Thursday, May 19, 2011

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு : மின்வெட்டு நேரம் 15 நாளில் குறையுமாம்.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு:  மின்வெட்டு நேரம் 15 நாளில் குறையும்; மின்வாரிய அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் தற்போது கிராமப்புறங்களில் 3 மணி நேர மின்வெட்டும், சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டும் அமலில் உள்ளது.இந்த மின்வெட்டை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இதுபற்றி அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்தார். தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு குறித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் இந்த கூட்டத்தில் விளக்கி கூறினார். இதுபற்றி விரிவாக விவாதித்த ஜெயலலிதா, பற்றாக்குறை மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 மாதத்திற்குள் மின் நிலைமை சரி செய்யப்பட வேண்டும் என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மின் சப்ளையை சீராக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு தற்போது 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 9 ஆயிரம் மெகாவாட் முதல் 9 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. 2500 முதல் 3 ஆயிரம் மெகா வாட் வரை பற்றாக்குறை நிலவுவதால் மின்வெட்டு அமலில் உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவக்காற்று அதிகம் வீசுவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் கிடைத்து வருகிறது. காலை நேரங்களில் 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மாலை நேரங்களில் மின் உற்பத்தி மேலும் அதிகம் கிடைக்கிறது.

இந்த மாத கடைசிக்குள் 27-ந்தேதிக்கு பிறகு மின் உற்பத்தி மேலும் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே 15 நாளில் 3 மணி நேர மின்வெட்டை 2 மணி நேர மின்வெட்டாக குறைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னையிலும் மின்வெட்டு விரைவில் நீக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆறுமணி நேரம் உள்ளதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

No comments: