Thursday, May 19, 2011

மெரீனா கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு.

மெரீனா கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சையது நூர்அகமது. மருந்துக் கடை அதிபர். இவரது மகள் தமன்னா (வயது 5). கடந்த 11-ந்தேதி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சையது நூர்முகமது மெரினா கடற்கரைக்கு சென்றார். உழைப்பாளர் சிலை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தமன்னா திடீரென மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் கடற்கரை முழுவதும் தமன்னாவை தேடினர். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. தமன்னாவை கண்டு பிடிப்பதற்காக துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளன.

சென்னை மட்டுமின்றி, ஆந்திர மாநில பகுதிகளிலும் திருப்பதி கோவில் அருகிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இருந்த போன் நம்பரை பார்த்து ராஜவேலு என்ற வாலிபர் தமன்னாவின் தந்தை சையது நூர் முகமதுவிடம் பேசியுள்ளார். அப்போது அவர், "திருப்பதி கோவில் அருகே உங்கள் மகளை நான் பார்த்தேன். அவளுடன் பெண் ஒருவரும் இருந்தார்'' என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை சையது நூர்முகமது போலீசிடம் தெரிவித்தார். உடனடியாக தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு ஆஸ்பத்திரி அருகே அனாதையாக நின்று கொண்டிருந்தார். அரசு ஆஸ்பத்திரி போலீசார் மீட்டனர். சிறுமியை கடத்தியவர்கள் அவளை ஆஸ்பத்திரி அருகே விட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தும் போது முழு விவரம் தெரியவரும்.

ரூ 50 லட்சம் வைர நகை - பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது.


கணக்கில் வராத ரூ 50 லட்சம் பெறுமானமுள்ள நகைகளுடன் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பாவை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடந்த சர்வதேச பட விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியிருந்தார் மினிஷா லம்பா.

அப்போது அவரை சோதனை செய்ததில் கணக்கில் காட்டாத ரூ 50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நகைகளுக்கு மினிஷா அளித்த விளக்கம் ஏற்கக் கூடியதாக இல்லாததால் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர் சுங்கத் துறை அதிகாரிகள். அவரை விசாரிப்பதற்காக கைது செய்துள்ளனர் அதிகாரிகள்.

இதுகுறித்து மினிஷா தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் என்றைக்கும் முன்னால் நிற்போம் : வைகோ .


ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம் என்று வைகோ பேசினார்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 17.05.2011 அன்று நடைபெற்றது.

இந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

உலகத்தில் பல்வேறு நாடுகள், இலங்கையிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது விசாரிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டு என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற வேளையில், ஐ.நா. மன்றம் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், ஏன் அமெரிக்காவே நேரடியாக விசாரணை செய்யும் என்று கூறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இந்திய அரசும் இலங்கை அரசும் கூட்டறிக்கையின் மூலமாக ஐ.நா. மன்றத்திற்கு மூவர் குழு கொடுத்த அறிக்கைக்கு மாறாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்திய அரசே, போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ராஜபக்சேவை கூண்டிலே நிறுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. கருத்துக்களை ஜனநாயகத்திலே அவரவர் சொல்ல உரிமை உண்டு. நான் எவர் கருத்தையும் இங்கே விமர்சிக்க விரும்பவில்லை.

நடந்து முடிந்த தேர்தல் களத்தைப் பற்றிய செய்திகள் எல்லாம் இங்கே வந்தன. தேர்தல் களத்திலே மதிமுக பங்கேற்கவில்லை. தேர்தல் களத்தில்தான் தற்காலிகமாக பங்கேற்கவில்லையே தவிர, ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம்.

இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல. குற்றாச்சாட்டுக்கான நாடு இந்தியா அல்ல. இந்திய அரசை இயக்குகின்ற காங்கிரஸ் கட்சியின் தலைமை. அந்த தலைமையின் கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற பிரதமர் மன்மோகன் சிங், அவர் தலைமையிலான அமைச்சர்கள். அந்த அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகள். இவர்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும். இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், இந்திய அரசே நீ கொடுத்த ஆயுதங்கள், நீ அள்ளிக்கொடுத்த ஆயிரம் கோடி பணம், நீ அனுப்பி வைத்த முப்படை தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், நீ தந்து உதவிய நவீன உபகரணங்கள், குண்டு வீச விடுதலைப்புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று செயற்கைகோள் படங்கள்.

விடுதலைப்புலிகளை களத்திலே வெல்ல முடியாது. ஆனால் போர்க்களத்திலே அவர்கள் தோற்க என்ன காரணம். தமிழினத்தை அழிப்பதற்கு ராஜபக்சேவுக்கு துணை நின்று அத்தனை துரோகமும் செய்தது இந்திய அரசு.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய மனித உரிமை மீறல்களையும், பல ஆயிரம் தமிழர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்ததையும் ஐ.நா. சபை அமைத்தகுழு அம்பலப்படுத்தியுள்ளது. இந்தப் போர்க் குற்றங்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தி, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இலங்கையில் போரின்போது நடந்தவைகள் குறித்து இலங்கை அரசு நடத்தி வரும் விசாரணையே போதும் என்று இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் கூறியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் துரோகம் தொடர்வதையே இது காட்டுகிறது என்றார்.

கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டீர்கள்? சீமான்.


இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்,

சீமான் தலைவன் என்று நினைக்கக் கூடாது. நான் யார் என் இனத்தின் விடுதலைக்கு, உண்மையாக நேர்மையாக அர்ப்பணிப்போடு போராடுகிற எண்ணற்ற தலைவர்களை உருவாக்குகிற ஒரு முதண்மை தொண்டன். அப்படியானால் இந்த கட்சிக்கு யார் தலைவர். இந்த கட்சிக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற 12 கோடி தேசிய இன மக்களுக்கு ஒரே தலைவர் பிரபாகரன்.

நாம் தமிழர் என்கிற கட்சி தேசிய இன விடுதலைக்கான மக்கள் ஜனநாயக புரட்சி. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்காகவா, தமிழினம் மீட்சிக்காக. நாம் தமிழர் கட்சி ஆள்வதற்காகவா, தமிழர்கள் வாழ்வதற்காக. நாம் தமிழர் கட்சி பணத்திற்காகவா, சத்தியமாக இனத்திற்காக. நாம் தமிழர் கட்சி மக்களை வைத்து பிழைப்பதற்காகவா, மக்களுக்காக உழைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி பதவிக்காகவா, மக்களுக்கான உதவிக்காக. இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனது அன்பு தம்பிகள்.

யாரும் வரலாம். இங்கு வாழலாம். நாங்கள்தான் ஆளுவோம். என் பாட்டன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படையிலே, என் பாட்டன் வெள்ளைய தேவன் தளபதியாக இருந்ததுபோல, எத்தனை தளபதிகள் எங்களுக்கு இருக்கலாம். நான்தான் மன்னன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. யாரும் வரலாம். வாழ்த்துக்கலாம். நான்தான் ஆளுவேன். வந்தவர்களையெல்லாம் வாழ வைத்ததில் எனக்கு சிக்கல் வரவில்லை. வந்தவனையெல்லாம் ஆளவைத்தில் எனக்கு சிக்கல். அதனை புரிந்துகொள்ள வேண்டும். யாரும் வரலாம். இங்கு வாழலாம். நாங்கள்தான் ஆளுவோம். இதுதான் எங்கள் கொள்கை.

என் மொழி காக்க, என் இனம் காக்க, என் மண் காக்க, என் மக்களை காக்க, என் உயிருக்கும் மேலாக நின்று போராடிக்கொண்டிருக்கிற எழுச்சிமிக்க இளைஞர்களின் பாசறைதான் இந்த நாம் தமிழர் கட்சி.

ஓயாமல் கொள்கை என்ன என்று கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடத்தில் ஓட்டு போட்டீர்கள். கொள்கை இருக்குதா. கொள்கையை கேட்டுக்கிட்டா போட்டீர்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் பவர் கட் : ட்விட்டர், இணையதளம் மூலம் நூதன போராட்டம் .


நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மின் தடை குறித்த விவரங்களை, முழுமையான புள்ளி விவரத்தகவல்களை இணையதளம் மூலம் பகிர்ந்து கொண்டு, அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புதுவிதமான நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ட்விட்டர் மூலம்தான் இந்த நூதன போராட்ட நடவடிக்கை தொடங்கியது. தற்போது பெருகி வரும் ஆதரவைத் தொடர்ந்து இணையதளமே அமைத்து விட்டனர்.

நாட்டின் பல பகுதிகள் மின் தடையால் இருண்டு போய்க் கிடக்கின்றன. கேட்டால் மின்சாரம் இல்லை, உற்பத்தி இல்லை, பற்றாக்குறை என்று மாநில அரசுகள் காரணம் கூறுகின்றன.மத்தியஅரசும் இதே பதிலைத்தான் கூறி வருகின்றன. இப்படிக் கூறியதால்தான் தமிழகத்தி்ல் ஆட்சியையே மக்கள் மாற்றி விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவின் மின் அவல நிலையை ட்விட்டர் மூலம் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் ஷெபாலி யோகேந்திரா இறங்கியுள்ளார்.

ட்விட்டர் மூலம் இந்தியாவின் மின் தடை அவலத்தை வெளிப்படுத்தி, இதைப் போக்குமாறு அரசியல்வாதிகளுக்கு இந்த ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து யோகேந்திரா கூறுகையில், ஒவ்வொருமுறையும் கோடை காலம் வந்து விட்டாலே, எனது ட்விட்டர் நண்பர்கள் இந்தியாவில்நிலவி வரும் கடுமையான மின் தட்டுப்பாடு குறித்துக் கூறுவார்கள். சமீபத்தில் இரண்டு நகரங்களைச் சேர்ந்த எனது நண்பர்கள் அடுத்தடுத்து மின் தடை குறித்து வேதனையுடன்குறிப்பிட்டிருந்தனர். இதைப் பார்த்ததும் எனக்கு யோசனை தோன்றியது.

பொதுவான ஒரு ட்விட்டர் முகவரியைப் பயன்படுத்தி இந்தியாவின் மின் அவலத்தை நமது அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி இதை சரி செய்யும் வகையில் செயல்பட முடிவு செய்தேன்.

இதற்காகவே #powercutindia அல்லது #PowerCutsIN ஆகிய இரு முகவரிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் இதை நான் செயல்படுத்தியுள்ளேன். இங்கு இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களாக இருந்தாலும் அங்குள்ள மின்சார விநியோக நிலை, மின் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த விவரங்களைத் தெரிவிக்கலாம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மின் வெட்டு அமலாகும்போது ஒரு மெசேஜும், மின்வெட்டு நீங்கி மீண்டும் கரண்ட் வரும்போது ஒரு மெசேஜும் அனுப்புமாறு பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

தற்போது இந்த ட்விட்டர் குழுவினர் இணைந்து ஒரு இணையதளத்தை ஆரம்பித்துள்ளனர். அதில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் மின்வெட்டு அமலாகிறது என்பதை ஒரு மேப் மூலம் தெரிவிக்கின்றனர். மேலும் மின்வெட்டு குறித்த புள்ளி விவரத் தகவல்களையும் இதில் அவர்கள் இடம் பெற வைத்துள்ளனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மின்வெட்டு தொடர்பான தகவல்கள் இவர்களுக்கு கிடைக்கிறதாம். இந்த இணையதளத்தை உருவாக்கி பராமரித்து வருபவர் அஜய் குமார். இவர் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பொது நலன் கருதி செயல்படும் இந்த கட்டமைப்பில் பொதுமக்கள் பெருமளவில் இணைய வேண்டும். மின்வெட்டின் விபரீதம் குறித்து அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டும் என்று இந்த வித்தியாசமான நடவடிக்கையின் காரணகர்த்தாக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மின்வெட்டு தொடர்பான தகவல்களைத் தர இமெயில் முகவரி ஒன்றையும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதேசமயம், தவறான, சரியில்லாத தகவல்களைத் தந்தால் அதை இவர்கள் நிராகரித்து விடுகிறாகள். மேலும் நம்பகமான தகவல்களைத் தருவோரை ஸ்டார் ரிப்போர்டர்களாகவும் இவர்கள் அங்கீகரித்துள்ளனர். ஒரு ஊரிலிருந்து வரும் மின் வெட்டு குறித்த தகவல்கள் சரியா என்பதை இவர்கள் மூலம் சரி பார்த்துக் கொள்கிறார்களாம்.

முன்பு அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக போராடியபோது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் அவருக்குப் பெரும் ஆதரவு திரண்டது நினைவிருக்கலாம். அது கொடுத்த ஊக்கத்தால்தான் தற்போது மின்வெட்டுக்கு எதிரான இந்த நூதன போராட்டம் தொடங்கியுள்ளது.

குடிகார தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகள்.


தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து சித்ரவதை செய்த தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.

ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் கோவூரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு ஆன்ட்ரோசெல்வின் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அப்பாவும், மகளும் மட்டும் தூங்கினர். திடீர் என்று நள்ளிரவு 2 மணி அளவில் அஞ்சுஜெர்மி தன் அண்ணனுக்கு போன் செய்து தான் தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்தார்.

உடனே ஆன்ட்ரோசெல்வின் வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து தங்கை கொலை செய்துவிட்டதாகக் கூறுகிறாள், நீங்கள் நேரில் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ரத்னமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடனே வீட்டு உரிமையாளர் மாங்காடு போலீசில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஞ்சுஜெர்மியைப் பிடித்து விசாரித்தார்.

விசாரணையில் அஞ்சுஜெர்மி கூறியதாவது,

கடந்த 1 ஆண்டுக்கு முன் நான் 5 பவுன் தங்க நகையை என்னுடைய தோழியிடம் கொடுத்து வைத்திருந்தேன். அதை வாங்கி வருமாறு என் தந்தை என்னிடம் அடிக்கடி தகராறு செய்தார்.

மேலும், தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து சித்ரவதை செய்தார். நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த அவர் என்னை அடித்து உதைத்தார். பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. தினமும் என்னை கொடுமைப்படுத்தும் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இரவு 2 மணியளவில் அவர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் காய்கறி நறுக்கும் கத்தியால் குத்திக் கொன்றேன் என்றார்.

ரத்னமணியின் உடலில் 4 இடங்களில் கத்திக்குத்து இருந்தது.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு : மின்வெட்டு நேரம் 15 நாளில் குறையுமாம்.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு:  மின்வெட்டு நேரம் 15 நாளில் குறையும்; மின்வாரிய அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் தற்போது கிராமப்புறங்களில் 3 மணி நேர மின்வெட்டும், சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டும் அமலில் உள்ளது.இந்த மின்வெட்டை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இதுபற்றி அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்தார். தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு குறித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் இந்த கூட்டத்தில் விளக்கி கூறினார். இதுபற்றி விரிவாக விவாதித்த ஜெயலலிதா, பற்றாக்குறை மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 மாதத்திற்குள் மின் நிலைமை சரி செய்யப்பட வேண்டும் என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மின் சப்ளையை சீராக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு தற்போது 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 9 ஆயிரம் மெகாவாட் முதல் 9 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. 2500 முதல் 3 ஆயிரம் மெகா வாட் வரை பற்றாக்குறை நிலவுவதால் மின்வெட்டு அமலில் உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவக்காற்று அதிகம் வீசுவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் கிடைத்து வருகிறது. காலை நேரங்களில் 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மாலை நேரங்களில் மின் உற்பத்தி மேலும் அதிகம் கிடைக்கிறது.

இந்த மாத கடைசிக்குள் 27-ந்தேதிக்கு பிறகு மின் உற்பத்தி மேலும் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே 15 நாளில் 3 மணி நேர மின்வெட்டை 2 மணி நேர மின்வெட்டாக குறைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னையிலும் மின்வெட்டு விரைவில் நீக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆறுமணி நேரம் உள்ளதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

வால்பாறையில் சிறுமியை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.


வால்பாறையில் 3 1/2 வயது சிறுமியை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் கீழ்ப்பிரிவு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது வீட்டிற்கு கர்நாடக மாநிலம் குல்பர்கா என்ற இடத்தை சேர்ந்த லட்சுமணனின் அண்ணன் மனைவி சுமதி மற்றும் அவரது 2 மகள்கள் கோடை விடுமுறையை கழிக்க வால்பாறைக்கு வந்திருந்தனர்.

நேற்று மாலைசுமதி தனது 2 குழந்தைகளுடன் கெஜமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். இளைய மகள் ஜனனி(வயது 3 1/2) தாயின் கையை பிடித்து நடந்து சென்று கொண்டு இருந்தாள்.

பாய்ந்த சிறுத்தை:

அப்போது தேயிலைத்தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை, சிறுமி ஜனனியை குறிவைத்து பாய்ந்தது. சிறுத்தை சிறுமியின் கழுத்தை கவ்விக்கொண்டு, புதருக்குள் ஓட முற்பட்டது. சிறுமியின் தாயார் உதவி கேட்டு போட்ட கூச்சலில் சிறுத்தை சிறுமியை போட்டுவிட்டு ஓடிவிட்டது.

தாய் கண் எதிரே பலி:

சிறுத்தையால் கடிபட்ட சிறுமி ஜனனி, சம்பவ இடத்திலேயே தாயின் கண்ணெதிரில் துடிதுடித்து இறந்தார். சிறுமியின் உடல் முடீஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்கதையாகும் உயிர்பலி:

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை மூன்று குழந்தைகள் சிறுத்தைகளுக்குப் பலியாகியுள்ளனர். இது தவிர, கடந்த ஆண்டு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள் சிறுத்தையினால் தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தனர்.

சிறுத்தை மட்டுமல்லாமல் யானைகளும் அடிக்கடி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. யானையிடம் மிதிபட்டு கடந்த ஆண்டுகளில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தவிர மலைப்பாம்புகள், செந்நாய் போன்றவற்றின் தொல்லைகளும் அதிகரிக்கிறது. நேற்றுகூட, வால்பாறை தொழிலாளர் குடியிருப்புக்குள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது.

கண்டுகொள்ளாத எஸ்டேட் அதிபர்கள்:

கடந்த பலவருடங்களாக எஸ்டேட் பகுதிகளில் மின்விளக்கு அமைக்குமாறு அதன் உரிமையாளர்களை வனத்துறை எச்சரித்து வருகிறது. ஆனால் பலரும் அதை காதில் வாங்கிக்கொள்வதில்லை. பொதுமக்களையும் இரவு இருட்டியதற்குப்பின் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

முன்னெப்போதும் இருந்ததை விட, வால்பாறை பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிகளில் எப்போதும் அச்சத்துடனேயே நடமாட வேண்டி உள்ளது. வேட்டை தடை செய்யப்பட்டதனால் வால்பாறை பகுதிகளில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்து வருவதும் ஒரு காரணம் என்கிறார்கள் சூழலியளாளர்கள்.

போராட்டம்:

இந்நிலையில் சிறுத்தைகளின் அட்டகாசத்தை அடக்கும் வரை சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என எஸ்டேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்று போராட்டம் செய்தார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் வந்து எங்களது பாதுகாப்பான வாழ்விற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இதனால் அப்பகுதியில் இரவு பத்து மணி வரை பதட்டம் நீடித்தது.

சதை போடுங்கள் என்றேன் : ரஜினியிடம் உடல் எடையை குறைக்க சொல்லவில்லை ; டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு.

சதை போடுங்கள் என்றேன்:    ரஜினியிடம் உடல் எடையை    குறைக்க சொல்லவில்லை;    டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு

ரஜினி உடல் எடையை குறைத்ததால் தான் உடல் நலக்குறைவுக்கு ஆளானார் என்று செய்திகள் பரவியுள்ளது. கடந்த ஓரிரு மாதங்களாகவே ராணா படத்துக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். திரவ உணவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை குறைந்தது. உணவு பழக்கத்தை மாற்றியது உடலுக்கு ஒத்துக்கொள்ள வில்லை. எனவே தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ராணா சரித்திர படம். இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். சரித்திரப் படத்தில் மாவீரனாக தோன்ற உடலை யாராவது குறைப்பார்களா? ரஜினி என்றைக்கு குண்டாக இருந்திருக்கிறார். இப்போது இளைக்கச் சொல்வதற்கு நாங்கள் என்ன சரித்திர காமெடி படமா எடுக்கிறோம். அவரை ஒல்லி மாவீரனாக காட்ட? ரஜினி கதை டிஸ்கஷனுக்கு வரும் போதெல்லாம் இன்னும் கொஞ்சம் சதை போடுங்கள் என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தோம். உடல் எடையை குறைக்க சொல்லவில்லை.

ரஜினிக்கு இறைப்பையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகத்தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைசிறந்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது. நாளுக்கு நாள் அவரது உடல் நிலை நன்றாக தேறி வருகிறது. ஆஸ்பத்திரியில் ரஜினியை சந்திக்க நிறைய பேர் விரும்புகிறார்கள்.

எல்லோரையும் அனுமதித்தால் ஓய்வு எடுக்க முடியாது. எனவே தான் சில நாட்கள் கழித்து பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று இருக்கிறார்கள். ரசிகர்கள் வீண்வதந்திகளை நம்ப வேண்டாம். இன்னும் சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து விட்டு வீடு திரும்புவார்கள். நாம் எல்லோரது பிரார்த்தனையும் நம்பிக்கையும் வீண் போகாது.

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ஜெ. கண்டனம்.


புதுச்சேரி அரசில் அதிமுகவுக்கு இடமளிக்காததற்கு முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து என்.ஆர்.காங்கிரஸ் 20 இடங்களிலும், அதிமுக 10 போட்டியிட்டன. இதில் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் ரங்கசாமிக்கு காரைக்காலில் சுயேட்சையாக வென்ற வி.எம்.சிவக்குமார் ஆதரவு அளித்தார். இதையடுத்து அதிமுகவை ஒதுக்கிவிட்டு தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.

இதற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனித்து ஆட்சியமைத்து கூட்டணிக்கு ரங்கசாமி துரோகம் இழைத்துவிட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டோமே தவிர, வேறு எந்த வகையிலும் அந்தக் கட்சிக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. வென்றால் ஆட்சியில் பங்கு தருவோம் என்றும் கூறவில்லை என்றனர்.

25 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

மாநில சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக எஸ்.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி என்ற அதிகாரமில்லாத பதவியில் முடக்கி வைக்கப்பட்டிருந்தார்.

அதே போல திமுக ஆட்சியில் மிக முக்கிய பொறுப்பான உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாபர் சேட், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு 'டம்மி போஸ்ட்' என்பது குறிப்பிடதக்கது.

2 நாளில் சிறைத்துறையிலிருந்து உளவுப் பிரிவுக்கு வந்த ராஜேந்திரன்:

சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் உளவு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற அதே தினமே இவர் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக அதிகாரமற்ற பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டார். ஆனால், நேற்று இவருக்கு மிக மிக முக்கிய பொறுப்பான உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பை தந்துள்ளார் ஜெயலலிதா.

திமுக ஆட்சியிலும் இவர் நடுநிலையோடு செயல்பட்டதால் இந்தப் பரிசு அவருக்குத் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அதிகாரிகள் மாற்றங்கள் குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் நேற்றிரவு வெளியிட்ட உத்தரவு விவரம்:

மாநில உளவு பிரிவு கூடுதல் டிஜிபியாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி டி.ராஜேந்திரன் (சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர்) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியை நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கூடுதலாக கவனித்து வந்தார்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி எஸ்.ஜார்ஜ் மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார்.

ஒதுக்கப்பட்ட ராதாகிருஷ்ணன்-ஜாங்கிட்:

மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்பார். மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபி ஆஷீஸ் பெங்ரா மாற்றப்பட்டு உள்ளார்.

மத்திய போலீஸ் பயிற்சி பள்ளி சிறப்பு அதிகாரியாக உள்ள கூடுதல் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் நாகர்கோவிலில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜாபர்சேட்டுத்து மண்டபம் அகதி முகாம்:

கூடுதல் டிஜிபி எம்.எஸ்.ஜாபர்சேட் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டு இருக்கிறார்.

மேற்கு மண்டல ஐ.ஜி. பி.சிவனான்டி திருச்சியில் உள்ள மாநில போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்பார்.

சென்னை கூடுதல், இணை கமிஷனர்கள்:

மாநில நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. தாமரைக்கண்ணன் சென்னை நகரின் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் உள்ள ஐ.ஜி. ஷகீல் அக்தர் மாற்றப்பட்டார்.

சென்னை தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் உள்ள கூடுதல் கமிஷனர் எம்.ரவி மாற்றப்பட்டுள்ளார்.

மாநில தலைமையக ஐ.ஜி. அபய்குமார் சிங் சென்னை நகரின் தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்பார்.

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரன் சென்னை தெற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு இணை கமிஷனர் பெரியய்யா மாற்றப்பட்டு உள்ளார்.

மத்திய அரசு பணியில் உள்ள டி.ஐ.ஜி. கே.சங்கர் மத்திய சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆயுதப்படை டி.ஐ.ஜி. என்.கே.செந்தாமரைகண்ணன் வடசென்னை இணை கமிஷனராக பொறுப்பேற்பார். வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி பணிமாற்றப்பட்டு உள்ளார்.

ஈரோடு அதிரடிப்படி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.வி.கருப்பசாமி சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஆகிறார். மைலாப்பூர் துணை கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் மாற்றப்பட்டார்.

சென்னையில் உள்ள மாநில ஓ.சி.ஐ.யு. பிரிவு சூப்பிரண்டு திருநாவுக்கரசு தியாகராயநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தியாகராய நகர் துணை கமிஷனர் சண்முகவேலு மாற்றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன் சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆகிறார். அடையாறு துணை கமிஷனர் சித்தண்ணன் மாற்றப்பட்டு உள்ளார்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பேற்பார். புளியந்தோப்பு துணை கமிஷனர் என்.பாஸ்கரன் மாற்றப்பட்டார்.

ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்ட் அவினாஷ்குமார் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகிறார். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செந்தில்குமார் மாற்றப்பட்டு உள்ளார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.எஸ்.அன்பு பூக்கடை துணை கமிஷனராக பொறுப்பேற்பார். பூக்கடை துணை கமிஷனர் பி.பகலவன் மாற்றப்பட்டார்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.கண்ணன் திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் என்.எம்.மயில்வாகனன் மாற்றப்பட்டு உள்ளார்.

பவானீஸ்வரி துணை கமிஷனர்:

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.பவானீஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஆகிறார். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமி மாற்றப்பட்டார்.

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் ஆகிறார். அண்ணா நகர் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் மாற்றப்பட்டார்.

தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சுதாகர் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆகிறார். அந்த பதவியில் இருந்த துரைராஜ் மாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷி நிர்மல் குமார் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்பார். அந்த பதவியில் இருந்த எஸ்.மனோகரன் மாற்றப்பட்டார்.

ஆவடி வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை கமாண்டன்ட் அனிஷா உசேன் சென்னை போக்குவரத்து போலீஸ் மத்திய துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரயில்வே டி.ஐ.ஜியாக பொன்மாணிக்கவேல்:

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் மாநில ரயில்வே டி.ஐ.ஜி.யாக சென்னைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் இருந்த பி.சக்திவேலு மாற்றப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய பொறுப்புகள் தரப்பட்ட பொன்மாணிக்கவேலுக்கு இந்த முறை ரயில்வே டிஐஜி பதவியே கிடைத்துள்ளது.

ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை - தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.


சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

ஆனால், நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 7வது மாடியில் உள்ள தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.

இந்த சுவாச பிரச்சனையால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து நுரையீரலில் தேங்கியுள்ள நீரை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந் நிலையில் சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி நில மோசடி : 6 பேர் கைது.

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி நில மோசடி: 6 பேர் கைது

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மதுரை ஆனைïர் மற்றும் அதை சுற்றியுள்ள பார்க் டவுன், கலைநகர், பசுபதி நகர், கார்த்திக் நகர், பாலாஜிநகர், வாசுநகர், அதிசயா நகர், ஜெய்நகர் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 153 ஏக்கர் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் அந்த நிலங்களை சிலர் மோசடி செய்து உள்ளனர்.

அந்த நபர்கள் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு தொடர்ந்து வில்லங்கத்தை ஏற்படுத்திக்கொண்டும், அதை சரி செய்து கொடுப்பதாகவும் கூறி, நில உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றி வந்துள்ளனர். இதுதொடர்பாக பார்க் டவுன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கணேசன் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையின் தீவிர விசாரணையில் இறங்கின. இந்த 153 ஏக்கர் நில மோசடியில் சென்னை சாந்தோமை சேர்ந்த ஜான்கென்னடி, மதுரை எஸ்.ஆலங்குளம் மருதுபாண்டியர் 2-வது தெருவை சேர்ந்த துரைராஜ், ராமன், ராஜசெல்வராஜ், ராஜவிஜயசிங், ராஜதாமோதரன், ராஜகண்ணபிரான், ராஜசெல்வேந்திரன், கார்மேகம், ஜெயலட்சுமி, அவருடைய மகன் முரளிதர மோகன கிருஷ்ணா, பரவை காளியம்மன்கோவில் தெரு ராஜபூமிநாதன், வலம்புரிநாதன், மதுரை பைபாஸ் ரோடு அலுவலக இணை சார்பதிவாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜான்கென்னடி என்பவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 153 ஏக்கர் நிலங்கள் தங்களது மூதாதையர்களின் வழிவகை சொத்துக்கள் என்றும், அதற்கு தாங்கள் தான் வாரிசுகள் எனவும் கூறி, அவர்கள் போலி ஆவணங்களை பெற்று இருக்கிறார்கள். 153 ஏக்கரின் தற்போதைய மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை தனிப்படையினர் மூலம் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தோம்.

இந்த நிலையில் கார்மேகம், ராஜ தாமோதரன், ராஜ கண்ணபிரான், ராஜ செல்வேந்திரன், ராஜபூமிநாதன், வலம்புரிநாதன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவான மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

இம்மாதிரியான மோசடிகள் தமிழ்நாடு முழுவதுமே நடைபெற்று வருகின்றன..... அரசுபதிவாளர்களும், எழுத்தர்களும் இந்த மோசடிகளில் உடந்தையாக உள்ளனர்.. காவல்துறை அதிகாரிகளும் இந்த மோசடி ஆசாமிகளை கைது செய்வதில்லை... புகார்கூறும் பாதிக்கப்பட்டவர்களிடம் புதிது புதிதாக சட்டங்களைக்கூறி காலதாமதம் செய்து பாதிக்கப்பட்டவர்களிடமும், குற்றவாளிகளிடமும் தனித்தனியாக பணம் கறந்துவிடுகிறார்கள்.. குற்றவாளி களையும் தப்பவிட்டுவிடுகிறார்கள்....

இந்த விசயத்தில் அரசு முனைப்புடன் செயல்பட்டு, நிலமோசடிகளை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க தனியாக ஒரு காவல்துறை அமைப்பை ஏற்படுத்தவேண்டும்..இந்த மோசடிக்கு உடந்தையாக இருக்கும் பதிவாளர்களை வீட்டுக்கு அனுப்ப வழிவகை செய்யவேண்டும். இத்தகைய மோசடியில் கைது செய்யப்படும் பதிவாளர்கள்,உடனடியாக ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மோசடியில் ஈடுபடுகிறார்கள்.. இந்நிலை மாற சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கூடுதல் விற்பனை வரி ரத்து : கேரளாவில் பெட்ரோல் விலை குறைப்பு.

கூடுதல் விற்பனை வரி ரத்து: கேரளாவில் பெட்ரோல் விலை குறைப்பு


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியதால், கேரளாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.39 உயர்ந்தது. இதன்மூலம், கேரள அரசுக்கு விற்பனை வரி மூலம் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.131 கோடியே 94 லட்சம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில், முதல்-மந்திரி உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் முதலாவது மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், கூடுதலாக கிடைக்கும் விற்பனை வரி வருவாயை ரத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் இருபத்து இரண்டு காசுகள் குறைந்தது.

ரூ.30 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்.


கடந்த 2 ஆண்டுகளில் வருமானவரி சோதனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், கறுப்பு பணம் பற்றிய தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுதிர் சந்திரா,

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில், வருமானவரி சோதனை மற்றும் ஆய்வு மூலம் ரூ.30 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனையிலும், ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இதன்மூலம், நாங்கள் சாதாரண மக்களை குறிவைக்காமல், பெரிய மனிதர்களை குறிவைத்து செயல்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

கறுப்பு பணம் பற்றிய உறுதியான தகவல் கிடைக்காமல், எங்கள் அதிகாரிகள், அலுவலகத்தை விட்டு வெளியே செல்வது இல்லை. தனிப்பட்ட பகை காரணமாக, எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிக கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம். அனைவரும் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் வருமான வரித்துறை ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரீபண்ட்' கொடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில், முதல் 45 நாட்களில் வருமான வரி வசூல், கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 3 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, முதல் 45 நாட்களில் ரூ.9 ஆயிரம் கோடி மட்டுமே வசூலானது. ஆனால், தற்போது ரூ.28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.

கறுப்பு பணம் குறித்த தகவல் பரிமாற்றத்துக்கு தனிப்பிரிவு உருவாக்கி உள்ளோம். வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருக்கும் நாடுகளை அடையாளம் கண்டுள்ளோம். அத்தகைய 14 நாடுகளுடன் ஒப்பந்தம் போடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எந்த நாடாவது தகவல் அளிக்க மறுத்தால், அந்நாட்டை ஒத்துழைப்பு அளிக்காத நாடு' என்று அறிவிப்பதற்கும் ஒப்பந்தத்தில் வழி உள்ளது என்றார்.

அத்தியாவசிய பொருள் விலை உயரும் : பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் ; “கோப்மா” சங்கம் கோரிக்கை.

அத்தியாவசிய பொருள் விலை உயரும்:    பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்;    “கோப்மா” சங்கம் கோரிக்கை


கோவை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோப்மா சங்க தலைவர் மணிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோப்மா சங்க தலைவர் மணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கடந்த 12 மாதங்களில் 9 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி ஏழை மக்களுக்கு கிடைத்திருக்கும் இரண்டு சக்கர வாகன போக்குவரத்து வசதியைக் கூட அனுபவிக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டி பெட்ரோலிய நிறுவனங்கள் தமக்குள் போட்டி போட்டு பெட்ரோல் விலையை சகட்டுமேனிக்கு உயர்த்தியுள்ளதற்கு கோப்மா சங்கம் மிக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அதிகப்படியான நுகர்வோர்கள் உள்ள அமெரிக்கா தேசத்தில் கூட இந்தியாவை காட்டிலும் பாதிக்கு பாதி விலை குறைவாக பெட்ரோல் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில்ஏழை-எளிய அடித்தட்டு மக்களின் மீதே வரிச்சுமையையும், பெட்ரோல் விலை உயர்வையும் அடிக்கடி ஏற்றி விடுகின்றனர்.

ஏறிய எந்த பொருட்களின் விலையும் இந்தியாவில் குறைவதே இல்லை. இந்தியாவில் விற்கக்கூடிய பெட்ரோல் விலையில் மத்திய-மாநில அரசுகள் 51 சதவீதம் வரை விலையில் பாதியை வரியாகவே மக்களிடமிருந்து பெறுகின்றனர்.

பெட்ரோலிய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தரப்படுகின்ற அபரிமிதமான சலுகைகளாலும், ஊதிய உயர்வாலும் மற்றும் நிர்வாக குறைபாட்டால் மட்டுமே நஷ்டம் ஏற்படுகிறது. இந்திய திருநாட்டில் மாதம் ஐந்தாயிம் ரூபாய் ஊதியம் பெற்று குடும்பத்தோடு வாழ்க்கை நடத்துகின்ற பலகோடி மனிதர்களை இந்திய அரசு சிறிதாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெட்ரோலிய நிறுவனங்களில் நஷ்டம் ஏற்படுவது உண்மையென்றால் அரசு பெட்ரோல் கொள்முதலில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டால் நாட்டில் ஏழை எளியோர் பயன்படுத்தப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பது அரசுக்கு தெரியாதா? மக்களால் பயன்படுத்தப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அரசு லாப-நஷ்ட கணக்கு பார்க்க கூடாது.


ஆகவே அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும் அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டில் அரசே வைத்துக் கொளள் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மணிராஜ் கூறியுள்ளார்.