Monday, June 13, 2011

காவல்நிலையத்தில் இருந்து 7 பேரை மீட்டுச் சென்ற அமைச்சர், எம்எல்ஏ !


செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் சென்னையில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரில் வந்து, அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் 12.06.2011 அன்று இரவு கொடி, தோரணம் மற்றும் வரவேற்பு தட்டிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தை முன்னிட்டு அந்த ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சிலோன் ஹோட்டலில் அமர்ந்து உணவு அருந்துபோது, விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு அப்பகுதியில் சென்றுள்ளார். ஹோட்டலில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அவர், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அந்த சமயத்தில் அதிமுகவினருக்கும், தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அதிமுகவினரை துணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் அதிமுக பகுதி செயலாளர் மாறன், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட 7 பேரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு துணை ஆணையர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

அதிமுகவினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட தகவல் அமைச்சர் செந்தமிழன், அதிமுக எம்எல்ஏ வளர்மதி ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் அதிமுகவினருடன் காவல்நிலையத்திற்கு சென்று எங்கள் கட்சிக்காரர்களை ஏன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொன்னதாக தெரிகிறது.

காவல்நிலையத்திற்கு அதிமுகவினர் அழைத்துவரப்பட்டதற்கான காரணம் தெரிவித்தும், அதனை அமைச்சர் செந்தமிழனும், எம்எல்ஏ வளர்மதியும் கேட்க மறுத்துவிட்டதாகவும், காவல்நிலையத்தில் உள்ள அதிமுகவினரை விடுவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீசார் வேறுவழியின்றி அதிமுகவினர் 7 பேரையும் விடுவித்துவிட்டனர்.

இந்தநிலையில் மாறன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் தங்களை தாக்கிய தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறைனர், புகார் பெற்றுக்கொண்டதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர். இதனால் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவினர் யாரும் காவல்நிலையத்திற்கு சென்று யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதையும் மீறி அமைச்சர் செந்தமிழன், எம்எல்ஏ வளர்மதி உள்ளிட்டோர் அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்றிருப்பதால், அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை இருக்குமா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments: