Saturday, June 25, 2011

ஜூலை 13 மற்றும் 14-ந்தேதி கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் .

13 மற்றும் 14-ந்தேதி கால்நடை மருத்துவ    படிப்பு கவுன்சிலிங்

கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 13 மற்றும் 14-ந் தேதி நடக்கிறது. இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) இளநிலை மீனவளம் (பி.எப்.எஸ்.சி.) பி.டெக் (உணவு பதனிடுதல் தொழில் நுட்பம்) மற்றும் பி.டெக் (கோழியின் உற்பத்தி தொழில் நுட்பம்-பி.டெக்-பிபிடி) ஆகிய பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடக்கிறது.

ஜூலை 13-ந்தேதி காலை 9 மணிக்கு பி.வி.எஸ்.சி. மற்றும் எ.எச்., ஜூலை 14-ந்தேதி பி.எப்.எஸ். சி. (கலையியல் பிரிவு மற்றும் தொழில் பிரிவு) பி.டெக் (உணவு பதனிடுதல் தொழில் நுட்பம்), பி.டெக் மற்றும் அனைத்து படிப்புகளுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டிற்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது.

மாணவர்களின் தரப்பட்டியல் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பத்தாரர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் குறிப்பிட்டுள்ள கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று உரிய காலத்தில் விண்ணப்பத்தை சமர்பிக்க தகுதியுள்ள மாணவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

தரப்பட்டியலை www.tanuvas.ac.in. என்ற இணைய தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை தேர்வுக்குழுத்தலைவரும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான டாக்டர் எஸ். திலகர் தெரிவித்துள்ளார்.

தேவை ஒரு ஸ்டெம்செல் வங்கி, தொடங்குமா தமிழக அரசு ?



சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் உணவு வகைகளைப் போல மருத்துவத் துறையிலும் புதிய பல நோய்கள் உலா வருகின்றன. இந்த நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில் அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக மருத்துவத் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் ஆதார செல்கள் எனனும் "ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.

ஆதார செல்கள் எனப்படும் ஸ்டெம்செல் உற்பத்தி

ஆதார செல்கள் எனப்படும் "ஸ்டெம்செல்' சிகிச்சை மருத்துவத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் "ஸ்டெம்செல்'களைச் செலுத்துவதன் மூலம் அந்த நோய் பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்க முடியும்.

எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து ஆதார செல்கள் எனப்படும் "ஸ்டெம்செல்'கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. "ஸ்டெம்செல்' சிகிச்சை இப்போது நீரிழிவு நோய், நிணநீர் மண்டலப் புற்றுநோய், மூளைக்கட்டி, இதய நோய், முதுகுத் தண்டுவட பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்னை உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் ரத்தத்தில் ஸ்டெம்செல்

"ஸ்டெம்செல்'லின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இப்போது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தக் கழிவுகளில் இருந்து ஆதார செல்கள் எனப்படும் "ஸ்டெம்செல்' களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது. மாதவிலக்கின் 2ஆம் நாள், பிறப்புறுப்பில் ``மென்ஸ்ட்ருவல் கப்`` செலுத்தி ரத்தம் சேகரிக்கப்படும். இந்த ரத்தத்தில் இருக்கும் கிருமிகள் நீக்கப்பட்டு, வேர் செல்கள் பிரிக்கப்படும். பிரித்தெடுத்த வேர் செல் திரவ நைட்ரஜனில் மைனஸ் 150 டிகிரி செல்ஷியசில் பாதுகாக்கப்படும். இதனைக் கொண்டு மூட்டுவலி மற்றும் சில நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று மும்பையில் உள்ள மகப்பேறு மருத்துவ டாக்டர் இந்திரா ஹிந்துஜா அவர்கள் கொண்ட ஆராய்ச்சியில் ``லைப் செல் பெமே`` என்ற பெயரில் மாதவிடாய் ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லை அறிமுகப்படுத்தி உள்ளார். இதனை மும்பையில் ``லைப் செல் இன்டர்நேஷ்னல்``என்ற தனியார் நிறுவனம் விற்பனைக்கு வைத்துள்ளது.

ஸ்டெம்செல் வங்கிகள்

"ஸ்டெம்செல்' குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையத் தொடங்கி உள்ளது. இதனால், "ஸ்டெம்செல்'களை அதற்குரிய "ஸ்டெம்செல்' வங்கிகளில் சேமித்து வைப்பது அதிகரித்து வருகிறது.

தொப்புள் கொடியில் இருந்தும், எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கப்படும் "ஸ்டெம்செல்'களைச் சேமித்து வைப்பதே இப்போது அதிகமாக உள்ளது. இந்த வகை "ஸ்டெம்செல்'களைச் சேமித்து வைக்க ரூ. 25 ஆயிரம் கட்டணமாக தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகள் வசூலிக்கின்றன. இக் கட்டணத்தை சில தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகள், தவணை முறையிலும் வசூலிக்கின்றன.

அரசு உருவாக்குமா?

இப்போதுள்ள சூழ்நிலையில், "ஸ்டெம்செல்' சேமித்து வைக்கத் தனியார் நிறுவனங்கள் மட்டுமே "ஸ்டெம்செல்' வங்கிகளை உருவாக்கி வருகின்றன. இதுவரை அரசு எங்கேயும் "ஸ்டெம்செல்' வங்கிகளை உருவாக்கவில்லை. பல ஆயிரம் கோடியில் சுகாதாரத் திட்டங்களையும், காப்பீட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தும் தமிழக அரசு, இன்னும் "ஸ்டெம்செல்' வங்கியைத் தொடங்க ஆரம்பகட்ட நடவடிக்கையைக்கூட எடுக்காமல் இருப்பது மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. அரசே பல இடங்களில் "ஸ்டெம்செல்' வங்கிகளைத் தொடங்கும்பட்சத்தில், நடுத்தர மக்களை மட்டுமன்றி, ஏழைகளையும் இது சென்றடையும்.

