Monday, October 31, 2011

மழையால் வீடு இடிவதற்கு முன்பு குரைத்து நான்கு பேரை காப்பாற்றிய நாய்.

கோத்தகிரியில் நாய் ஒன்று 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் சங்கர். நேற்று முன்தினம் தாயும், மகனும் மண் சுவர் கொண்ட குடிசை வீட்டுக்குள் படுத்து தூங்கினர். கடந்த ஒரு வாரமாக கோத்தகரியில் கனமழை பெய்து வருவதால் அந்த குடிசை மழையில் நனைந்து வலுவிழந்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 2 மணியளவில் கன மழை கொட்டித் தீர்த்தது.

அப்போது வெளியே நின்று கொண்டிருந்த சரஸ்வதி வீட்டு நாய் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து குரைத்தது. நாய் ஏன் இப்படி குரைக்கிறது என்று பார்க்க சரஸ்வதியும், அவரது மகனும் வீட்டுக்கு வெளியே வந்தனர். அப்போது வீ்ட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. தக்க நேரத்தில் வெளியே வந்ததால் தாயும், மகனும் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர்.

நாய் குரைத்திருக்காவிட்டால் 2 பேரும் வீட்டின் உள்ளே இருந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும். சரஸ்வதி வீட்டு நாய் குரைத்ததால் தூக்கம் கலைந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெகந்நாதன் மற்றும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது.

நாய் நன்றியுள்ள ஜீவன் என்பது இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

உலகின் 700வது கோடி குழந்தைகள் பிலிப்பைன்ஸிலும், இந்தியாவிலும் பிறந்தது.



உலகின் 700வது கோடி குழந்தை இன்று உ.பி. தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது.

முன்னதாக உலகின் 700வது கோடி குழந்தை லக்னோ அருகே மால் என்ற கிராமத்தில் பிறக்கும், அது பெண் குழந்தை என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தப் பெண் குழந்தை, பெண் சிசுக் கொலைக்கு எதிரான அடையாளமாக விளங்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளது.

மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர். இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பெருமளவில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவைத் தாண்டிய நிலையில் குழந்தை டேனிகா பிறந்தாள்.

குழந்தையின் தாயாரான கேமிலி டலுரா, டேனிகாவை அணைத்தபடி கூறுகையில், இக்குழந்தை மிகவும் அழகாக உள்ளது. எனது மகள்தான் உலகின் 700வது கோடி குழந்தை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார் பூரிப்புடன்.

2.5 கிலோ எடையுடன் உள்ள டேனிகா, டலுரா மற்றும் அவரது கணவர் பிளாரன்ட் கமாச்சோவுக்கு பிறந்த 2வது குழந்தையாகும்.

குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினராம்.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பலரும் கூட குழந்தைக்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளனர். குழந்தையின் எதிர்கால கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்பதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் டேனிகாவின் பெற்றோருக்காக கடை ஒன்றை வைத்துத் தருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது இன்னொரு விசேஷமும் நடந்தது. உலகின் 600வது கோடி குழந்தையான போஸ்னியாவைச் சேர்ந்த லோரிஸ் மா குவரா என்ற 12 வயது சிறுவன் டேனிகா பிறப்பின்போது அந்த மருத்துவமனையில் இருந்தான். இவன் 1999ம் ஆண்டு போஸ்னியாவைச் சேர்ந்த அகதித் தம்பதியருக்குப் பிறந்தவன் ஆவான்.

இதுகுறித்து குவரா கூறுகையில், இந்த அழகான குழந்தையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போலவே ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இவளும் வளர்வாள், எல்லோராலும் நேசிக்கப்படுவாள் என்று நம்புகிறேன் என்றான் சிரித்தபடி.

உ.பியிலும் 700வது கோடி குழந்தை பிறந்தது!

இதற்கிடையே, உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை   திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்: வாழப்பாடியில் பரபரப்பு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 கிராம ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமின்றி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களும் கூட ஒரு ஓட்டுக்கு ரூ.100 முதல் 500 வரை வாக்காளர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

வாழப்பாடி பேரூராட்சி பகுதியையொட்டி, கல்ராயன்மலை கருமந்துறை சாலையில் துக்கியாம்பாளையம் கிராம ஊராட்சி அமைந்துள்ளது. மாரியம் மன்புதூர், மேலூர், துக்கியாம்பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமத்தை உள்ளடக்கிய எஸ்.சி., இன பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு கலைச் செல்வி, ராஜாமணி, ராமாயி, கலைமணி, பழனியம்மாள் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

அதில் மக்கள் நலப்பணியாளர் தனபால் மனைவி கலைச்செல்வி 1089 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியை தழுவிய வேட்பாளர்களில் ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ.100 வீதம் பணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்தும் இரண்டாவது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அந்த வேட்பாளரின் கணவர், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று, எனக்கு யாரும் ஓட்டுபோட வில்லை அதனால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் எனக்கூறி, வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை அதிரடியாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டுக்கு கொடுத்த பணத்தை தோல்வியடைந்த வேட்பாளர் வீடு வீடாக சென்று வசூலித்து வருவதால், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள் பீதியடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி இனி வரும் தேர்தல்களில் எந்த வேட்பாளரிடமும் பணம் வாங்கக்கூடாது எனவும் புலம்பி வருகின்றனர். அச்சம்பவம் துக்கியாம்பாளையம் மட்டுமின்றி வாழப்பாடி வட்டாரம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, October 29, 2011

மண்டூகாசனம், யோக தண்டாசனம், ஏகபாத ராஜ கபோட்டாசனம்.

மண்டூகாசனம்.
மண்டூகாசனம்

செய்முறை:

தொழுகை செய்வது மாதிரி, முழங்கால்களை மடக்கி உட்காரவும். அப்படியே முன்புறமாக குனிந்து படுங்கள். அப்போது உங்களின் அடிவயிறு, மேல் வயிறு, மார்பு, மோவாய் ஆகியவை தரையில் படிந்திருக்கட்டும். இரண்டு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு, முழங்கையை மடக்கி வையுங்கள். அவ்வளவுதான்!

பயன்கள்:Justify Full
சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல், ஜனன உறுப்புகள் நன்கு இயங்கும். கார்ப்பப்பை கோளாறுகள் அகலும். வயிற்று கோளாறு, பிருஷ்ட தொடைப்பகுதியின் அதிக சதை குறையும்.


யோக தண்டாசனம்.
யோக தண்டாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலதுகாலை மட்டும் மெதுவாக முன்னோக்கி வளைத்து, வலதுகை அக்குளில் நிலைநிறுத்தவும். அப்போது உங்களின் கைவிரல்களில் சின் முத்திரை இருப்பது அவசியம். இடதுகால் மூட்டில், இடதுகையை வைத்துக்கொள்ளவும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து, ஆசனத்தை இடப்பக்கம் மாற்றி, இதேபோல செய்து முடிக்கவும்.

பயன்கள்:

கால் தசை பிடிப்பு, மூட்டுவலி, கை, கால், தோள்பட்டை, புஜங்களில் வலி நீங்கும். இடுப்பு பிடிப்பு சரியாகும். ஊளை சதை குறையும்.


