண்டு மேலிருந்து கீழாக கீறல்கள் போடப்படும் பொழுது லேடக்ஸ் சுரந்து வெயிலில் கட்டி, பிசின் போன்று மாறும். இதுவே அபின் – ஓபியம் எனப்படுகின்றது. தாவரத்தில் மலர், காய் ஆகியவற்றில் இருந்து அபின் கிடைக்கிறது. விதைகளின் காணப்படுவதில்லை.

பலவிதமான மருந்து தயாரிப்புகளிலும் அபின் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஆல்கலாய்டுகளான பைன் மற்றும் கொடைன் ஆகியவை தூக்கத்தை தூண்டுபவைகளாகவும், வலிபோக்குவிகளாகவும் செயல்படுகின்றன. அதிக அளவு உட்கொண்டால் விஷமாகும். இது தடை செய்யப்பட்ட தாவரமாகும்.

வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும்

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எற்படும் உடல் சோர்வினை போக்கும். கொதிக்கும் நீரில் சிறிது அபின் கலந்து ஆவி பிடித்தால் மூச்சடைப்பு, சளி போக்கும். கற்பூரத்துடன் சம அளவு கலந்த கலவை சுளுக்கு வலி போக்க வல்லது.

பிரசவகால வலி போக்கும்

அபினில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மார்ஃபியா சக்தி மிகுந்த மருந்தாகும். உரிய அளவில் ஊசி மூலம் செலுத்தினால் வலி போக்கி தூக்கம் வரும். பிரசவ கால வலியை போக்கும் மருந்தாக இது செயல்படுகிறது. கருப்பை வலி மற்றும் கற்பூரம் கலந்த லினிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக் களியில் அபின் சாராயக் கரைசலை தெளித்து அடிவயிற்றில் பற்றாக கட்டும் பொழுது கருப்பை தொல்லைகள் நீங்குவதாக கருதப்பட்டது.

கற்பூரம் கலந்து தயாரித்த மேற்பூச்சுச் தைலம் கழுத்துப் பிடிப்பு, நரம்பு வலி, மூட்டுவலி, முதுகுவலி, போன்றவற்றிர்க்கு சிறந்த மருந்தாகும்.

போதை மருந்து

தொடக்க காலத்தில் மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட அபின் பின்னர் போதைப் பொருளாக உட்கொள்ளப்பட்டது. இப்பழக்கம் பெர்சியாவில் தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. போதைப் பொருள் சந்தையில் ஓபியம் மற்றம் ஹெராயின் பிரபலமாக உள்ள ஆல்கலாய்டுகளாகும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளை திருடி மும்பையில் விற்பனை?


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கலெக்டர் சகாயத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து உதவி கமிஷனர் வெள்ளைத்துரை தலைமையில் அரசு ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சுப்பிரமணியன், தங்கையா, விசுவாசம், ராமலிங்கம் ஆகிய 4 பேர் சிக்கினர்.

இவர்களிடம் விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது சுப்பிரமணியன் செல்போனுக்கு ஒரு அழைப்புவந்தது. அதில் பேசிய ஒரு பெண், குழந்தை எப்போது கிடைக்கும், உடனே புறப்பட்டு வரவா? என்று கேட்டார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அந்த பெண்ணை அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு இடத்திற்கு வர சொல்லும்படி சுப்பிரமணியனிடம் போலீசார் சொல்ல சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த அந்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட பெண் பெயர் கற்பகம், சென்னையை சேர்ந்தவர். அவர் கூறியதாவது:-

என் கணவர் தலைமை செயலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால் குழந்தையை தத்து எடுக்க மதுரை வந்தேன். அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்களின் உதவியாளராக பணியாற்றி வந்த அமிர்தவள்ளியை பார்த்து விபரத்தை கூறினேன்.

அவர் புரோக்கர் சுப்பிரமணியனை பார்க்க சொன்னார். அவரை பார்த்து பேசினேன். ஆண் குழந்தைக்கு 7 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறினார். நானும் சம்மதித்து முன் பணமாக ரூ.201 கொடுத்தேன். அதை வாங்கி கொண்ட சுப்பிரமணியன் மீதி பணத்தை 12-ந்தேதி அன்று கொடுத்து விட்டு ஆண் குழந்தையை பெற்றுக் கொள் என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை கேட்ட போது, குழந்தையைதராமல் என்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை சுப்பிரமணியனும், அமிர்தவள்ளியும் தாக்கி பறித்து கொண்டனர். தட்டி கேட்ட என்னை கொன்று விடுவதாக மிரட்டினர்.

இவ்வாறு கற்பகம் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன், அமிர்த வள்ளி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பல குழந்தைகள் அவ்வப்போது திருட்டு போய் உள்ளது. இதில் சில குழந்தைகள் மீட்கப்பட்டன. இன்னும் சில குழந்தைகள் மீட்கப்படவில்லை.

