Thursday, May 19, 2011

குடிகார தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகள்.


தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து சித்ரவதை செய்த தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.

ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் கோவூரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு ஆன்ட்ரோசெல்வின் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அப்பாவும், மகளும் மட்டும் தூங்கினர். திடீர் என்று நள்ளிரவு 2 மணி அளவில் அஞ்சுஜெர்மி தன் அண்ணனுக்கு போன் செய்து தான் தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்தார்.

உடனே ஆன்ட்ரோசெல்வின் வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து தங்கை கொலை செய்துவிட்டதாகக் கூறுகிறாள், நீங்கள் நேரில் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ரத்னமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடனே வீட்டு உரிமையாளர் மாங்காடு போலீசில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஞ்சுஜெர்மியைப் பிடித்து விசாரித்தார்.

விசாரணையில் அஞ்சுஜெர்மி கூறியதாவது,

கடந்த 1 ஆண்டுக்கு முன் நான் 5 பவுன் தங்க நகையை என்னுடைய தோழியிடம் கொடுத்து வைத்திருந்தேன். அதை வாங்கி வருமாறு என் தந்தை என்னிடம் அடிக்கடி தகராறு செய்தார்.

மேலும், தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து சித்ரவதை செய்தார். நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த அவர் என்னை அடித்து உதைத்தார். பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. தினமும் என்னை கொடுமைப்படுத்தும் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இரவு 2 மணியளவில் அவர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் காய்கறி நறுக்கும் கத்தியால் குத்திக் கொன்றேன் என்றார்.

ரத்னமணியின் உடலில் 4 இடங்களில் கத்திக்குத்து இருந்தது.

No comments: