Thursday, May 19, 2011

ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் என்றைக்கும் முன்னால் நிற்போம் : வைகோ .


ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம் என்று வைகோ பேசினார்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 17.05.2011 அன்று நடைபெற்றது.

இந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

உலகத்தில் பல்வேறு நாடுகள், இலங்கையிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது விசாரிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டு என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற வேளையில், ஐ.நா. மன்றம் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், ஏன் அமெரிக்காவே நேரடியாக விசாரணை செய்யும் என்று கூறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இந்திய அரசும் இலங்கை அரசும் கூட்டறிக்கையின் மூலமாக ஐ.நா. மன்றத்திற்கு மூவர் குழு கொடுத்த அறிக்கைக்கு மாறாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்திய அரசே, போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ராஜபக்சேவை கூண்டிலே நிறுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. கருத்துக்களை ஜனநாயகத்திலே அவரவர் சொல்ல உரிமை உண்டு. நான் எவர் கருத்தையும் இங்கே விமர்சிக்க விரும்பவில்லை.

நடந்து முடிந்த தேர்தல் களத்தைப் பற்றிய செய்திகள் எல்லாம் இங்கே வந்தன. தேர்தல் களத்திலே மதிமுக பங்கேற்கவில்லை. தேர்தல் களத்தில்தான் தற்காலிகமாக பங்கேற்கவில்லையே தவிர, ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம்.

இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல. குற்றாச்சாட்டுக்கான நாடு இந்தியா அல்ல. இந்திய அரசை இயக்குகின்ற காங்கிரஸ் கட்சியின் தலைமை. அந்த தலைமையின் கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற பிரதமர் மன்மோகன் சிங், அவர் தலைமையிலான அமைச்சர்கள். அந்த அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகள். இவர்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும். இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், இந்திய அரசே நீ கொடுத்த ஆயுதங்கள், நீ அள்ளிக்கொடுத்த ஆயிரம் கோடி பணம், நீ அனுப்பி வைத்த முப்படை தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், நீ தந்து உதவிய நவீன உபகரணங்கள், குண்டு வீச விடுதலைப்புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று செயற்கைகோள் படங்கள்.

விடுதலைப்புலிகளை களத்திலே வெல்ல முடியாது. ஆனால் போர்க்களத்திலே அவர்கள் தோற்க என்ன காரணம். தமிழினத்தை அழிப்பதற்கு ராஜபக்சேவுக்கு துணை நின்று அத்தனை துரோகமும் செய்தது இந்திய அரசு.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய மனித உரிமை மீறல்களையும், பல ஆயிரம் தமிழர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்ததையும் ஐ.நா. சபை அமைத்தகுழு அம்பலப்படுத்தியுள்ளது. இந்தப் போர்க் குற்றங்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தி, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இலங்கையில் போரின்போது நடந்தவைகள் குறித்து இலங்கை அரசு நடத்தி வரும் விசாரணையே போதும் என்று இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் கூறியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் துரோகம் தொடர்வதையே இது காட்டுகிறது என்றார்.

No comments: