Thursday, July 14, 2011

பொறியியல் சேர்க்கையில் மாணவர்களின் 2ஆவது விருப்பம் - மெக்கானிக்கல் பிரிவு !



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில், முதல் இடமாக மாணவர்கள் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவை தேர்ந்து எடுக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக, போட்டி போட்டுக்கொண்டு மெக்கானிக்கல் பிரிவை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 38 ஆயிரம் இடங்களுக்கு (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவ - மாணவிகளை பி.இ. சேர்த்து வருகிறது.

ஊனமுற்றோர் கலந்தாய்வு, விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு, தொழில்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகியவை முடிந்து விட்டன.

ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கேற்கும் பொது கலந்தாய்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. கடந்த பல வருடங்களாக மாணவ - மாணவிகள் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் - இ.சி.இ. பிரிவை தான் முதலில் விரும்பி எடுக்கிறார்கள்.

கணினி அறிவியல் பிரிவுக்கு கடந்த சில வருடங்களாக அதிக வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதால் மீண்டும் கணினி அறிவியல் பிரிவை எடுப்பதிலும் ஆர்வம் சற்று அதிகரித்துள்ளது.

பல வருடங்களாக மெக்கானிக்கல் பிரிவு 4 அல்லது 5ஆவது இடத்தில்தான் இருந்தது. ஆனால் இந்த வருடம் இ.சி.இ.க்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் பிரிவைதான் விரும்பி எடுக்கிறார்கள்.

ஜூலை 11இன் படி நிலவரப்படி மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 336 இடங்களில் 8 ஆயிரத்து 294 இடங்களை மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்துள்ளனர்.

இதில் இ.சி.இ. பிரிவை 2 ஆயிரத்து 118 பேர்களும், மெக்கானிக்கல் பிரிவை 1387 பேர்களும் எடுத்துள்ளனர். 3ஆவதாக 1271 பேர் கணினி அறிவியல் பிரிவை தேர்ந்து எடுத்துள்ளனர்.

4ஆவதாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவை 909 பேர் எடுத்துள்ளனர். 5ஆவது இடத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளது. அதாவது அந்த பிரிவை 701 பேர் தேர்வு செய்தனர்.

சிவில் பிரிவை 487 பேர்களும், ஆட்டோமொபைல் பிரிவை 99 பேர்களும், ஏரோனாட்டிக்கல் பிரிவை 84 பேர்களும் எடுத்துள்ளனர். தமிழ்வழியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவை ஒரு மாணவரும், தமிழ்வழியில் சிவில் பிரிவை 2 பேரும் எடுத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த வருடம் மாணவ-மாணவிகளிடையே மெக்கானிக்கல் பிரிவை எடுக்கும் மோகம் அதிகரித்துள்ளது.

புற்றுநோயை குணப்படுத்தும் தக்காளி !



நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதனைத் தொடர்ந்து சாப்பிடுபவர் களுக்கு உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்து கிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக் காமல் கட்டுக்குள் இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் எடை குறைப்பு

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் இதற்கான ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட் விச்சுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

தொடர்ந்து தக்காளி சாப்பிட்டதன் மூலம் பசி உணர்வு கட்டுப்பட்டு உணவு எடுத்துக்கொள்வது குறைந்தது. குறைவான உணவின் மூலம் உடல் எடையும் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதன் காரணமாகவே உணவியல் நிபுணர்கள் உடை எடைக் குறைப்பில் தக்காளியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் தக்காளி பயன்படுகிறது.

புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களை அதிக அளவில் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் 50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

இந்த புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதோடு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

லைக்கோபீன்

புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்காளியில் உள்ள லைக்கோபீன் என்ற பொருள்தான் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது. அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் மருத்துவர்களின் ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் ஆபத்து: நிபுணர் எச்சரிக்கை.

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் ஆபத்து:    நிபுணர் எச்சரிக்கை

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாது, உடல் எடை குறையும், நினைவுதிறன் அதிகரிக்கும் என்று ஏற்கனவே மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது ஆபத்து என்று இங்கிலாந்தை சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மர்க்கரட் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்தஅளவுக்கு மட்டுமே குடிக்க வேண்டும். பொதுவாக ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். அந்த அளவுக்கு குடித்தால் போதுமானது. உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கும் அதற்கு தகுந்தார்போல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தேவைக்கு மேல் தண்ணீரை திணிக்கக்கூடாது. அப்படி செய்தால் உடல் உறுப்புகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டி இருக்கும் இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். உடலில் கலோரியை எரிக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் தண்ணீர் தேவைப்படும். அதன் தேவைக்கு ஏற்றார்போல் உடலில் தண்ணீர் இருக்க வேண்டும்.

உடலில்நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி ஏற்படும். எனவே தலைவலி இருந்தால் தண்ணீர் குடிப்பது நல்லது. பாட்டிலில் அடைந்து வைக்கப்படும் தண்ணீர் ஆரோக்கியமானவை அல்ல.

அபூர்வ வெள்ளை நாகம் - படம்.



கோதுமை நாகம், கருநாகம், ராஜநாகம் என நல்லபாம்பில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் அபூர்வவகையான வெள்ளை நாகபாம்பும் உள்ளது. இந்த வகை பாம்பு ஒன்று புதுவையில் பிடிபட்டுள்ளது.

கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரில் ஒரு வீட்டுக்குள் இந்த நாகபாம்பு புகுந்தது. அதை பார்த்து விட்டு வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். பாம்பு பிடிப்பதில் நிபுணரான வனத்துறை ஊழியர் வாழுமுனி விரைந்து சென்று பாம்பை பிடித்தார்.

இது 3.5 அடி நீளம் உள்ளது. புதுவையில் வெள்ளை நாகம் பிடிபடுவது இதுதான் முதல் முறை, தமிழ்நாட்டில் சில இடங்களில் வெள்ளை நாகங்கள் பிடிபட்டுள்ளன.

1998-ம் ஆண்டு கடைசியாக திண்டுக்கள் பகுதியில் ஒரு வெள்ளைநாகம் பிடிபட்டது.

நல்லபாம்பின் தோலில் ஏற்படும் நிறமி மாற்றம் காரணமாகத்தான் வெள்ளை பாம்பு உருவாகுவதாக வனத்துறை ஊழியர் வாழுமுனி தெரிவித்தார்.

இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் உலக செஸ் போட்டி.



இந்தியாவில் முதன்முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலயும்ழினோவ் சந்தித்தார். அப்போது 2012-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டியை சென்னையில் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இதுவரை இந்தியாவில் சதுரங்கப் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 24 பேரில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலக சதுரங்கத்தில் இந்தியா 7-வது இடத்தைப் பெற்றுள்ளது.

2012-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி, தற்போதைய உலக வாகையரான கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபேண்டு ஆகியோரிடையே நடைபெறும்.

இந்தப் போட்டியை 2012-ஆம் ஆண்டு சென்னையில் நடத்திட முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார். உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கான செலவு சுமார் 20 கோடி ரூபாய் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - 21 பேர் பலி - 113 பேர் காயம்.


மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 113க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 60 வரை இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

6.45க்கு முதல் குண்டுவெடித்தது

மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.

மாலை 6.45 மணியளவில் முதல் குண்டுவெடித்தது. ஜவேரி பஜார் பகுதியில், கவ் காலி என்ற இடத்தில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் இருந்த மீட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது.

அடுத்து ஓபரா ஹவுஸில் உள்ள பிரஷாந்த் சேம்பரில் நின்றிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் 3வது குண்டுவெடித்தது. இது சக்தி வாய்ந்த குண்டாகும்.

கடைசியாக 7.04 மணிக்கு தாதர் மேற்குப் பகுதியில், கபூதர்கானா என்ற இடத்தில் நின்றிருந்த ஒரு மாருதி எஸ்டீம் காரில் இந்த குண்டு வெடித்தது.

ஓபரா ஹவுஸில் வெடித்தது சக்தி வாய்ந்தது

மூன்று சம்பவங்களிலும் ஓபரா ஹவுஸில் வெடித்த குண்டுதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இங்குதான் உயிர்ச்சேதமும் அதிகம் ஏற்பட்டுள்ளது.

இந்த 3 சம்பவங்களிலும் 10 பேர் பலியானதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். குண்டுவெடிப்புகளில் 54 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் சற்று முன்னர் பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 20 பேர் இறந்துள்ளதாகவும், 81 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறினார்.

ஆனால், கடைசியாக கிடைத்த தகவல்களின்படி பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

60பேர் வரை பலியானதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை முழுவதும் உஷார் நிலை

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப் புற சாலைகளில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.

4வது முறை குறி வைக்கப்பட்ட ஜவேரி பஜார்:

இன்று குண்டு வெடிப்பு நடந்த ஜவேரி பஜார் பகுதியில் 1999, 2003 மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தொடர் குண்டு வெடிப்பின்போதும் குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 4வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இன்று நடந்த குண்டு வெடிப்புகளில் ஓபரா ஹவுசில் நடந்தது தான் மிகப் பெரிய தாக்குதலாகும். அங்கு தான் மிக அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

தயார் நிலையில் என்எஸ்ஜி கமாண்டோக்கள்

என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி நடவடிக்கைக்குத் தேவையான அளவில் அவர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

என்ஐஏ குழு மும்பை விரைகிறது

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் புலனாய்வுக் குழு டெல்லியிலிருந்து மும்பை விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத தாக்குதல்-உள்துறை அமைச்சகம்

மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், மத்திய உள்துறை செயலாளர் யு.கே.பன்சால், மகாராஷ்டிர மாநில டிஜிபியைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து இந்த சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் மூலம் என்எஸ்ஜி கமாண்டோப் படையினரும், தடயவியல் நிபுணர்களும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

நாடு முழுவதும் உஷார் நிலை

மேலும், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

thatstamil.oneindia.in