ஏகபாத ராஜ கபோட்டாசனம்.
ஏகபாத ராஜ கபோட்டாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது முழங்காலை பின்னால் கொண்டுபோய், செங்குத்தாக நிறுத்துங்கள். முதுகை சற்று பின்னால் வளைக்கவும். உங்களின் இடது கை விரல்கள், வலதுகால் கட்டைவிரலை பிடித்தபடி இருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடி இருந்து ஆசனத்தை கலைத்து பழைய நிலைக்கு வரவும். உடனே இடதுகாலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

ஜனன உறுப்புகள் நன்கு இயங்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும். சிறுகுடல், பெருங்குடல் இயக்கம் சீராகும். மலச்சிக்கல் வராது. தொடையில் அதிக சதை போடாது. தோள்பட்டை எலும்புகள் நன்கு இயங்குவதோடு, மார்பும் விரிவடையும்.

Tuesday, October 25, 2011

சத்தமில்லாமல் விருதுகள் வாங்கிக் குவிக்கும் இசைப்புயல். ஏ. ஆர். ரகுமான்.



பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு 127 அவர்ஸ் படத்திற்காக ப்பளிக் சாய்ஸ் விருது கிடைத்துள்ளது

127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காக ஏ. ஆர். ரகுமானின் பெயர் மறுபடியும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு ஆஸ்கர் கிடைக்காமல் போனது. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக ஏ. ஆர். ரகுமானுக்கு பப்ளிக் சாய்ஸ் விருது வழங்கப்பட்டது.

127 அவர்ஸ் படத்திற்காக எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரகுமான் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு.,

2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன.

2009 ஆம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் இசைப்புயல் ரகுமான்.

பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் தமது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று உச்சரித்து, தமிழருக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு கிராமி விருதுகளும் பெற்றுள்ளார்.

2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு உலக சவுண்டு டிராக் அகாடமி விருதினையும் தனதாக்கினார் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது,

தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ,

ஆறு முறை தமிழக திரைப்பட விருது,

13 முறை பிலிம்பேர் விருது,

12 முறை பிலிம்பேர் சவுத் விருது, 9 முறை தொடர்ந்து பெற்றார்.

ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருதுகளையும் பெற்ற ஏ. ஆர். ரகுமான் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார்.

வாழ்க ரகுமான் என்று வாழ்த்துவோம்.

Monday, October 24, 2011

வாய் கிழியப் பேசும் காங்கிரஸின், பலம் - வாயைப் பிளந்தது. - தட்ஸ் தமிழ்.



நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம். காமராஜரோடு காங்கிரஸ் கரையறி விட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் தேர்தல் முடிவு மூலம்.

தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட கரெக்டாக சொல்லி விடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வருவார்கள்.

ஆனால் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகி விட்டது தமிழக காங்கிரஸின் நிலை. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்கத் திராணியில்லாத கட்சியாக கிழிந்த வேட்டி போல காட்சி தருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே கூறலாம். காரணம், திமுக அல்லது அதிமுக என யாருடைய முதுகிலாவது ஏறி, ஓசி சவாரி செய்வதுதான் அந்தக் கட்சிக்கு வசதியானதாக இருந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கதர்ச் சட்டை கசங்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பழக்கப்பட்டவர்கள் காங்கிரஸார் (காங்கிரஸார் என்று இங்கு நாம் கூறுவது தலைவர்களை -தொண்டர்களை அல்ல).

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்று கூறிக் கூறியே வேண்டிய சீட்களைப் பெற்று ஓசி பலத்தில் ஊறுகாய் போட்டு வந்தவர்கள் இவர்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுகவிடம், 2ஜி விவகாரத்தைக் காட்டிக் காட்டியே சீட் கறந்த காங்கிரஸின் பிடிவாதப் பேரத்தைப் பார்த்து மாற்றுக் கட்சியினரும் கூட கொந்தளித்துப் போனார்கள். இப்படி நீ சோறு கொடு, நீ குழம்பு கொடு, நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் கதையாக படு சோம்பேறித்தனமாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் இன்று உள்ளாட்சித் தேர்தலில் தலை முதல் பாதம் வரை படு அடியை வாங்கி பம்மிப் போய்க் கிடக்கிறது.

இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம் என்பதைமக்கள் காட்டி விட்டார்கள். பத்து மாநகராட்சிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட 2வது இடத்தைப் பிடிக்கவில்லை. பல இடங்களில் 3வது இடத்தைக் கூடப் பி்டிக்கவில்லை. மொத்தமே 17 கவுன்சிலர்கள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளனர்.

அதை விடக் கேவலமாக கொடிகாத்த குமரனைத் தந்த திருப்பூரில் ஒரு கவுன்சிலர் கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. இது நிஜமான காங்கிரஸாருக்கு பெரும் வேதனை தரும் செய்தியாகும். காங்கிரஸுக்கென்று ஒரு தொண்டர் வட்டம் உள்ள மதுரையிலும் முட்டைதான். சேலத்திலும் ஒன்றும் இல்லை.

அதே போல 125 நகராட்சிகளில் தேர்தல் நடந்த 124 நகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட தலைவர் பதவியைப் பிடிக்கவில்லை காங்கிரஸ். காங்கிரஸின் பாரம்பரியப் பகுதிகளான ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் கூட அந்தக் கட்சியால் தனித்து வெல்ல முடியாமல் போனது கேவலத்திலும் படு கேவலமாகும்.

சரி பேரூராட்சியிலாவது ஏதாவது பெயருமா என்று பார்த்தால் மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி கிடைத்துள்ளது.

இப்படி எங்குமே காங்கிரஸுக்கு சிறப்பு கிடைக்கவில்லை. மாறாக போன இடங்களில் எல்லாம் மக்களிடமிருந்து பட்டை நாமம்தான் கிடைத்துள்ளது.

வாழ்ந்தால் வாழை மரம் போல வாழ வேண்டும் என்பார்கள். வாழை மரத்தில்தான் அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். ஆனால் காங்கிரஸோ, பார்த்தீனியம் செடி போலத்தான் இத்தனை நாளாக இருந்துள்ளது. அதாவது மற்ற கட்சிகளின் பலத்தைப் பெற்று இது வாழ்ந்து வந்துள்ளது. இந்த கட்சியால் எந்தக் கட்சிக்கும் உண்மையில் லாபம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கூட காங்கிரஸார் உண்மையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதை காங்கிரஸாரே ஒத்துக் கொள்வார்கள்.

இந்தத் தேர்தலின் மூ்லம் திராவிடக் கட்சிகளான திமுகவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி கிடைத்துள்ள முக்கியப் பாடம் என்னவென்றால் -இத்தனை காலமாக, அடிப்படையே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடம் கொடுத்து வி்ட்டோம் என்பதுதான்.

தமிழர்கள் பாடுபட்டபோதெல்லாம், பரிதவித்த போதெல்லாம், துடித்து துவண்டபோதெல்லாம், உயிரை இழந்து உருக்குலைந்து போனபோதெல்லாம் உதவாமல் போனதுதான் காங்கிரஸின் கை. தமிழகத்திலும் கூட தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் காங்கிரஸ் உதவிக்கு வந்ததில்லை. மாறாக தமிழகத்தின் பிரச்சினைகளிலெல்லாம் நழுவிப் போனது அல்லது இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது.

தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினையாகட்டும், வேறு எந்தப் பிரச்சினையாகட்டும் காங்கிரஸ் உதவியது என்பது வரலாற்றிலேயே கிடையாது. கூட்டணி சேர வேண்டும், கூட்டாஞ்சோறு ஆக்கி நாம் மட்டும் நாம் மட்டும் நன்றாக சாப்பிட வேண்டும். இதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

இந்தப் படு தோல்வி இப்படியே நின்று விடக் கூடாது. பொறுப்பான, தமிழகத்திற்கு உதவக் கூடிய தமிழர்களுக்கு உறுதுணையான உண்மையான அரசியல் கட்சியாக காங்கிரஸ் மீண்டும் மாறும் வரை மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

இதுதாம்ப்பா காங்கிரஸ் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருந்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Wednesday, October 12, 2011

ஊர்த்துவ பத்மாசனம், பர்வதாசனம், குப்த பத்மாசனம்.

ஊர்த்துவ பத்மாசனம்.
ஊர்த்துவ பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, பத்மாசன நிலையில் அமரவும். இரண்டு முழங்கால்களையும், மார்பு வரையில் தூக்குங்கள். அப்போது உங்களின் கரங்கள் கும்பிட்டநிலையில், கால் மூட்டுக்களை ஒட்டினாற்போல இருக்கட்டும். அடுத்தபடியாக, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, ஒட்டுமொத்த உடம்பையும் பத்மாசன நிலையில், அப்படியே தூக்கவும்.

பயன்கள்:

தோள்பட்டை வலுப்பெறும். உடல் எடை குறையும். கைவிரல்கள் உறுதியாகும். விரல் நடுக்க நோய் நீங்கும். எழுத்து-தட்டச்சு துறையில் இருக்கும் அத்தனை பேருக்கும், ஊர்த்துவ பத்மாசனம், மகத்தான பலன்களை அள்ளித்தரும்.


பர்வதாசனம்.
பர்வதாசனம்

செய்முறை:

முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரு கைகளையும் அப்படியே தலைக்கு மேல் தூக்கி, கும்பிட்டநிலையில், கால்மூட்டுகளின் பலத்தில், மெல்ல எழுந்திருக்க முயலவும். ஆழ்ந்த சுவாசத்தில் 15 விநாடி இருந்து மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

நுரையீரல்-இதய நோய்கள் அணுகாது. மாரடைப்பு வராது. ரத்தக்குழாய் அடைப்பை தவிர்க்கலாம். ஆஸ்துமா தொந்தரவுகள் நீங்கும். தோள்பட்டைகள் வலிவும், வனப்பும் பெறும்.


குப்த பத்மாசனம்.
குப்த பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, பத்மாசனநிலையில் அமரவும். வலதுகையை முன்புறமாகவும், இடது கையை பின்புறமாகவும் ஊன்றிய நிலையில், இடுப்பை தூக்கி உடலை முன்னே கொண்டு வந்து குப்புறபடுங்கள். முகம் நேராக இருக்குமாறு செய்ய வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் கொண்டு போய் கும்பிட்ட நிலையில் கையை ஒன்றிணைக்கவும். உங்களின் மோவாய், தரையை பார்த்திருக்கட்டும். ஆசனத்தின்போது, சுவாசம் இயல்பாக இருக்கவேண்டியது முக்கியம்.

பயன்கள்:

முதுகு தண்டு வலுப்பெறும். முதுகு வலி, பிடரி வலிக்காரர்களுக்கு `கண்கண்ட' மருந்து, தொந்தியும் குறையும்.

Monday, October 10, 2011

எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு வகுப்பு தொடக்கம் ஒத்திவைப்பு.



சென்னை, அக்.9: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடங்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவு சர்ச்சைக்குள்ளாகி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதையடுத்து இரண்டாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது காலதாமதமாகியுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் (2010-11) சேர்ந்த எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆகஸ்ட்டில் தேர்வு நடைபெற்றது. எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பாடங்களான "அனாடமி', "ஃபிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி' ஆகியவற்றின் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்ச மதிப்பெண் 50 எடுத்தால்தான் தேர்ச்சி என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு புதிதாக நிர்ணயித்தது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த வாரம் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டது. குறைந்தபட்ச மதிப்பெண் காரணமாக பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை, முதலாம் ஆண்டு பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெறாவிட்டால், 2-ம் ஆண்டுக்கு செல்ல முடியாத அளவுக்கு "பிரேக் சிஸ்டம்' நடைமுறையில் உள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு முடிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத பல மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இணையதளத்திலிருந்து நீக்கம்: தேர்வு முடிவு சர்ச்சையானதைத் தொடர்ந்து, இணையதளத்தில் வெளியிட்ட தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் நீக்கி விட்டது. மேலும் தேர்ச்சி பெற்றதை உறுதிப்படுத்தும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களையும் மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் இதுவரை அனுப்பவில்லை.இதனால், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்று 2-ம் ஆண்டுக்குச் செல்லும் மாணவர்கள் யார், தேர்ச்சி பெறாமல் முதலாம் ஆண்டிலேயே தொடரும் மாணவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிருந்தபடி எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு வகுப்புகளை திங்கள்கிழமை (அக்டோபர் 10) தொடங்குவதை ஒத்திவைக்க அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.

நன்றி
தினமணி, 10-10-2011

Sunday, October 9, 2011

மாமியார் கொடுமை : மருமகன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது.



சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். நெசவு தொழிலாளியான இவருக்கும், சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் மீனாட்சிக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த வாரம் சென்னையில் அவரது மனைவி மீனாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்ததும் குணசேகரனும், அவரது தாயாரும் குழந்தையை பார்க்க சென்றனர்.

அப்போது மீனாட்சியின் பெற்றோர் அவர்களை மதிக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையுடன் சேலம் வந்த குணசேகரன் கடந்த 6-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உருக்கமான கடிதம் சிக்கியது

அப்போது குணசேகரனின் எழுதி வைத்திருந்த 13 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில்,’’நான் எட்டாம் வகுப்பு வரை படித்து இருக்கிறேன். தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் டி.டி.பி. கோர்ஸ் படித்து முடித்து இருக்கிறேன்.

இதை தெரிந்துதான் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணம் நடந்த நாளில் இருந்தே என்னிடம், ’உனக்கு அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்து விட்டோம். அதிகமாய் படித்து பணக்கார ஆண் மகனாய் பார்த்து எனது மகளை திருமணம் செய்து இருக்க வேண்டும்’ என்று கூறி எனது மாமியார் என் மனதை காயப்படுத்தினார்.

ஒருநாள் குடும்பத்தகராறு காரணமாக எனது மனைவியை குமாரபாளையத்தில் உள்ள அவரது அக்காள் வாணி வீட்டில் விட்டுவிட்டனர். இதை அறிந்து என் நண்பர் மூலம் எனது மாமனாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர்,

’நான் நினைத்தால் 5 நிமிடத்தில் வரதட்சணை கொடுமை என்ற பெயரில் உன்னையும், உன் குடும்பத்தினரையும் உள்ளே தள்ளி விடுவேன். நீ ஒருத்தியை வைப்பாட்டியாக வைத்து இருக்கிறாய் என்று கூறி வெளியே வரமுடியாதபடி செய்து விடுவேன்’ என்று கூறி மிரட்டினார்.

எனது மனைவியை சந்தித்து பேசியபோது, நீ எனக்கு தேவையில்லை. எனது தாய், தந்தையர்தான் எனக்கு முக்கியம் என்று கூறிவிட்டாள். பின்னர் கர்ப்பிணியான என் மனைவியை சென்னைக்கு அழைத்துச்சென்று விட்டனர். நானும் அங்கு சென்று 5 நாட்கள் தங்கி இருந்தேன்.

அப்போது என் மனைவியின் எதிரிலேயே என்னை ஜாடை, மாடையாய் திட்டினார். மேலும் என் மனைவி இல்லாதபோது, நீ ஊருக்கு போ. இங்கே இருக்க வேண்டாம். குழந்தை பிறந்தால் நாங்களே சொல்கிறோம். நீ இங்கே இருந்தால் என் மகளின் மனதை மாற்றி உன்னோடு அழைத்து சென்று விடுவாய் என்று என் மாமியார் கூறினார். நானும் ஊருக்கு வந்து விட்டேன்.

சென்ற 4-ந் தேதி காலை 8.11 மணிக்கு என் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். எனக்கு மதியம் 3.30 மணிக்கு தகவல் தந்தனர். நானும், என் அம்மாவும் அன்று இரவே சென்னைக்கு சென்றோம்.

என் குழந்தையை பார்த்து நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். இந்த சந்தோஷம் சில நிமிட நேரம்தான். என்னிடம் தனியாக பேசிய மீனாவின் அம்மா, ’குழந்தையை பார்த்துவிட்டு உடனே நீ செல்லவேண்டும். என் பெண்ணிடம் நீ எதுவும் பேசக்கூடாது.

உன் குழந்தை எங்கள் பெண்ணுக்கு தேவையில்லை. அதை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறோம்’ என்றார்.மேலும், என் மனைவிக்கும், எனக்கும் விவாகரத்து வாங்கிவிட்டு அவளுக்கு வேறு திருமணம் செய்ய போவதாக மிரட்டினார்.

நான் என்ன செய்வேன்.ஐயா, நான் ஒரு ஏழை, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மனைவியுடன் வாழ மிகுந்த ஆசை. ஆனால் அவளது தாய், தந்தையர் எங்களை வாழவிட மாட்டேன் என்கிறார்கள். என் மனைவியும் என்னை புரிந்து கொள்ளவில்லை. என்னுடைய இந்த தற்கொலைக்கு முழுக்க, முழுக்க எனது மாமனாரும், மாமியாரும்தான் காரணம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பத்த பத்மாசனம், கர்ப்பாசனம், வாமதேவ ஆசனம்.

பத்த பத்மாசனம்.
பத்த பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு போங்கள். உங்களின் வலது கை, இடது கை கட்டை விரலை பிடித்திருக்கட்டும். இடது கையால், வலது கை கட்டை விரலை பிடியுங்கள். நேராக நிமிர்ந்து உட்காரவும்.

இரண்டு `பிடி'களையும் மெல்ல இறுக்குங்கள். குறைந்தது 15 விநாடிகள் இருந்து பின்பு பழைய நிலைக்கு வரவும். அடுத்தபடியாக, இதே போல, காலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

செரிமான கோளாறு அகலும். நுரையீரல், இதயம் நன்கு இயங்கும். ஆஸ்துமா நோய் தீரும். அகன்ற மார்பு கிட்டும். நுரையீரல்- மார்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும். மார்பு சிறியதாக இருப்பதாக கருதும் பெண்கள் இவ்வாசனத்தை செய்துவந்தால் கவர்ச்சியான மார்பகத்தை பெறலாம். `ஈர்க்கு இடை போகா இளமுலை' என்கிற இலக்கண முறைப்படி வனப்பான, செழிப்பான மார்பகம் உறுதிப்படும்.


கர்ப்பாசனம்.
கர்ப்பாசனம்

செய்முறை:

இடதுதொடை - வலது தொடை இடைவெளியில், முறையே இடது, வலது முழங்கையை செலுத்துங்கள். அப்படியே கைகளை மடக்கி, சற்று குனிந்து காதுகளை தொடுங்கள். இந்த நிலையில் உடல் புட்டபாகத்தின் அடிப்பகுதியை, ஃ எழுத்து போல சமநிலையில் நிறுத்த வேண்டியிருக்கும்.

பயன்கள்:

உடம்பின் அத்தனை நாளமில்லா சுரப்பிகளையும் இயக்குகிற ஆற்றல், கர்ப்பாசனத்துக்கு உண்டு. பிட்யூட்டரி சுரப்பி நன்கு இயங்குவதால் கல்வியறிவு- ஞானத்தை கைவரப்பெறுவீர்கள். சகல நோய்களும் நீங்கும். தீய எண்ணங்கள், கோபம், அதிக காமம் கட்டுப்படுவதோடு, மனசும் பக்கவப்படும்.


வாமதேவ ஆசனம்.
வாமதேவ ஆசனம்

செய்முறை:

வஜ்ராசனநிலையில் அமரவும். இடுப்பை இடப்பக்கமாக கீழே சரிந்து உட்கார்ந்து, மேலிருக்கும் வலதுகாலை, அப்படியே பின்னால் கொண்டு போங்கள். அதாவது, பிருஷ்டபாகம் முழுவதுமாக பின்னால் போகவேண்டும். இடது முழங்காலை தொடையோடு ஒட்டியிருக்குமாறு மடியுங்கள். அடுத்தபடியாக இரண்டு கால் விரல்களையும், கரங்களின் உதவியோடு ஒன்றிணையுங்கள் அடுத்த படியாக, இதுபோல் பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

மூட்டு பிடிப்பு, கால்பாத வலி, குதிகால் வலி மற்றும் முழங்கால் மூட்டு வீக்கம் மறையும். திருமணமான பெண்களுக்கு இடை, தொடையில் அதிக சதை போட்டு பிருஷ்டங்கள் பெரிதாகும். தினந்தோறும் வாமதேவ ஆசனம் செய்துவந்தால், `மெலிய வேண்டிய' அத்தனை உறுப்புகளும் மெலிந்து உடம்பு சிக் அழகோடு திகழும். பருவ பெண்களுக்கு யானையின் துதிக்கை போல, வாளிப்பான கால்கள் அமையும்.

Saturday, October 8, 2011

சென்னை பெண் அதிகாரியை, பெங்களூரில் “லிப்டுக்குள்” படுகொலை செய்த காவலாளி.



பெங்களூர் குமார கிருபா மேற்கு பகுதியில் போலோ கார்டன் எனும் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு 3-வது மாடியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிருஷ்ணன் வசித்து வருகிறார். இவரது மனைவி எஸ். அனுசுயா (43). சென்னையைச் சேர்ந்த இவர், பெங்களூரில் சர்பைன்டைன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அதிதீ (12), ஆர்த்தி (6) என்று 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று கிருஷ்ணன் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு மைசூருக்கு சென்றிருந்தார். வீட்டில் அனுசுயா மட்டும் தனியாக இருந்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் அனுசுயா வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். கீழ் தளத்தில் இருந்து 3-வது மாடிக்கு செல்ல அவர் லிப்டில் ஏறினார். கூடவே அந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அஸ்ரப் அகமது (22)வும் ஏறினான். லிப்ட் 2-வது மாடியை நெருங்கியபோது நடுவழியில் நின்றது. திடீரென லிப்டுக்குள் இருந்து அனுசுயா அலறும் சத்தம் கேட்டது.

பிறகு லிப்ட் 2-வது மாடியில் நின்றது. அனுசுயா அலறல் கேட்டு அருகில் வீடுகளில் இருந்தவர்கள் வெளியில் ஓடிவந்தனர். லிப்டில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட கத்தியுடன் வந்த அஸ்ரப்பை கண்டதும் எல்லோரும் பயந்து ஓடி வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர்.

லிப்டுக்குள் அனுசுயா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தப்படி கிடந்தார். குடியிருப்புவாசிகள் பயந்து ஓடியதால், அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அஸ்ரப், நிதானமாக கீழ் தளத்துக்கு வந்தான். ரத்தக்கறை படிந்த தனது உடையை மாற்றி வேறு சட்டை அணிந்தான். பிறகு 10 நிமிடம் கழித்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டான். அதன் பிறகு வெளியில் வந்த குடியிருப்புவாசிகள் சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

போலீசார் வந்தபோது அனுசுயா லிப்டுக்குள் பிணமாகி கிடந்தார். அவரது கழுத்தை அறுக்க பயன்படுத்தப்பட்ட கத்தி லிப்ட் அருகில் வீசப்பட்டு கிடந்தது.

லிப்டுக்குள் இருந்த கண்ணாடியில் கொலையாளி அஸ்ரப் கை தடயங்கள் பதிவாகி இருந்தன. தடயவியல் நிபுணர்கள் அவற்றை பதிவு செய்தனர். அனுசுயாவை அஸ்ரப், எதற்காக கொலை செய்தான் என்பது தெரியவில்லை. செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் அஸ்ரப் அகமது அந்த குடியிருப்புக்கு சில மாதங்களுக்கு முன்புதான் காவலாளியாக வேலைக்கு சேர்ந்திருந்தான்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அவன் அனைவரிடமும் நம்பிக்கையுடையவனாகவும், கடின உழைப்பாளியாகவும் இருந்ததால் அவனுக்காகவே கீழ் தளத்தில் தனி அறை ஒன்றை குடியிருப்பு சங்கத்தினர் கட்டி கொடுத்திருந்தனர். திடீரென அவன் பெண் அதிகாரியை கழுத்தை அறுத்து கொலை செய்தது, அந்த குடியிருப்பு பெண்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றம்.



சென்னை : எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களின் தேர்வு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆனாடமி, பயோகெமிஸ்ட்ரி, பிசியாலஜி என மூன்று பாடங்கள் உள்ளன.

இந்த மூன்று பாடத்திலும் இரண்டிரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 100 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி அடைந்ததாக கருதப்படுவார்கள்.

இந்த முறையை முற்றிலுமாக மாற்றி, புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஒரு பிரிவில் 44ம், ஒரு பிரிவில் 90ம் எடுத்தால் கூட அந்த மாணவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதிய பல மாணவர்கள் இந்த புதிய முறையால் தோல்வி அடைந்ததாக பதிவு செய்யப்பட்டு இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை.

பழைய தேர்வு முறையையே பின்பற்ற வேண்டும் என்றும், புதிய விதிமுறையை ரத்து செய்து எங்களை இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ கவுன்சில் 14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி
தினமலர், 8-10-2011

எரிகல் பொழிவால் கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம் : ஆய்வில் நிரூபணம்.



சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவாகும் பொழுது அதன் மையத்தில் உருகிய இரும்பு கூழ்கள் அதிகளவில் இணைந்து புவி மையத்தை தோற்றுவித்தன. இரும்புடன் தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்பட பல விலைமதிப்பற்ற தனிமங்களும் மையத்தில் சேர்ந்தன.

தற்பொழுது நமக்கு கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை எவ்வாறு கிடைக்கின்றன என்றால் பூமி தோன்றி பல வருடங்களுக்கு பின்பு 20 பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட எடை கொண்ட எரிகல் ஒன்று பூமியின் மீது மழை போன்று பொழிந்துள்ளது.

அதிலிருந்து தான் இன்றளவும் கிடைத்து கொண்டிருக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல தனிமங்கள் வந்துள்ளன என்ற புவியியலாளர்களின் கூற்றை நிரூபிக்கும் விதமாக பிரிஸ்டல் பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்களான வில்போல்ட் மற்றும் எலியட் ஆகியோர் பூமியைப்பற்றி ஆய்வொன்று மேற்கொண்டனர்.

இதற்கு ஆதாரமாக கிரீன்லாந்தில் கிடைத்த 4 பில்லியன் வருடத்திற்கு முந்தைய பாறை படிவங்களை ஆராய்ந்தனர். அதில், மிக அரிதான தனிமமான டங்ஸ்டனின் பல ஐசோடோப்புகள் கண்டறியப்பட்டன.

அவை தற்பொழுதுள்ள பாறைகளில் கிடைத்த ஐசோடோப்புகளுடன் மிக சிறிய அளவில் அதாவது ஒரு மில்லியனுக்கு 15 பங்கு என்ற அளவில் மட்டுமே வேறுபாட்டை கொண்டிருந்தன. எனவே இந்த ஆய்வானது, புவியியலாளர் களின் கருத்தின்படி, பூமியின் மீது எரிகல் மழையாக பொழிந்த பின்பு தான் தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருள்கள் கிடைக்கின்றன என்பதற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.


தயார் நிலையில் பிஎஸ்எல்வி - சி 18 ராக்கெட் - இஸ்ரோ.

தயார் நிலையில் பிஎஸ்எல்வி-சி 18 ராக்கெட்- இஸ்ரோ

நீர், நில ஆராய்ச்சிக்கான செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி-சி 18 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாராகி வருகிறது. வருகிற அக்டோபர் 12-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படும்.

இறுதிகட்ட சோதனைகள், ஏற்பாடுகள் முடிந்து அக்டோபர் 10 -ந்தேதி ஏவுவதற் கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்குகிறது. இந்த மெகா டிராபிக் செயற்கைகோள் இந்தியா- பிரான்ஸ் நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.

சந்திரனில் கொட்டிக் கிடக்கும் டைட்டேனியம் உலோகம் : பூமியை விட 10 மடங்கு அதிகம் உள்ளது.

சந்திரனில் கொட்டிக் கிடக்கும் டைட்டேனியம் உலோகம் : பூமியை விட 10 மடங்கு அதிகம் உள்ளது

சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா ஒரு விண்கலம் அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் சந்திரனின் மேற்பரப்பை போட்டோக்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

7 விதமாக எடுத்து அனுப்பப்பட்ட அவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏற்கனவே கடந்த 1972-ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வெட்டி எடுத்து வந்த பாறைகளில் பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில் டைட்டேனியம் டி என்ற உலோக தாதுக்கள் இருப்பது தெரியவந்தது. டைட்டேனியம் என்பது உருக்கு உலோகத்தை விட மிகவும் உறுதியானது. இந்த உலோகம் பூமியில் ஒரு சதவீதம்தான். அதாவது மிக குறைவாக உள்ளது. ஆனால் சந்திரனில் அவை கொட்டிக் கிடக்கின்றன. அதாவது 10 மடங்கு அதிகம் இருக்கிறது. இவை பாறைகளில் மறைந்து கிடக்கின்றன. டைட்டேனியம் தவிர இரும்பு தாதுக்களும் மறைந்துள்ளன.

இந்த தகவலை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்தார். பிரான்சில் உள்ள நான்டெஸ் என்ற நகரில் நடந்த மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்து இந்த தகவலை வெளியிட்டார்.

உயர்கல்வியில் 48,00,000 கோடி வியாபாரம் உள்ளதைக் கண்ட கார்ப்பரேட் முதலாளிகள்.



100 கோடி மாணவர்களும், 5 கோடி ஆசிரியர்களும், பல ஆயிரம் கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைந்திருக்கிற கல்வித்துறையில் உலகளவில் 48,00,000 கோடி பணப்புழக்கம் இருக்குமென உத்தேசமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கல்வியில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்துகிடப்பதை கண்டறிந்து விட்டனர் கார்ப்பரேட் முதலாளிகள்.

உலகளாவிய சந்தையைக்கொண்டிருக்கிற இத்தொழிலில், மாணவர்கள் நுகர் வோராகவும், ஆசிரியர்கள் சேவை வழங்குபவர்களாகவும், கல்வி நிறுவனங்கள் தொழில் நடத்தும் நிறுவனங்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். கற்பித்தலும் கற்றலும் தேசவளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டிராமல் இலாபமீட்டும் தொழிலாக மட்டுமே உருவாகிவருகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள்யாவும் உயர்கல்வியினை இலாபமீட்டும் நோக்கில் எப்போதும் குறிவைத்துக்கொண்டே இருக்கின்றன. கல்வி என்பது அரசின் கடமை யாக இருந்தபோதிலும், பெரும்பாலான அரசாங்கங்கள் புதிய தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக கல்வியளிக்கிற பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டிருக்கின்றன. தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல் மற்றும் கல்விநிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது போன்றவற்றின் மூலமாக இந்திய அரசாங்கமும் இதனை ஆதரித்தே வந்திருக்கிறது.

21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டிலேயே உயர்கல்வியினை தனியார் மயமாக்குவதையும் வியாபாரமாக்குவதையும், உயர்கல்வியை காட்ஸ் (GATS ) ஒப்பந்தந்தின் கீழும் உலக வர்த்தக மையத்தின் கீழும் கொண்டுவருவதையும் எதிர்த்து மிகப்பெரிய அளவிலான மாணவர்-ஆசிரியர்-மக்கள் போராட்டங்களை இவ்வுலகம் கண்டிருக்கிறது. காட் மற்றும் உலக வர்த்தக மையம் ஆகியவை கல்வி போன்ற சேவையினை உலக அளவிலான சந்தையில் விற்பனைப்பொருளாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்படுகின்றன.

பாஜக ஆட்சியில் உயர்கல்வியின் தனியாமயமாக்கல்:

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்கல்விக்கான தேவையோடுதான் நாம் இருபதாம் நூற்றாண்டிற்குள் காலடியெடுத்துவைத்தோம். அத்தேவையினை பூர்த்திசெய்து நாட்டின் வளர்ச்சியினை உறுதிசெய்வதைவிடுத்து, பா.ஜ.க. அரசும் யூ.ஜி.சீ.யும் உலக வங்கியின் கட்டளைகளுக்கு அடிபணிவதிலும், கல்வியை வியாபாரமாக்க வேண்டுமென்கிற உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தங்களை கண்மூடித்தனமாக கையெழுத்திடுவதிலுமே அக்கரையோடிருந்தது. உயர்கல்வி யினை தனியார்மயமாக்கும்/வியாபாராமாக்கும் பொருட்டு, கல்விக்கட்டண உயர்வு, கல்வி நிறுவனங்களுக்கு எவ்விதக்கட்டுப்பாடுகளுமற்ற தன்னாட்சி அதிகாரம், நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களாவதற்கான விதிமுறைகள் தளர்த்தல் போன்ற முடிவுகளை எடுக்கத்துவங்கியது பா.ஜ.க. அரசாங்கம்.

"உயர் கல்வி நிறுவனங்கள் யாவும் கல்விக்கட்டணத்தினை உயர்த்தியும், தனியார் நன்கொடைகளை ஏற்றும், இன்ன பிற வழிமுறைகளை கண்டறிந்தும் தங்களுடைய தேவைகளைப்பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். உயர்கல்வியில் தனியார் முதலீடுகள், அரசின் சுமையைக் குறைக்கும்." என்று அப்போதைய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி 1998 இல் பாரிசில் நடந்த உயர்கல்விக்கான யுனெஸ்கோ மாநாட்டில் தனியார்மயத்திற்கு ஆதரவாகப் பேசினார்.

அம்பானி-பிர்லா அறிக்கை:

கல்வியை இலாபம் நிறைந்த சந்தையாகக்கருதி, முகேஷ் அம்பானியும் குமார் மங்கலம் பிர்லாவும் இணைந்து "கல்விச்சீர்திருத்த கொள்கை வரைவு" ஒன்றை பிரதமரின் கீழியங்கிய வர்த்தக-தொழில் குழுமத்திற்கு 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சமர்ப்பித்தார்கள். மாணவர்களிடமிருந்தே கல்விக்கட்டணத்தை முழுமையாக வசூலிக்கவும், உயர்கல்வியை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கவும் வழிவகுப்பதாகத்தான் இருந்தது அவர்களது அறிக்கை. அவ்வறிக்கையினை மட்டும் நடைமுறைப்படுத்தியிருந்தால் காசிருப்பவன் மட்டுமே உயர்கல்வி பயிலமுடியுமென்ற சூழல் முழுமையாக ஏற்பட்டிருக்கும்.

அம்பானிக்கும் பிர்லாவுக்கும் கல்வியில் இருக்கும் சந்தையினை கார்ப்பரேட்டு களே கட்டியாள வேண்டுமென்பதே விருப்பம். அதனாலேயே கல்வி நிலையங் களில் எவ்வித அரசியல் செயல்பாடுகளும் இருக்கக்கூடாதென்றும், சங்கமமைக் கிற அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்கக்கூடாதென்று அறிக்கையில் கேட்டுக்கொண்டனர். இவ்வறிக்கையினை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மக்கள்யாவரும் பெரியளவில் விமர்சித்தனர்.

உலகவங்கியின் வழிகாட்டுதல்:

உயர்கல்வியினை தனியார்மயமாக்கும் நோக்கில் செயல்பட்ட உ.வ.மை.(உலக வர்த்த மையம்) மற்றும் காட்ஸ்(GATS ) ஆகியற்றுக்கு கிடைத்த கடும் எதிர்ப்பினால், உலக வங்கி வேறு வகையில் அதனை நிறைவேற்ற "அறிவார்ந்த சமூக உருவாக்கம்: புதிய சவால்கள்" என்றொரு அறிக்கையினை 2000 இல் வெளியிட்டது. கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டு, குறைந்தபட்ச தரத்துடன் புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் துவங்க அனுமதிக்கவேண்டுமென்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களும் கூட மாணவர்களிடம் இருந்தும் அவர்களின் பெற்றோரிடமிருந்தும் கட்டணமாக வசூலித்தும், வெளியிலிருந்து நன்கொடையாகப் பெற்றும், வருமானமீட்டிக் கொள்ளவேண்டு மென்று அறிவுறுத்துகிறது.

"உலக அளவிலான அறிவுசார் பொருளாதாரத்தின் தேவையை பூர்த்திசெய்யவும், மாறிவரும் தொழிலாளர் சந்தைக்காகவும், கல்விநிறுவனங்கள் புதுமையான வழிமுறைகளைக்கண்டறிய ஏதுவாகவும் ஒரு திட்ட வரைவினை உருவாக்க வேண்டும்" என்று வளரும் நாடுகளுக்கு உலக வங்கி அவ்வறிக்கையின் மூலமாக கேட்டுக்கொண்டது. உலக வங்கி தன் கட்டுப்பாட்டிலேயே அத்திட்டவரைவினை உருவாக்கி செயல்படுத்துவதனை உறுதி செய்யுமென நம்பிக்கை தெரிவித்தது. இதன்மூலம் உலக உயர்கல்வியை தனது காலடியின்கீழ் வைத்துக்கொள்ளும் திட்டம்தான் உலகவங்கிக்கு.

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான 'மாதிரிச்சட்டம்':

உலகமயத்தின் தேவைகளுக்கேற்ப உயர்கல்வித்துறையினை வடிவமைக்க வேண்டுமென வளரும் நாடுகளையெல்லாம் உலகவங்கி நெருக்கத்துவங்கியது. புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கேற்ப அவை அமையுமென்ற நம்பிக்கை யையும் அளித்திருப்பதால், பெரிய அளவிலான எதிர்ப்பும் தவிர்க்கப்படும் என்பது உலகவங்கியின் கணிப்பு.

இப்பின்னனியில்தான் உலகவங்கியின் நெருக்குதலுக்கிணங்க பா.ஜ.க. தலைமை யிலான அரசு யூ.ஜி.சி. மூலமாக அக்டோபர் 2003 இல் "பல்கலைக்கலைக் கழகங் களை சிறப்பான எதிர்காலத்திற்காக தயார்செய்யும் நோக்கில் " என்கிற பார்வை யில் "21 ஆம் நூற்றாண்டில் இந்தியப்பல்கலைக் கழங்களுக்கான முன் மாதிரிச் சட்டம் உருவாக்கும் பொருட்டு" என்னும் தலைப்பில் கருத்தாக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

"'நிதியுதவி பெற்று ஆய்வு நடத்துதல்', 'அறிவுசார் ஆலோசனை வழங்குதல்', 'புத்தகங்கள் / ஆய்வறிக்கைகள், தயாரித்தல் / வெளியிடுதல்' போன்றவற்றை உலகின் மற்ற பல்கலைக்கழங்கள் போலவே இந்தியா பல்கலைக்கழகங்களும் ஏற்கனவே செய்யத்துவங்கிவிட்டன. அதே போல இன்னபிற உலக அளவிலான முன்னேற்றங்களையும் (குறிப்பாக தகவல் தொடர்பு தொழிற்நுட்பங்கள்) பயன் படுத்திக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கலைக்கழங்களின் எண்ணிக்கை, அணுகுமுறை, தரம் மற்றும் நிதி ஆகியவற்றில் இருக்கும் பிரச்சனைகள் இன்னமும் தொடர்ந்து இந்தியப்பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை பாதித்துக்கொண்டே இருக்கின்றன.

பல்கலைக்கழகங்கள் சிக்கல்கள் நிறைந்த நிறுவனங்களாக மாறிக்கொண்டிருப் பதால், சூழ்நிலைக்கேற்ப நடைமுறைச்சிக்கலற்ற நிர்வகிக்க எளிமையான வழி முறைகளை உருவாக்குதல் அவசியமாகிறது. எனவே பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால்தான் உலகமயமாக்கலின் சவால்களை ஏற்றுக்கொண்டு உயர்தரத்திலான கல்வியை வழங்கமுடியும்."

புதிய பல்கலைக்கழக 'மாதிரிச் சட்டங்கள்' யாவும், தகவல் தொடர்பு தொழிற்நுட்பப் புரட்சியின் பலனைப்பெறுவதாகவும், தேசிய அளவிலும் உலக அளவிலும் உருவாகியிருக்கிற போட்டியினை சமாளிக்கும் விதமாகவும் இருக்குமென்றும், 2020 இல் இந்தியா ஒரு அறிவுசார் வல்லரசாக உதவுமென்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'மாதிரிச்சட்டங்கள்' வழியாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உயர்கல்வியில் நிகழும் உலக அளவிலான மாற்றங்களோடு ஒன்றிச்செல்லவும், சொந்தச் செலவிலேயே நிர்வாகத்தினை நடத்தவும், கல்வியினை ஒரு வியாபாரமாகவே நடத்தவும் தயார் செய்வதே யூ.ஜி.சி.யின் எண்ணம். மற்றுமொரு யூ.ஜி.சி.யின் ஆய்வறிக்கையில், "மானியமில்லாத பாடத்திட்டங்கள், தொழிற்கல்வி படிப்பு களுக்கு இரட்டைக்கட்டணமுறை என இந்தியாவில் உயர்கல்வியானது ஏற்கனவே ஓரளவிற்கு தனியார்மயமாகிவிட்டது." என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

'மாதிரிச்சட்டங்களின்' மூலமாக இந்தியாவிலிருக்கும் எல்லா உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும், இன்னபிற கல்வி நிறுவங்களுக்கும் மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தினை முழுவதுமாக நிறுத்தி, அவற்றை யெல்லாம் உலகமயத்தின் ஓர் அங்கமாக மாற்றி, GATS -இல் செர்த்துவிட்டதால் ஏற்படும் விளைவுகளையும் அனுபவித்து, இலாபமோன்றே குறிக்கோளாகக் கொண்ட உலக கல்வி முதலாளிகளிடம் நாட்டின் உயர்கல்வித்துறையினை அடகுவைத்து, கல்வியும் ஒரு வியாபாரம்தான் என்பதனை நிலைநாட்டுவதே அரசின் நோக்கமாக இருந்தது. இதன் காரணமாக, மிக அதிகமான கட்டணங்களை செலுத்த இயலாத நிலையிலிருக்கும் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்திருக்கிற பிரிவு மக்களும் கீழ்நடுத்தர மக்களும் உயர்கல்வியிலிருந்தே விலக்கப்பட்டுவிடுவார்கள்

இது போன்ற ஒரு சூழலை உருவாக்கவே, பாஜக அரசும் யூ.ஜி.சி.யும் இணைந்து உயர்கல்விக்கான நிதியினை குறித்தும், மாணவர்களின்மீது சுமையினை திணிக்க வலியுறுத்தியும், கல்விக்கடன்களை திணித்தும், கல்வி நிறுவனங்களின் கட்டாய தரமதிப்பீடு நடத்தியும், கல்லூரிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கியும், சுயநிதிக் கல்லூரிகள் துவங்க ஊக்கமளித்தும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களல்லாத ஊழியர்களின் வேலைப்பளுவினை அதிகரித்தும், ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பதை ஊக்குவித்தும் உயர்கல்வியில் தனியார்மயத்தையும் வியாபார நோக்கத்தினையும் புகுத்தினார்கள்.

'மாதிரிச்சட்டங்கள்' செயல்வடிவத்திற்கு வந்தால், இருபத்தோராம் நூற்றாண்டில் சமச்சீரான உயர்கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதனை நன்கு புரிந்துகொள்ளமுடியும்.

நாட்டின் உயர்கல்வியினை ஒட்டுமொத்தமாக வியாபாரமாக்கும் நோக்கிலேயே பா.ஜ.க. தலைமையிலான அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே இத்தகைய "மாதிரிச்சட்டத்தினை" உருவாக்கி முன்மொழிந்தது. இக்கடுமையான சட்டத்திற் கெதிராக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என நாடுமுழுவதிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

நன்றி

விஜயேந்தர் ஷர்மாவின் ( http://vijendersharma.wordpress.com/about ) கட்டுரைகளில் இதுகுறித்த ஏராளமான தகவல்கள் உள்ளது, www.chinthan.com அவற்றில் சிலவற்றை தமிழாக்கம் செய்யதது. அவை உங்கள் பார்வைக்கு....


Friday, October 7, 2011

எம்.பி.பி.எஸ். மாணவர்கள் வழக்கு : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திர்க்கு நோட்டீஸ்.



சென்னை : எம்.பி.பி.எஸ். தேர்வில் புது விதிமுறையை புகுத்தப்பட்டதை எதிர்த்து, 150 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், எம்ஜிஆர் பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நாமக்கல்லை சேர்ந்த எம்.பி.பி.எஸ். மாணவி சுருதி உள்பட 150க்கும் அதிகமானவர்கள், உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் அனைவரும் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்துள்ளோம். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்டு இறுதி தேர்வு எழுதினோம். தேர்வு முடிவுகள் இன்டர்நெட் வாயிலாக கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு பாடத்தின் முதல் தாளில் நாங்கள் தோல்வி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறை வகுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த விதிமுறையின்படி ஒவ்வொரு பேப்பரிலும் 50 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் வெற்றி அறிவிக்கப்படும். பழைய விதிமுறையின்படி, ஒரு பாடத்துக்கான இரண்டு பேப்பரிலும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால் போதும். ஒவ்வொரு பேப்பரிலும் குறைந்தது 50 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைக்கு எதிரானது. வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற விதிமுறை இல்லை. இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள புதிய விதிமுறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு வகுப்புக்கு செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பாக வக்கீல் ஜி.டி.சுப்பிரமணியன் ஆஜராகி, வரும் 10ம் தேதி முதல் 2ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கவிருக்கின்றன. எனவே மாணவர்கள் 2ம் ஆண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இந்த வழக்கில் எம்ஜிஆர் பல்கலைக்கழக பதிவாளர் உள்பட 3 பேர் வரும் 14ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி
தினகரன், 7-10-2011

எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவை எதிர்த்து முதலாம் ஆண்டு மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு .



சென்னை,அக்.6: புதியமுறையில் மதிப்பெண் நிர்ணயக்கப்பட்டதால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுத் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களில் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், பல மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம்கேட்டுள்ளது.

புதிய முறையில் மதிப்பெண் நிர்ணயம்: எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுப் படிப்பில் உள்ள பாடங்களான அனாடமி (இரண்டு பிரிவுகள்), "ஃபிஸியாலஜி' (இரண்டு பிரிவுகள்), "பயோகெமிஸ்ட்ரி' (இரண்டு பிரிவுகள்) ஆகியவற்றில் எழுத்துத் தேர்வு-செய்முறைத் தேர்வு-வாய்மொழித் தேர்வு ஆகியவை தலா 100 மதிப்பெண்களுக்கு உண்டு. இதில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தேர்ச்சி பெற ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

உதாரணமாக "அனாடமி பாடப்பிரிவு 1-ல்' ஒரு மாணவர் 100-க்கு 60 மதிப்பெண்ணும், "அனாடமி பாடப்பிரிவு 2-ல்' ஒரு மாணவர் 100-க்கு 40 மதிப்பெண்ணும் எடுத்தால்கூட தேர்ச்சி பெறும் நிலை இருந்து வந்தது.

ஆனால், கடந்த கல்வியாண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் முறையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதாவது, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ஒரு மாணவர் தேர்ச்சி பெற முடியும் என பல்கலைக்கழகம் மாற்றம் செய்தது.

இதனால் இந்த ஆண்டு ஆகஸ்டில் தேர்வு எழுதிய எம்.பி.பி.எஸ். மாணவர்களில் 900 பேர் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபல கல்லூரிகளில்கூட...: படிப்பில் சிறந்து விளங்குவோர் படிக்கக்கூடிய சென்னை மருத்துவக் கல்லூரியில் அனாடமி பாடப் பிரிவு 1 மற்றும் பிரிவு 2-ல் தேர்வு எழுதிய 163 மாணவர்களில், 136 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இதே பாடப் பிரிவில் தேர்வு எழுதிய 151 மாணவர்களில் 118 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

"பிரேக் சிஸ்டம்': மற்ற படிப்புகளைப் போல் இல்லாமல், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும்கூட, 2-ம் ஆண்டு படிப்பைத் தொடர முடியாத அளவுக்கு "பிரேக் சிஸ்டம்' நடைமுறை உள்ளது. தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் படித்து தேர்ச்சி பெற்ற பிறகே, அடுத்த ஆண்டு படிப்பைத் தொடரும் நிலை எம்.பி.பி.எஸ். படிப்பில் உள்ளது. இதனால்தான் எம்.பி.பி.எஸ். படிப்பை 7 அல்லது 8 ஆண்டுகள் கழித்து முடிப்போரும் உண்டு.

துணைவேந்தர் விளக்கம்: ""தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் கழித்தும்கூட, எம்.பி.பி.எஸ். பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவே இத்தகைய குறைந்தபட்ச தேர்வு மதிப்பெண் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

"பிரேக் சிஸ்டம்' என்பது இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறையாகும். "பிரேக் சிஸ்டம்' நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்' என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன்.

நன்றி
தினமணி, 7-10-2011

Wednesday, October 5, 2011

வாழ்வு முத்திரை, ஜீரண முத்திரை, இதய முத்திரை, லிங்க சக்தி முத்திரை .

வாழ்வு முத்திரை.
வாழ்வு முத்திரை

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.


ஜீரண முத்திரை.
ஜீரண முத்திரை

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும்.

சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.


இதய முத்திரை.
இதய முத்திரை

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டை விரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது.

இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.


லிங்க சக்தி முத்திரை.
லிங்க சக்தி முத்திரை

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும்.

எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!

தொகுத்தவர்: முனைவர் ஆர்.ராஜன், சென்னை.

Saturday, October 1, 2011

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு - நிலைமை இன்னும் மோசமாகும் !



தமிழகம் முழுவதும் மீண்டும் கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது.

இதற்கு வழக்கம்போல காற்றாலைகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காற்றடித்தால் தான் மின்சார உற்பத்தி சீராகும் என்று கூறியே 5 வருடத்தைக் கழித்தார் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்வெட்டு சரி செய்யப்படும் என்று வாய் ஜாலம் காட்டப்பட்டது. ஆனால், நிலைமை முன்பை விட மோசமாகியுள்ளது.

காற்று வீசாததால் காற்றாலை மின்சார உற்பத்தியின் அளவு குறைந்து விட்டதாகவும், தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை பல நூறு மெகாவாட் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் தான் மின் தட்டுப்பாடு நிலவுவதுமாக மின்வாரியம் கூறுகிறது.

தமிழகத்தில் மின்சாரத் தேவையின் அளவு 11,000 மெகா வாட். ஆனால், உற்பத்தி ஆவதோ 9,500 மெகா வாட் தான்.

மேலும் தினந்தோறும் மின்சாரத் தேவையின் அளவும் கூடிக் கொண்டே போகிறது. இதனால் தடுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதனால் தமிழகம் முழுவதுமே பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் செய்யப்படும் இந்த மின்வெட்டால், தொழில நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பல தொழி்ற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கு பணி இல்லாத சூழலும் நிலவுகிறது.

இந் நிலையில் தமிழக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை அளிக்கும் முக்கிய சுரங்கமான ஆந்திர மாநிலம் சிங்க்ரனியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் கோரி இந்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் அங்கு நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், தமிழகத்துக்கு நிலக்கரி சப்ளையும் பாதிக்கப்படலாம். இதனால் தமிழகத்தில் மின் நிலைமை மேலும் மோசமாகும்.