Thursday, September 22, 2011

உடலை வலுவாக்கும் பாதாம்பருப்பு.



பாதாம் பருப்பினால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைப்பதோடு, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பாதாமில் உள்ள புரதச்சத்து மிகவும் தரம் வாய்ந்தது.

25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் தன்மை கொண்டது. 80 சதவிகிதம் கரையாத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது.

இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. இதனால் பாதாமை ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது. எனவேதான் பாதாம் ஒரு உயர்தர உணவாக கருதப்படுகிறது.

பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. சத்து நிறைந்த பாதாம் இந்தியாவில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் அதிக அளவில் விளைகின்றது. மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாம் பருப்பை விற்பனை செய்கின்றன.

செயல்திறன் மிக்க சத்துக்கள்

பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்த மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் காணப்படுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது

பாதாம் எண்ணெய்

பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம், மற்றொன்று கசப்பு பாதாம் இனிப்பு பாதாமில் பூக்கள் மென்மையாக இருக்கும். கசப்பு பாதாமின் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெயே பயன்படுத்தப்படுகின்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெயானது தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செரிந்தது. இது அனைத்துவகையான சருமத்திற்கும் ஏற்றது.

பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. சரும வறட்சி, அரிப்பு, போன்றவைகளுக்கு பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது.

செரிமானக் கோளாறுகளை நீக்கும்

நமது பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து உணவு செரிமானத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே செரிமானக்கோளாறு உள்ளவர்கள் பாதம் பருப்பை உண்ணுவதால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் குணமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பவர்கள் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

வயிற்றுக்கு ஏற்ற பாதாம் பால்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாயில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது.

இதயத்தின் நண்பன்

ஓட்ஸ்,சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை கூட்டுவதில்லை என்றால் பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

என் நாவிற்கு துணிச்சல் இல்லை : வைகோ.



சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த, 'இன்னுயிர் ஈந்து மூன்று தமிழர் உயிர் காத்த வீரமங்கை தோழர். செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் மற்றும் மூன்று தமிழரின் மரண தண்டனையை முற்றிலும் நீக்கக்கோரி கூட்டம்' 21.09.2011 அன்று மாலை நடைபெற்ற்றது.

இந்த கூட்டதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

இனியும் செங்கொடிகள் தங்களை தீக்கரையாக்கிக் கொள்கிற நிலை உருவாகிவிடக்கூடாது என்று கொளத்தூர் மணி சொன்னார். இந்த வீரமங்கை செங்கொடி தீட்சண்யமான கண்கள். வசீகரம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபோதே, நமது நெஞ்சை ஏதோ ஈர்க்கிறது. நான் சுமந்து செல்கின்ற கைப்பெட்டியில் அந்த அழகான படத்தை வைத்திருக்கிறேன்.

எம்ஜிஆர் நகரில், கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருசேர எழுவோம். தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம். முவர் உயிரை காக்கவும், மரண தண்டனை முற்றாக அழித்து ஒழிக்கவும் சங்கநாதம் புரிவோம். தோள் கொடுத்து நிற்போம் என்று அந்த கூட்டத்திற்கு செல்லும் வழியில் மல்லை சத்யா, இதோ இந்த தங்கை தான் செங்கொடி.

சென்றபோது, அந்த கொட்டடிகள் இருக்கிற இடத்துக்கு செல்ல என்னால் இயலவில்லை. என் கால்களில் இனம்புரியாத ஒரு நடுக்கம். நாளை வேலூருக்கு புறப்படுகின்ற, பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரை காப்பதற்கு புறப்படுகின்ற அந்தப் பயணத்தைப் பற்றிய துண்டு பிரசுரத்தை இதோ உங்களிடம் தருகிறார் என்றார்.

26ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு பேரறிவாளனிடம், சாந்தனிடம், முருகனிடம் 9ஆம் தேதி அன்று உங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்து அவர்கள் கையெழுத்துக்களை அவர்களிடமே பெற்றுக்கொண்ட ஒன்றரை மணி நேரத்தில், பிற்பகல் 3 மணிக்கு தனித்தனி கொட்டடிகளில் பூட்டப்பட்ட அவர்களை சந்திக்க திரும்பவும் இவர்களை நாம் காண்போமா.



அவர்கள் கலகலப்பாக இருந்தார்கள். மனதில், முகத்தில் எந்த சஞ்சலத்தின் ரேகையும் காணவில்லை. வீரர்கள் அல்லவா. மானம் உணர்வு உள்ள வீரர்கள் அல்லவா. ஏன்னே பயப்படரீங்க. ஒண்ணுமில்லண்ணே. தமிழகம் எங்களை காப்பாற்றும். தமிழர்கள் எங்களை காப்பாற்றுவார்கள்.

சிறை வாசலில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்தபோது, 9ஆம் தேதி தூக்கு என்று சொல்லுவதற்கு என் நாக்குக்கு துணிச்சல் இல்லை. நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் செய்தி மின்னல் வேகத்தில் பரவத்தானே செய்யும். தொலைக்காட்சிகளிலே 9ஆம் தேதி தூக்கு தண்டனை என்ற செய்தி கோடிக்கணக்கா மக்களின் நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்தது. அங்கிருந்து அவசர அவசரமாக நாம் ஏற்கனவே எடுத்திருக்கின்ற முடிவின்படி, மூன்று தமிழர்களின் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பிலே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, மனித சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாவை தந்த காஞ்சி நகரத்துக்கு ஓடோடி வந்தேன்.

தொடர்வண்டி செல்லுகின்ற பாதையை வழிமறிக்கின்ற கதவுகள் பூட்டப்பட்டிருந்த காரணத்தினால் குறித்த நேரத்தில் நான் செல்ல முடியவில்லை. தாமதமாகிவிட்டதே என்று விரைந்து சென்றேன். முழுக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் மேடையில் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்போது கரம் கோர்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் நிற்கின்ற காஞ்சி நகர வீதிகளில் நின்றபோது, எனக்கு தெரியாது. வீரமங்கை செங்கொடிக்கு பக்கத்தில் நிற்கின்ற பாக்கியம் எனக்கும் கிடைத்தது என்று எனக்கு தெரியாது.

சேலத்துக்கு பக்கத்தில் ஆத்தூர் என்ற நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற மேடையேற போகிறேன். காஞ்சிபுரத்தில் இளம்தளிர் செங்கொடி நெருப்பிலே பாய்ந்தாள். முடிந்துவிட்டது அவள் வாழ்வு. கருகி சாம்பல் ஆகிப்போனாள் என்ற செய்தி, அதற்கு பிறகு அந்த மேடையில் உரையாற்ற என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

மகேஷ் (காஞ்சி மக்கள் மன்றம்) சொன்னார். சின்ன வயதில் என்னிடம் வந்தாள். நான் வளர்த்தேன். இசையில், பாடல் பாடுவதில், அந்த குயிலின் ஓசை அந்த கானக் குரலோடு கலந்திருந்ததாமே, தப்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதிலே அற்புதமான கலை அவளிடம் வளர்ந்திருந்ததாமே, போராட்ட களங்களுக்கு முதல் ஆளாக வந்து நிற்பாளாமே. காஞ்சி மக்கள் மன்றம் நடத்திய போராட்டத்தில் துணிச்சலாக முதல் ஆளாக நின்று நாயகியாக நின்றாளாமே.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதாவும் நாங்களும் எங்களை மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டோம். உயிர் முடிந்தாலும் பரவாயில்லை. உண்ணா நோன்பு இருப்போம் என்று அறப்போர் நடத்துகின்ற களத்துக்கு செல்வோம் வா என்று அழைத்த மகேஷிடம், நான் வரவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர இன்று எனக்கு விருப்பமில்லை என்று சொன்னாளாம்.

சொன்னதற்கு பிறகு மகேஷ் சொல்லுகிறார், நான் புறப்பட்டுச் சென்றேன். திருப்பி பார்த்தேன். என்னாளும் இல்லாத விசித்திரமான புன்னகை ஒன்று அவள் உதடுகளில் தவழ்ந்தது. எதற்கு இந்த புன்னகையை நெளிய விடுகிறார் என்று அப்பொழுது புரியவில்லை. கடைசியாக பார்க்றோம் என்று தான் சிரித்தாள் போலும்.

முத்துக்குமார் தன்னைத்தானே அழித்துக்கொண்ட விளைவாகத்தானே தமிழக்ததில் பிரளயம் ஏற்பட்டது அதுபோல யாராவது ஒருவர் மாய்த்துக்கொண்டால், எரிமலை சீறுமா என்று கேட்டபோது, இதெல்லாம் எதற்காக கேட்கிறாய். அதெல்லாம் இப்பொழுது அவசியமில்லை. அதுபற்றி ஏன் சிந்திக்கிறாய் என்று சொல்லிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன் என்றார்.

செங்கொடி அதன் பிறகு துரிதமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனத்திலே புறப்பட்டுச் செல்கிறாள். அவளுக்கு அத்தனை பயிற்சிகளும் உண்டு. ஏன் போர்ப் பயிச்சிக் கூட பெற்றிருப்பாள். வாகனத்திலே சென்று, அந்த இடத்தில் வானத்தை நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் கடைக்காரரிடம் சாவியை கொடுத்து வருவார்கள் சாவியை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறாள்

பெட்ரோல் வாங்கிக்கொண்டு, வாகனத்துக்கு என்று வாங்கிக்கொண்டு, அந்த பெட்ரோல் தன் மீது ஊற்றுக்கின்றபோதே, தன்னை கொண்டுபோய் மருத்துவமனையிலே காப்பாற்றிவிடக்கூடாது என்று நனைய நனைய அந்த பெட்ரோலை மேனி மீது இருக்கிற உடை மீது கொட்டிவிட்டு, அதன்பிறகு நெருப்புக் குச்சியை எடுத்து மேலே போட்டவுடனேயே பனை மர உயரத்துக்கு தழல் எழுந்ததள்ளவா. தழல் எழுகிற வேளையிலேயே முழக்கமிடுகிறாள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். முழக்கம் எழுப்புகிறாள். நெருப்பு எரிவதை பார்த்து பலர் ஓடி வருகிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டுபோகிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறபோது, அந்த உயிர் விளக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணைகிறபோது, சுவாசம் நிற்கப்போகிறது. அந்தக் கட்டத்தில், குரல் எழுப்புற அந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கரைந்துகொண்டே இருக்கிற காரணத்தினாலே, பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். என்று சொல்லி வந்தவள், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முடிந்துவிட்டது செங்கொடியின் உயிர்.

தற்கொலையை நியாயப்படுத்தவில்லை. தீக்குளிப்பதை எவரும் ஊக்கப்படுத்துவல்லை. தீக்குளிப்பை ஊக்கப்படுத்துவதாக தயவு செய்து எண்ணி விடாதீர்கள். கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சுடர் இங்கே எரிகிறது.

நெஞ்சில் எவ்வளவு தியாக உணர்வு இருந்திருந்தால், பற்றுமே தழல், படீர் படீர் என்று வெடிக்குமே, தசை கருகுமே, நரம்புகள் கருகுமே, அந்த வலி தாங்க முடியாதே என்று எண்ணினாளா. இல்லை. அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியது. என்னுடைய உடல் மூன்று பேரின் உயிரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு செல்லுகிறேன் என்று அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். தமிழினத்தின் ஒரு பொக்கிஷம் அல்லவா செங்கொடி. இவ்வாறு வைகோ பேசினார்.

நடிகை சோனா, போலீஸ் கமிஷனரிடம் வீடியோ ஆதாரம் கொடுத்தார் ; சரண் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்.



தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி. சரண் மது விருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாண்டிபஜார் போலீசில் நடிகை சோனா புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டில் சரண் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பணம் பறிக்கும் நோக்கில் சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சோனா எதிர்த்தார்.

இந்த நிலையில் சோனா இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் சோனா நிருபர்களிடம் கூறியதாவது:-

எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன். வீடியோ ஆதாரத்தை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்து இருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன்.

நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறு சோனா கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- எஸ்.பி.பி. சரணிடம் நீங்கள்தான் பாலியல் உணர்வை தூண்டியதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளதே?

பதில்:- யார் குற்றவாளி என்பது என் வீடியோ ஆதாரத்தில் தெளிவாக உள்ளது. அந்த வீடியோவே இந்த கேள்விக்கு பதில் சொல்லும்.

கே:- இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?

ப:- இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் நான் விடமாட்டேன்.

கே:- வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?

ப:- அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்.

இவ்வாறு சோனா கூறினார்.

ஐ.நா.வில் அனாதரவாக விடப்பட்ட மன்மோகன் - முக்கியத் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை !



வழக்கமாக பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. கூட்டத்திற்குப் போனால் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்துப் பேச அலை பாய்வார்கள், ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா போயுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையோ, இங்கிலாந்து பிரதமரையோ, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களையோ இந்த முறை அவர் சந்திக்கவில்லை.

அன்னா ஹஸாரே போராட்டம், ஊழலுக்கு எதிரான இந்திய மக்களின் கொந்தளிப்பு, தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான ஊழல் புகார்கள் உள்ளிட்டவை காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் மிஸ்டர் கிளீன் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நற்பெயர் சர்வதேச அளவில் காலியாகியுள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரண்மாகவே மன்மோகன் சிங்கை சந்திக்க எந்த வல்லரசுத் தலைவரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜபக்சே போன்ற இரண்டாம் கட்ட உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தும் நிலைக்கு பிரதமர் தள்ளப்பட்டுள்ளார்.

இருப்பினும் இதைப் பொருட்படுத்தவில்லை மன்மோகன் சிங். மாறாக, மிக முக்கியமான விஷயத்தை அவர் தனது பேச்சின்போது ஐ.நா. மன்றத்தில் வைக்கவுள்ளார். அது ஐ.நா. சபையின் விரிவாக்கம் மற்றும் மறு சீரமைப்பு மற்றும் இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி என்பதுதான்.

இந்தக் கோரிக்கைக்கு ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா மட்டும் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இந்த நிலையில் தற்போதைய கூட்டத்தில் ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் குறித்து விரிவாகப் பேசத் திட்டமிட்டுள்ளார் மன்மோகன் சிங்.

இதுகுறித்து டெல்லியிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா .சபையை சீரமைக்கும் முயற்சியின்போது, குறிப்பாகப் பாதுகாப்புச் சபையை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் ஐ.நா. அமைப்பானது நடுநிலையுடனும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர் நாடாக பொறுப்பேற்றதிலிருந்து, உலக அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாதுகாப்புச் சபையின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

பணவீக்கம் போன்ற பிரச்சனைகளால் உலகப் பொருளாதாரம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தால் உலகப் பாதுகாப்புக்கும், நாடுகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் எழுந்துள்ள பிரச்னைகளால், எதிர்காலத்தில் ஸ்திரமற்ற சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனப் பிரச்னை இதுவரை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. ஈரான், தெற்கு சூடான், இலங்கை, ஜப்பான், நேபாளம் ஆகிய நாடுகளுடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

ராஜபக்சேவை சந்தித்துப் பேசும்போது இலங்கையின் முக்கியப் பிரச்சனையான தமிழர் பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் பெரிதாக பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மாறாக, இலங்கையை ஐஸ் வைக்கும் வகையிலான பல விஷயங்கள் குறித்தே பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவைக் காரணம் காட்டி இந்தியாவிடமிருந்து முடிந்தவரை லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் ராஜபக்சே, இந்த சந்திப்பின்போதும் தனக்கு சாதகமான பல விஷயங்களை இந்தியாவிடமிருந்து உறுதிமொழியாக பெற முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் ஐ.நா. பயணத்தின்போது இன்னொரு முக்கிய சந்திப்பும் நிகழவுள்ளது. அது நேபாள பிரதமர் பாபுராம் பட்டாராயுடனான சந்திப்பு. ஏற்கனவே பாகிஸ்தானுடன் பஞ்சாயத்து உள்ளது. வங்கதேசமும் முழுமையாக ஒத்துவருவதில்லை. சீனாவைக் காட்டி இலங்கை மிரட்டுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக நேபாளமும் இந்தியாவின் நட்பு வட்டத்திலிருந்து வேகமாக விலகிக் கொண்டிருக்கிறது. எப்படி பாகிஸ்தான், இலங்கை ஆகியவை சீனாவின் நட்பு நாடுகளாக விளங்குகின்றனவோ அதே நிலையை நோக்கி நேபாளமும் செல்ல ஆரம்பித்திருப்பதால் இந்தியாவுக்கு கவலை அதிகரித்துள்ளது.

எனவே நேபாளத்தை மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த நாட்டு பிரதமருடன் பேச மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நேபாள நாட்டுத் தலைவரை நீண்ட காலமாகவே இந்தியத் தரப்பில் யாரும் சந்திக்காமல் உள்ளனர். மேலும் நேபாளம் குறித்து இந்தியா முன்பு போல அதிக அக்கறை காட்டுவதில்லை. அலட்சியப் போக்கில்தான் இருந்து வருகிறது. இதுவே இந்தியாவை விட்டு நேபாளம் விலகிச் செல்ல முக்கியக் காரணம். இதை இப்போதுதான் இந்தியா உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

மொத்தத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, வழக்கமாக வல்லரசு நாடுகளின் தலைவர்களுடன் பேசுவதற்கே நேரம் போதாமல் பிசியாக இருக்கும் மன்மோகன்சிங், இந்த முறை குட்டித் தலைவர்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தை களில் ஈடுபடப் போகிறார். அதேசமயம், ஐ.நா. மறுசீரமைப்பு என்ற முக்கிய வாதத்தையும் பொதுச் சபைக் கூட்டத்தில் வைத்து விட்டு வரப் போகிறார். இந்தியா மற்றும் பிரதமரின் எந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு ? பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்.


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார்.

இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் Economic Affairs பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.

ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.

ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான்.

இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது.

இதன்மூலம் மத்திய அரசுக்குள் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி-ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.

இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார்.

கருத்து கூற பிரணாப் மறுப்பு:

இந் நிலையில் இந்தக் கடிதம் குறித்து கருத்துக் கூற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார்.

இந்திய- அமெரிக்க முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றார்.

அதே நேரத்தில் ஊழலை ஒழிக்க தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்ததே நான் தான் என்றும் அவர் கூறினார்.

சிதம்பரம் பதவி விலக பாஜக கோரிக்கை:

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகையில், பிரதமருக்கு பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதம் மூலமாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் தொடர்பு அம்பலமாகி விட்டது. நிதியமைச்சகமும், தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஸ்பெக்ட்ரம் விலை விவகாரத்தில் உடன்பட்டதால்தான், அதை செயல்படுத்த ஒப்புக்கொண்டதாக ஏற்கனவே பிரதமரும் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரமுக்கு விலையை நிர்ணயிப்பதில் ராசா பின்பற்றிய வழிமுறையை முதல் நாளில் இருந்தே ப.சிதம்பரம் ஆதரித்தார். ஆனால், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளோ, 2001ம் ஆண்டு விலைக்கு ஸ்பெக்ட்ரமை ஒதுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் நிலைப்பாட்டை ப.சிதம்பரம் ஏற்றிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி கட்சியின் ஊழல் என்றும், ராசாவே தனியாக எடுத்த முடிவு என்றும் நாடு நம்ப வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். ஆனால், பிரணாப் முகர்ஜியின் கடிதம் மூலம், இந்த ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றார்.

சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல-இந்திய கம்யூனிஸ்ட்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல. அவரது தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், பிரதமரிடம் ஆலோசனை நடத்தியே அனைத்து முடிவுகளும் எடுத்ததாக ராசா கூறி வருவதால், இதில் பிரதமரும் பதிலளிக்க வேண்டும் என்றார்.

சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டு-காங்கிரஸ் நிராகரிப்பு:

இந் நிலையில் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், எந்த வகையிலும் சுப்ரமணிய சாமியின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சிதம்பரத்தின் நேர்மையை யாராலும் சந்தேகிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் சாமியால் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. விசாரணை முடிவடைவதற்குக் காத்திருக்காமல் சாமியோ அல்லது வேறு எவருமோ சிதம்பரம் தவறு செய்திருப்பதாக முடிவுக்கு வருவது ஆட்சேபத்துக்குரியது என்றார்.