இங்கு கடத்தப்படும் குழந்தைகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உதவியுடன் சுப்பிரமணியன் மூலம் மும்பை போன்ற இடங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிக்கினால் கடத்தப்பட்ட குழந்தைகள் எங்கெங்கு விற்கப்பட்டுள்ளது என தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி எங்கே - சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் பெறப்பட்ட ரூ. 214 கோடி பணத்தைத்தான் கலைஞர் டிவி வாங்கியது என்றால், அந்தப் பணம் தற்போது எங்கே. அதை சிபிஐ கைப்பற்றியுள்ளதா என்று உச்சநீதிமன்றம் சிபிஐயிடம் கேட்டுள்ளது.

சினியுக் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது கடன் தொகை அல்ல, மாறாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் பரிமாறப்பட்ட லஞ்சப் பணம் என்பது சிபிஐயின் வாதம். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் கலைஞர் டிவியின் பங்குதாரர்களான கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது சிபிஐக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் விளக்கங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பித்தனர்.

கனிமொழி, ராசாவுடன் இணைந்து சதி செய்து சினியுக் நிறுவனம் மூலமாக பெற்றதாக கூறப்படும் லஞ்சப் பணம் ரூ. 214 கோடி எங்கே?. அந்தப் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

கனிமொழி மீதான வழக்கு விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். கனிமொழியிடம் விசாரணை முடிந்து விட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

தொலைத் தொடர்புத்துறையில் நடந்ததாக கூறப்படும் இந்த மிகப் பெரிய ஊழலால், அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்ட அளவை சரியாக குறிப்பிட வேண்டும்.

அப்போது கனிமொழியின் வக்கீல் குறுக்கிட்டு ஏதோ கூறினார். இதையடுத்து அவருக்குப் பதிலளித்த நீதிபதிகள், மனித உரிமை மீறல்களிலேயே மிகவும் மோசமானது ஊழல்தான் என்றனர். இதையடுத்து கனிமொழியின் வழக்கறிஞர் அமைதியானார்.

பின்னர் நீதிபதிகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின், விசாரணை நிலவர அறிக்கையை ஜூன் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஜெர்மனியில் பீன்ஸ் மூலம் பரவிய “இ.கோலி” நோய்: சாவு 35 ஆக உயர்வு.

ஜெர்மனியில் பீன்ஸ் மூலம் பரவிய “இ.கோலி” நோய்: சாவு 35 ஆக உயர்வு

ஜெர்மனியில் “இ.கோலி” பாக்டீரியா மூலம் வயிற்று போக்கு நோய் பரவி வருகிறது. இந்த நோயினால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர்.

சமீபகாலம் வரை இந்த நோய்க்கு 31 பேர் பலியாகி இருந்தனர். தற்போது சாவு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காயில் இருந்து “இ.கோலி” நோய் பரவியதாக கூறப்பட்டது. பின்னர் கோழிக்கறி மூலம் பரவியதாக நிபுணர்கள் கூறினர். தற்போது இந்த நோய் பீன்ஸ் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் “இ.கோலி” பாக்டீரியா கிருமி பாதிக்கப்பட்ட 2 பெண்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சமீபத்தில் அவர்கள் சாப்பிட்ட பீன்ஸ் மூலம் “இ.கோலி” தாக்கியது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பீன்ஸ் வாங்கிய இடம் குறித்து விசாரித்தபோது வடபகுதியில் உள்ள பண்ணையில் விளைவிக்கப்பட்டது தெரிய வந்தது.

உடனே அதிகாரிகள் அந்த பண்ணையை முழுமையாக மூடி “சீல்” வைத்தனர். அங்குள்ள “இ.கோலி” பாக்டீரியாவை முழுமையாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு “இ.கோலி” பாக்டீரியா வந்தது எப்படி என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த பண்ணையில் இருந்து காய்கறி வினியோகம் செய்யப்படும் இடங்களுக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை பரிசோதித்து வருகின்றனர். இந்த தகவலை ஜெர்மனி நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா : லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்செந்தூர்  கோவிலில் வைகாசி விசாக திருவிழா:     லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று லட்சகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகபெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. முருக பெருமானின் அவதார தினமான இன்று சுவாமியை தரிசனம் செய்தால் 12 மாதாந்தமும் சுவாமியை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பின்னர் மாலையில் கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் 11 முறை சுற்றி வந்து முனி குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகமும், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.

வைகாசி விசாக திருவிழாவை காண திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்கள் பச்சை நிறம் மற்றும் காவி நிற உடை அணிந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், மொட்டை போட்டும், அங்க பிரதட்சனம் செய்தும் தனது நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதி கருதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு உடந்தையானவ‌ர் சிவசங்கர் மேனன் - சீமான்.


இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையானவ‌ர் இந்திய அதிகாரி சிவசங்கர் மேனன் எ‌ன்று கூ‌றியு‌ள்ள நாம் தமிழர் கட்சி தலைவ‌ர் சீமான், ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெற எந்த விதத்திலும் இந்திய மத்திய அரசு உதவாது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய இதழாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வெளியான ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு அதிபர் ராஜபக்சவிடம் இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு வலியுறுத்தியது என்று செய்திகளும் வந்துள்ளன.

ஆனால், இலங்கையில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இணையத் தளங்களிலும் வெளியான செய்திகள் வேறு விதமாக உள்ளன. “தமிழர் பிரச்சனைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை காண வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு, அந்த விவகாரத்தில் இந்தியா எந்த வித‌த்திலும் தலையிடாது (it is up to the Sri Lankan Government to find a political solution which it is comfortable with and India is not interfering in the matter) என்று சிவசங்கர் மேனன் கூறியதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

“தமிழர்கள் பிரச்சனைக்கு வேகமான தீர்வு வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், தங்களுக்கு உகந்த ஒரு தீர்வை இலங்கை அரசுதான் உருவாக்க வேண்டும்” என்றும் சிவசங்கர் மேனன் விளக்கியுள்ளார் என்று கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.

‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை அரசு தனக்கு உகந்த வகையில் முடிவெடுக்கக் கூடியது’ என்று இந்திய அரசு கருதுமானால், அப்பிரச்சனையில் ‘எந்த விதத்திலும் இந்தியா தலையிடாது’ என்பதுதான் அதன் நிலையானால், பிறகு “ஒரு அரசியல் ஏற்பாட்டை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறுவதன் பொருள் என்ன? சிவசங்கர் மேனனின் வார்த்தைகளில் உண்மையான, நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அக்கறை பிரதிபலிக்கவில்லையே?

இதுமட்டுமல்ல, இலங்கை நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் அரசமைப்பிற்கு முரணானது என்று தூக்கி எறியப்பட்ட 13வது திருத்தம் பற்றி சிவசங்கர் மேனன் பேசியுள்ளார். “13வது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைத் தமிழர்களுக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தினீர்களா?” என்று வினாவிற்கு, “13வது அரசமைப்புத் திருத்ததின் அடிப்படையில் தீர்வை உருவாக்குவதாக இலங்கை அரசே கூறியுள்ளது” என்று கூறுகிறார். இது இல்லாத ஊருக்கு வழிகாட்டும் அயோக்கியத்தனம் அல்லவா?

ஈழத் தமிழர் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு இந்தியா ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கோரும் இலங்கை தமிழர் கட்சிகள், அதன் இரட்டை முகத்தை சி்வசங்கர் மேனனின் வார்த்தைகளில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, தமிழக சட்டப் பேரவையில் இலங்கை அரசிற்கு எதிரான போர்க் குற்றம், பொருளாதாரத் தடை ஆகியன குறித்து ராஜபக்சவுடன் விவாதிக்கவில்லை என்றும், தங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் மத்திய அரசோடு மட்டுமே உறவு கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசு கூறியதாக சிஙசங்கர் மேனன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஆனால் இன்று காலை வெளியான ஆங்கில நாளிதழில் அதன் கொழும்பு பேச்சாளர் விடுத்துள்ள செய்தியில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது, அதன் சட்ட ரீதியான அடிப்படை குறித்து இலங்கை அரசு கேள்வி எழுப்பியது” என்றும், ஆனால் அதற்கு இந்தியக் குழு என்ன பதில் தந்தது என்பதை சி்வசங்கர் மேனன் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கைப் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது இந்தியாவின் நிலைப்பாடு என்று கேட்டதற்கு, “ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனத்திற்கு உட்படுத்த இந்தியா விரும்பவில்லை” என்று பதிலளித்துள்ளார்.

இது மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசு இந்தியா காப்பாற்றும் என்ற நேரடியான பதிலாகும். மேலும், இலங்கைப் போரின் இறுதிகட்டத்தில் 40,000 பேர் வரை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.அமைப்புகளும், மனித உரிமைக் குழுக்களும் குற்ற‌ம்சாற்றுகின்றனவே, அது குறித்து என்ன கூறுகிறீர்கள் என்ற வினாவிற்கு, “அப்படிப்பட்ட தகவல்களில் உண்மை உள்ளதா என்பதை கேள்விக்கு உட்படுத்தலாம்” என்று சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்காலிலும், வட்டுவாகலிலும் நடந்த போரில் பத்தாயிரம் முதல் நாற்பதாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ஐ.நா.வின் கொழும்புத் தூதரக பேச்சாளராக இருந்த கார்டன் வீஸ் போன்ற நேர்மையான அதிகாரிகள் கூறியிருந்தனர். பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்த ஐ.நா.நிபுணர் குழு பல பத்தாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

ஆனால் இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் அப்படிப்பட்ட தகவல்கள் கேள்விக்கு உட்படுத்தக்கூடியவை என்று கூறியதிலிருந்து, தமிழினப் படுகொலை பற்றிய உண்மையை இந்தியா புதைக்க முயற்சிப்பதும், தன்னை காப்பாற்றிக்கொள்ள அது இலங்கை அரசின் பக்கமே நிற்கும் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.

தன்னைச் சந்தித்துப் பேசிவிட்டு கொழும்பு சென்ற சிவசங்கர் மேனன் எப்படிப்பட்ட நபர் என்பதை அவர் வெளிப்பட்டுத்திய வார்த்தைகளில் இருந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையான இந்திய அதிகாரி சிவசங்கர் மேனன் என்பதையும், ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெற எந்த விதத்திலும் இந்திய மத்திய அரசு உதவாது என்பதையும், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்னெடுக்க மத்திய அரசு ஒருபோதும் முன்வராது என்பதையும் தமிழக முதலமை‌ச்சரும், தமிழர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” எ‌ன்று ‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை.


இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக இந்தியா தெரிவித்த யோசனைகளை இலங்கை நிராகரித்துவிட்டது என அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலம் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

இதனிடையே, இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பணியை நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பது என அதிபர் ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு அதிபர் ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்துப் பேசியது. இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு காணுமாறு இந்தியா சார்பில் அப்போது வலியுறுத்தப்பட்டது.

இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டே 13-வது அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஈழத் தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது என்று சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன் கூறினார்.

ஆனால், இந்தியக் குழுவினர் சனிக்கிழமை மாலை இந்தியா திரும்பிய பிறகு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை மாகாண அரசுகளுக்கு விட்டுத் தர முடியாது என்று இந்தியக் குழுவினரிடம், இலங்கை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

காவல்துறை மற்றும் நிலம் மீதான அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது, இந்தியா அளித்த யோசனைக்கு எதிராக அமைந்துள்ளது. இது இரு நாட்டு அரசியல் தலைமைக்கு இடையே நெருடலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ""சண்டே டைம்ஸ்'' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் ராஜபட்ச மற்றும் இந்தியக் குழுவினருடனான பேச்சு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்த் இடம்பெற்றிருந்தார்.

மாகாணக் கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு ராஜபட்ச கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கெனவே மாகாணக் கவுன்சில்கள் அதிகாரமின்றி செயலற்று உள்ளன.

மத்திய மாகாணக் கவுன்சில் கூட்டு அதிகாரம் வழங்குவதற்கு தமது அரசு தயாராக உள்ளதாக இந்தியக் குழுவிடம் அதிபர் ராஜபட்ச தெரிவித்ததாகத் தெரிகிறது.

தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுவதால் இவ்விரு பகுதிகளிலும் நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ராஜபட்ச அப்போது சுட்டிக் காட்டியதாகவும் ""டைம்ஸ்'' தெரிவிக்கிறது.

ஆனால் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக அரசியல் சாசன திருத்த சட்டத்தை இலங்கை அமல்படுத்தும் என்று நம்புவதாக சிவசங்கர் மேனன் குறிப்பிட்டிருந்தார். சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்பிரச்னைக்கு அரசியல் மூலமான தீர்வுதான் சிறந்ததாக இருக்கும் என்று இந்தியக் குழுவினர் வலியுறுத்தியதாக மேனன் குறிப்பிட்டார்.

கடந்த மாதம், இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா சற்று கடுமையாக குறிப்பிட்டிருந்தது. அத்துடன் அங்கு நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் யோசனையை, இந்தியக் குழு தில்லி திரும்புவதற்குள்ளாகவே இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில் இலங்கை விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை செல்ல பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். இவரது பயணம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்த வகையில் தீர்வாக அமையும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எனது நற்பெயரை கெடுக்க காங்கிரஸ் சதி சோனியாவுக்கு ஹசாரே கடிதம்.


பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் முகமூடி என்று கூறி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் சதி செய்வதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

அவர்கள் கூறும் பொய்களை நிரூபிக்கத் தயாரா என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்று பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது பொதுமக்கள் அளித்த ஆதரைவைப்போல, வருங்காலத்தில் எனக்கு அவர்கள் ஆதரவளித்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் சதி இது.

பொறுப்புமிக்க பதவியில் உள்ள உங்கள் கட்சித் தலைவர்கள் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இருந்தால், அதை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்கட்டும்.

பதவியில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொய்க்குற்றச்சாட்டுகளைக் கூறி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

எனது 73 ஆண்டுகால வாழ்க்கையில், எந்தக் கட்சியிடனும், அமைப்புடனும் எதற்காகவும் கூட்டு சேர்ந்ததில்லை. ஏனென்றால் அனைத்து இடங்களிலுமே ஊழல் நிறைந்துள்ளது என்றார் அவர்.

மேலும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகையில், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உண்மையானால், நரேந்திர மோடியின் அரசை குறைகூறியிருப்பேனா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதவாத அமைப்புகள் எதுவும் பங்கேற்காவிட்டால் தான் ராம்தேவின் போராட்டத்தில் பங்கேற்பேன் என்று ஏற்கெனவே நான் தெளிவுபடுத்தியிருந்தேன்.

அதேபோல் ஜந்தர் மந்தரில் நான் மேற்கொண்ட போராட்டத்தில் எந்தக் கட்சியும் பங்கேற்கவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள், தாங்களும் அறிவீர்கள். அவ்வாறு இருக்கும்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது முறையா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆகஸ்ட் 16-ம் தேதி லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். இதற்காக எனது வாழ்வை தியாகம் செய்யவும் தயாராகி விட்டேன்.

சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், எங்கள் குழுவினர் மீதான நம்பகத்தன்மையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே கூறப்படுபவை.

அப்படித்தான் அரவிந்த் கேஜ்ரிவால் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அவர் முறைகேடாக சொத்து சேர்த்துள்ளார் என்பதை யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இனக் கொலை செய்த ராஜபட்சே குற்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு : வைகோ.


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் போர்க்குற்றவாளி இல்லை. இனக் கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கும் உண்டு. அதனுடன் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தவர்களுக்கும் உண்டு. இந்திராகாந்தி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டவர். ஆனால் சோனியாகாந்தி அப்படிப்பட்டவராக இல்லை. சிங்களர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, விமானப் பாதைகள் அமைத்துக் கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் ராஜபட்சேவைச் சந்தித்து தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க வலியுறுத்தி பேசியதாகச் சொல்லப்படுகிறது. ராஜபட்சே ஒரு நாளும் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். சிவசங்கரமேனனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும் இலங்கைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. யார் சென்றாலும் ராஜபட்சேவிடமிருந்து தமிழர்களுக்கு உரிய அதிகாரத்தை எதிர்பார்க்க முடியாது.

இலங்கையுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் :

பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்சேவை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே அதை வரவேற்று அறிக்கை விட்டேன்.

இப்போது முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். டெல்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.

அண்மையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து, இலங்கைக்கு மின்சாரம் வழங்கல், ரயில் பாதை அமைத்தல் போன்றவை தொடர்பாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.

இதனால் இலங்கையில் பொருளாதாரம்தான் வளரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனி ஈழம் அமைவதற்கு, ஐ.நா. மன்றம் மூலம் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது, இப்போது இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இப்படி வாக்களிக்க வைத்தால் தமிழர்களின் ஒற்றுமை புலப்படும். உரிய அதிகாரத்துடன் கூடிய தனி ஈழம் அமைவதற்கும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு வைகோ பேசினார்.

உண்ணாவிரதப் புரட்சிகளும் ஷர்மிளா சானுவும் !


ஜனநாயக ஆட்சியதிகாரத்தில் ஆயுதமேந்திப் போராடும் போராட்டங்களைவிட உண்ணாவிரதப் போராட்டங்களே அரசுக்கு எதிரான வீரியமான போராட்டமாக இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சத்யாகிரகப் போராட்டங்களே வெற்றியைத் தரும் என்றதொரு மாயையும் மக்களிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை நிலை என்ன?

அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி! அதே சமயம் வெள்ளையும் சொள்ளையுமாக மேல் தட்டினரிடையே வலம் வரும் கோடிகளுக்கு அதிபதிகளானோர் வாயைத் திறந்தாலே அரசுகள் நடுங்குகின்றன. டாட்டாக்களும் அம்பானி, பிர்லாக்களும்தான் உண்மையில் நாட்டை ஆளுகின்றனர் என்ற கம்யூனிஸ்ட்டுகளின் நீண்டக்கால குற்றச்சாட்டுகளை நினைவில் நிறுத்துவது அவசியம்.

இதற்கான சமீபத்திய மிகப் பெரிய உதாரணங்களாக ஊழலுக்கு எதிராக திடீரென குரல் எழுப்பிய, தம் ட்ரஸ்ட் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ள அன்னா ஹஸாரேவும் 1200 கோடிக்கும் மேலாக சொத்துக்களையுடைய நட்சத்திர உண்ணாவிரதப் போராட்ட நாயகனான பாபா ராம் தேவும் விளங்குகின்றனர்.

ஊழலுக்கு எதிராக இவர்கள் களம் கண்ட ஒரு வார காலத்துக்குள் நாட்டில் நடக்கும் அமளித்துமளி என்ன! மத்திய அமைச்சர்களே வரிசையில் நின்று இவர்களிடம் சமாதானம் பேசுவதென்ன! அவர்களின் முன்னும் பின்னும் தொலைக்காட்சி ஊடகங்களின் நூற்றுக்கணக்கான மின்னும் கேமிராக்களும் மைக்குகளும் வலம் வருவதென்ன! உண்ணாவிரதப் பந்தலில் அமரும் முன்னரே அவர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டதாக அரசுகள் அறிவிப்பதென்ன!

இவையெல்லாம், சத்யாகிரகப் போராட்டங்களில் ஒன்றான உண்ணாவிரதப் போராட்டத்திற்குரிய சக்தி என்றும் அதற்கு அரசுகள் என்றுமே கதிகலங்கி உடனடி நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பும் மக்களின் காதுகளில் இந்த ஊடகங்களும் அரசுகளும் நன்றாக பூச்சூடுகின்றன என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஏழை மற்றும் வலிமையற்றோரின் சொல் என்றுமே அம்பலமேறியதில்லை என்பதே உண்மை! இல்லையேல் கடந்த 11 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக, அப்பாவி மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவை இந்த அரசு கண்டுகொள்ளாதது ஏன்? மின்னும் தொலைக்காட்சி கேமராக்கள் அவரைச் சுற்றி வலம் வராதது ஏன்? ஹஸாரேயும் ராம் தேவும் உண்ணா நோன்பு துவங்குவதாக அறிவித்த 24 மணி நேரத்துக்குள்ளேயே நாட்டின் மத்திய தர வர்க்கத்தில் பெரும்பாலோருக்கு மிகப் பரிச்சயமானோராக அவர்கள் மாறிவிட்ட நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவைக் குறித்து எத்தனை சதவீதம் மக்களுக்குத் தெரியும்?

தெரியாதோர் இப்போது தெரிந்து கொள்வதற்காக ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த தகவல் இதோ:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் (AFSPA) அமல்படுத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இச்சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா சானு என்ற சமூக சேவகி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

மணிப்பூரின் சில பகுதிகளில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தின்கீழ், சந்தேகப்படும் எவரையும் எவ்வித விசாரணையோ ஆதாரமோ இன்றிச் சுட்டுப் பிடிக்கவோ அல்லது கைது செய்து சிறையில் அடைக்கவோ முடியும். இதனால் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள்கூட தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆங்கிலேயனின் அடக்குமுறை ஆட்சியினைவிடவும் கேவலமான அடக்குமுறை கொண்ட இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரியே ஐரோன் ஷர்மிளா கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

குளுகுளு ஏசி, மினரல் வாட்டர், விலையுயர்ந்த கம்பளம், நூற்றுக்கணக்கான மின் விசிறிகள் முதலான சர்வ வசதிகளும் கொண்ட ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன்கூடிய பந்தலில் உண்ணாவிரதமிருந்த ராம்தேவ், தற்போது ஊடகங்களுக்கு நன்றாக தீனிபோட்டு வருவதால் பிரதமர் முதல் காபினட் அமைச்சர்கள்வரை அவர்மீது அக்கரை செலுத்தி, அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.


அன்னாஹசாரே என்ற காந்தியவாதிக்கு இணையாக தன்னைக் காட்டிக்கொண்டு உள்ள, ஆயிரத்தின் மடங்கு காசை வீசுவோருக்கு யோகா சொல்லிக்கொடுக்கும் ராம்தேவின் ஓரிரு நாட்கள் உண்ணாவிரதம் அரசியல் மட்டங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கருப்புப் பணத்திற்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் பாபா ராம்தேவ், முறையற்ற வகையில் திரட்டிய சொத்துக்களின் மதிப்பு ரூ.1200 கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

விவசாயிகளின் நிலத்தையே அபகரித்ததாக ஆதாரத்துடன் கூடிய வழக்கும் இவரின் நிறுவனத்திலேயே ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற பிரச்சனையும் ஏற்கெனவே நிலுவையிலிருக்கும் நிலையில்தான் ஊழலுக்கு எதிராக இக்கதாநாயகன் களமிறங்கியுள்ளது, நகைப்பின் உச்சக்கட்டம்!

வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கருப்புப்பணத்தை தேசிய உடமையாக அறிவிக்க வேண்டும் என்று முழங்கும் ராம்தேவுக்கு வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. ரூ.500, ரூ.1000 காகித நாணயங்களைத் தடைசெய்யக்கோரும் ராம்தேவ் சாதாரண யோகா வகுப்புக்கு வசூலிக்கும் குறைந்த நுழைவுக் கட்டணமே ரூ.1000. அனைத்து தொழிலாளர்களுக்கும் சமச்சீரான ஊதியம் வழங்கவேண்டுமென கோரும் இக்கதாநாயகனின் நிறுவனத்தில், முறையாக ஊதியம் வழங்காததற்காகவும் ஊதிய உயர்வுக்காகவும் போராடிய தொழிலாளர்களின் வேலைக்குக் கல்தா! என்னே ஒரு சமூக உணர்வு இக்கதாநாயகனுக்கு!

ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்ட மசோதாவை நடைமுறைப் படுத்தக்கோரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பணபலம், ஆட்பலம், அதிகார ஆதரவுடன் உண்ணாவிரதப் போராட்ட கதாநாயகர்களாக வலம் வரும் இந்த உத்தமப் புருசர்களுக்கு(!) இடையில், கடந்த 11 ஆண்டுகளாக பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் மூலமாகவும் டியூப் மூலமாகவும் உணவு உட்செலுத்தப்பட்டு, தன் போராட்டத்தை மழுங்கடித்து இல்லாமலாக்க முயற்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக சாதாரண ஒரு பெண் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விடிவு கிடைக்குமா?

இவரின் போராட்டம் கடந்த 11 ஆண்டுகளில் உலகில் பல தளங்களில் எதிரொலித்ததன் விளைவாக, கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் 5 நபர்கள் கொண்ட கமிசனை மத்திய அரசு அமைத்தது. இந்தக் கமிட்டி, ஷர்மிளா சானுவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக, "குறிப்பிட்ட சட்டத்தில் வரம்புமீறல்கள் நடந்துள்ளதாகவும் அச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்" என அறிக்கை சமர்ப்பித்தது.

எப்போதும் போல், எல்லா கமிசன்களையும் போல் இக்கமிசன் அறிக்கையினையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, கார்ப்பரேட் போராட்டக்காரர்களான ராம்தேவ்களின் பின்னால் அரசியல்வாதிகள் சுற்றி வருகின்ற அயோக்கியத்தனம் ஊடகக் காமிராக்களின் ஆசியுடன் சிறப்பாக இங்கு அரங்கேறுகிறது.

அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) கார்ப்பரேட் சாமியார் ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) அமைக்கத் தோன்றாத கமிசன் ஷர்மிளாவின் 11 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் போடப்பட்டதன் மர்மம் என்ன?

விடை மிகத் தெளிவு!

ஹஸாரேயும் ராம் தேவும் கையிலெடுத்தது, நடுத்தர-ஏழை மக்களிடம் அரசின் இமேஜை நிமிடத்தில் தகர்க்க வைக்கும் ஊழல் விஷயம். இவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டால், அரசியல்வாதிகளின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும். அதற்கு ஒப்பவே, ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இவர்களின் போராட்டத்தை மிக வேகமாக கொண்டு சேர்த்தன.

ஆனால், ஷர்மிளாவின் போராட்ட விஷயம் ஒரு குறிப்பிட்டப் பகுதி மக்களுக்கு எதிரான அடக்குமுறை, அட்டூழியத்திற்கு எதிரானதாகும். இது எவ்வகையிலும் இந்தியாவின் பிற மாநில மக்களைப் பாதிக்கப்போவதில்லை. அவ்விஷயத்தை இந்த ஊடகங்கள் கையிலெடுத்தால், அது எந்த அளவுக்கு மக்களிடம் விலைபோகும் என்பது கேள்விக்குறியே!

இதனை உணர்ந்ததாலேயே ஷர்மிளாவின் 11 ஆண்டு போராட்டத்திற்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை இந்தக் கார்ப்பரேட் போராட்டக்காரர்களுக்கு ஊடகங்களும் கொடுக்கின்றன. அதற்கே இந்த அரசுகளும் செவிசாய்க்கின்றன. எல்லாம் வியாபார மயம்!

அடக்குமுறை சட்டங்கள் மூலம் தினசரி வாழ்வு நசுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இந்த கார்ப்பரேட் சாமியார்களும் காந்தியவியாதிகளும் குரல் கொடுத்துப் பார்க்கட்டுமே பார்க்கலாம்!

இன்றைய காலத்தில் வீடுதோறும் உட்புகுந்துள்ள இணைய வசதியிலுள்ள சமூக தளங்களின் மூலம் தம் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கவும் நாட்டு விசேசம் நிமிடங்களில் கைகளில் வந்துசேரும் அளவுக்கு நிலைமை முன்னேறியுள்ள நிலையில், ஊழல் மற்றும் முறைகேட்டுப் பெருச்சாளிகளின் இந்த உண்ணாவிரத நாடகங்களுக்கு மத்தியில் அதற்குக் கூட்டு நிற்கும் ஊடக பாரபட்சத்திற்கு மத்தியில் 11 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை முதலீடாகக் கொடுத்து போராடி வரும் ஷர்மிளாவின் உண்ணா விரதப்போராட்டம் இனிமேலாவது சமூகத் தளங்களில் ஒலிக்கட்டும்!

ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்ணாவிரதம் மற்றும் அமைதியான போராட்டங்களின் மீது இப்போதும் மதிப்பும் மரியாதையும் இருந்தால், மணிப்பூரின் இரும்புப் பெண் மாண்புமிகு ஐரோன் ஷர்மிளா சானுவின் நியாயமான கோரிக்கைக்கும் கொஞ்சம் செவி சாய்த்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

inneram.com

இலங்கைக்கு இந்தியா கொடுக்கும் ராணுவப் பயிற்சி ! தமிழக அரசியலுக்குள் புயலடிக்குமா?


இலங்கை கடற்படையினருக்கு இந்திய சிறப்புப் பயிற்சிகளைக் கொடுக்கவுள்ளது. இதற்காக இலங்கை கடற்படையின் முதலாவது பாட்ஜ், மும்பை சென்று இறங்கியுள்ளது. பயிற்சிக்காக இலங்கை கடற்படையைச் சேர்ந்த 42 பேர் இந்தியா சென்று இறங்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை யுத்தம் புரிந்த காலத்தில், இலங்கை ராணுவத்தின் சில பிரிவினருக்கு இந்தியா பயிற்சிகள் கொடுத்த செய்தி வெளியாகி, இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது புலிகளுடனான யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இந்தப் பயிற்சி இந்தியாவில் கொடுக்கப்படுகின்றன.

இந்தியக் கடற்படையின் செய்திக் குறிப்பு ஒன்றில், “தீவிரவாதம், மற்றும் கடற் கொள்ளைகளுக்கு எதிரான சிறப்புப் பயிற்சி” என இந்தப் பயிற்சி குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை மற்றும், இந்திய எல்லையோரக் காவல்படை அதிகாரிகள், இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் கடந்த செவ்வாய்க் கிழமை ஒரு பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தனர். அந்தப் பேச்சுவார்த்தை, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் நடைபெற்றிருந்தது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்திய அதிகாரிகள், இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் இலங்கை கடற்படையின் கப்பலுக்கு வந்து சேர்ந்தனர். இந்த ஹெலிகாப்டர், உச்சிப்புளியிலுள்ள இந்திய ராணுவத் தளத்திலிருந்து புறப்பட்டு. இலங்கை கடற்பரப்புக்கு வந்திருந்தது.

இன்றைய நிலையில், இலங்கை கடற்பரப்பில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏதுமில்லை. ஆனால், இந்தியக் கடற்பரப்பில் இன்னமும் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாத அமைப்பினர், இந்தியாவின் கடல் எல்லைகளின் ஊடாகவும் ஊடுருவுகின்றனர் என இந்தியா குற்றம்சாட்டி வருகின்றது.

ஆனால், இந்த கடல்வழி ஊடுருவல்கள் எல்லாமே, இந்தியாவின் வடபகுதிக் கடலோரமாகவே நடைபெறுகின்றன. இந்தியாவின் தென்பகுதிக் கடலோரமாகவே இலங்கை இருக்கின்றது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயலும் தீவிரவாத அமைப்பினர் யாரும் இந்தியாவின் தென்பகுதிக் கடற்பரப்புக்கு வருவது சாத்தியமில்லை.

இங்கு குறிப்பிடப்படும் அடுத்த காரணம், கடற் கொள்ளையரைக் கட்டுப்படுத்துவது. சோமாலிக் கடற்பரப்பிலேயே அவர்களது நடமாட்டம் அதிகம். ஆனால், அவர்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் நடமாடுவது உண்டு.

இலங்கை கடற்படையினர் இந்தவாரம் மும்பை விமான நிலையத்தில் போய் இறங்கியபோது எடுக்கப்பட்ட போட்டோ.

இந்த விசயத்தில் வேறு ஒரு கதையும் இருக்கின்றது. சோமாலிக் கடற்கொள்ளையர் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நடமாடும்போது, அவர்களது கப்பலுக்குத் தேவையான எரிபொருள் இலங்கை கடற்பரப்பில் வைத்தே சப்ளை செய்யப்படுகின்றது என்பதே அந்தக் கதை.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி, “கடற்கொள்ளையரைப் பொறுத்தவரை, எமது கடற்பகுதிகள் முன்புபோல பாதுகாப்பானவை அல்ல. இந்து சமுத்திரக் கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையருக்கு உதவி செய்யும் சில சக்திகள் இருப்பதை நாம் அறிவோம்” என்று கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ள ‘சக்திகள்’ இலங்கை கடற்பரப்பில் வைத்தே உதவுகின்றன என்பதே இந்தியாவின் ஊகம்!

இந்தவாரம் மும்பை சென்று இறங்கியுள்ள இலங்கை கடற்படையின் உறுப்பினர் ஒருவர், “இந்தியக் கடற்படையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம்” என்று தெரிவித்துள்ளார். “இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஜாயின்ட் ஆபரேஷன்கள் சிலவற்றை நாம் மேற்கொள்ளவுள்ளோம்” எனவும் தெரிவித்த அவர், தனது பெயர் வெளியாவதை விரும்பவில்லை.

தமிழகத்தில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, “இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இந்திய மத்திய அரசு கொண்டுவர வேண்டும்” என்று கூறியுள்ள நேரத்தில், இலங்கை கடற்படையினர் சிறப்புப் பயிற்சிக்காக இந்தியா சென்று இறங்கியுள்ளனர்.

இந்த விசயம், தமிழக அரசியலை இதுவரை எட்டவில்லை. கொஞ்சம் பொறுங்கள், அடுத்தடுத்த தினங்களில் தமிழக அரசியலுக்குள் வந்துவிடும்!

சீனாவில் வெள்ளம் : 90 பேர் சாவு - 1,27 லட்சம் பேர் இடம் பெயர்வு.


சீனாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 90 பேர் இறந்தனர். 1.27 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

சீனாவின் 4 மாகாணங்கள் அங்கு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த வெள்ளத்துக்கு 50 பேர் பலியாகியுள்ளனர். 1,27,000 பேர் இடம்பெயர்ந்து உள்ளனர். கடந்த 200 வருடங்களில் இல்லாத அளவாக 300 மி.மீ அளவுக்கு மழை பெய்ததால் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மின்சாரம், தொலைபேசித் தொடர்புகள் வெள்ளத்தினால் துண்டிக்கப் பட்டுள்ளன. கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாயின.ஆறுகளின் கரைகள் உடைந்து சுற்றுப்புறப் பகுதிகள் மூழ்கியுள்ளன. போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை 25 பேர் இறந்தனர். ஸியானிங் நகரத்தின் டாங்செங் பகுதியில் 2 மீட்டர் ஆழத்துக்கு வெள்ளம் சூழ்ந்து உள்ளதால், நகரமே நீரில் மூழ்கியுள்ளது. ஹுனான் மாகாணத்தில் 19 பேர் இறந்தனர், பின்னர் இந்த இறப்பு எண்ணிக்கை கூடி 90 ஆனது.

ஜியாங்ஸி மாகாணத்தில் மட்டும் 29,000 பேருக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். குயிஷூ மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாகாணங்களும் முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்டவையாகும். இப்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.