ஏற்கெனவே தொப்புள்கொடியிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் ஸ்டெம்செல் கண்டறிந்து பக்கவாதம், முதுகெலும்பு பாதிப்பு போன்றவற்றிற்கு அமெரிக்காவில் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணப்படுத்தப்பட்டு வருகிறது. "ஸ்டெம்செல்' மூலம் வருங்காலத்தில் மேலும் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை ஏற்படும்போது "ஸ்டெம்செல்' மூலம் இப்போது அடையும் பயனைவிட, எதிர்காலத்தில் அதிகப்படியான பயன்களை மக்கள் அடைய முடியும்.


thatstamil.oneindia.in

ஓமலூர் போலீசாரை மிரட்டிய தேமுதிக எம்எல்ஏ. S.R.பார்த்திபன், சிறைபிடிப்பு - வீடியோ இணைப்பு.




தேமுதிக மகளிரணியைச் சேர்ந்த பிரமுகர் தாக்கப்பட்டதையடுத்து ஓமலூர் காவல் நிலையத்துக்கு வந்து கலாட்டா செய்த மேட்டூர் தேமுதிக எம்எல்ஏவை போலீஸார் சிறைப் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த ஆனைக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலத்தின் மனைவி பேபி, தேமுதிக மாவட்ட மகளிரணி துணைச் செயலாளராக உள்ளார்.

அரசு பொறியியல் கல்லூரி எதிரே இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் சரவணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். பேக்கரியை காலி செய்யுமாறு பலமுறை கூறியும், சரவணன் மறுத்ததால் இருதரப்பினரிடையே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று பேபியை மர்ம கும்பல் தாக்கியதாகக் கூறி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேபி சேர்ந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந் நிலையில் பேபியைத் தாக்கியவர்களை உடனே ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டவாறு, மேட்டூர் தேமுதிக எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் நேற்றிரவு ஓமலூர் காவல் நிலையத்துக்கு வந்து போலீசாரிடம் மிரட்டல் தொனியில் பேசினர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கும் எம்எல்ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எம்எல்ஏ வாய்க்கு வந்தபடி பேசவே, கோபமடைந்த போலீசார் எம்எல்ஏவின் கார் வெளியே செல்ல முடியாதவாறு காவல் நிலையத்தின் கேட்டை பூட்டிவிட்டு எஸ்.பி. மயில்வாகனனுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து எஸ்.பி. மயில்வாகனன், ஏடிஎஸ்பி ஈஸ்வரன், டிஎஸ்பி சுப்பிரமணி யம் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர். போலீஸாரால் எம்எல்ஏ சிறைப்பிடிக்கப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து காவல் நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான தேமுதிக தொண்டர்களும் திரண்டனர்.

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இரவில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்ததையடுத்தும், எம்எல்ஏ தரப்பு பணிந்ததையடுத்து, அவரை காவல்துறையினர் வெளியே செல்ல அனுமதித்தனர்.

நெல்லையில் அடிக்கடி வாகனங்களில் அடிபட்டு பலியாகும் மான்கள்.

நெல்லையில் அடிக்கடி வாகனங்களில் அடிபட்டு பலியாகும் மான்கள்:  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெல்லை அருகே கங்கைகொண்டானில் மான் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான மான்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மான்கள் பூங்காவில் இருந்து வெளியேறாமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஏதாவது ஒரு பகுதியில் சேதமடைந்திருக்கும் வேலிகள் வழியாக மான்கள் பூங்காவில் இருந்து வெளியேறி வந்து விடுகின்றன.

பூங்காவானது 4 வழிச்சாலை பகுதியில் உள்ளதால் வெளியேறும் மான்கள் அந்த வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றன. வாகன ஓட்டிகள் மான்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விடுகின்றனர். நேற்று கயத்தாறு பகுதியில் ஒரு மான் வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மானை மீட்டு சிகிச்சையளித்தனர்.

இன்று காலை நெல்லை அபிஷேகப்பட்டியில் மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்தது. இதற்கு முன்பாகவும் மான்கள் வாகனத்தில் அடிபட்டு இறந்துள்ளன. தொடர்ச்சியாக மான்கள் வாகனங்களில் அடிபட்டு பலியாகி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீல நிறத்துக்கு மாறிய கிணற்றுத் தண்ணீர் ; ஆத்தூர் அருகே மக்கள் பீதி

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்:    நீல நிறத்துக்கு மாறிய கிணற்று  தண்ணீர்;    ஆத்தூர் அருகே மக்கள் பீதி

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலையோரம் உள்ள கிராமங்களில் கடந்த 21-ந் தேதி அதிகாலை நேரத்தில் திடீரென பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 2.9 ஆக பதிவாகி இருந்தது.

மேலும் பாறைகள், ஒன்றோடு, ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சக்தி என்றும் எனவே மக்கள் இதுப்பற்றி அச்சம் அடைய தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்ட மறுநாளில் பனமரத்துப்பட்டி அருகே ஒரு விவசாய தோட்டத்தில் 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுப்பற்றி காட்டுத் தீ போல் பரவியதால் பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சுமார் 10 அடி தூரத்துக்கு உள்ளே இறங்கி இருந்ததால் மக்கள் பீதி ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

மேலும் அந்த குழியில் தங்க புதையல் இருப்பதாகவும் பொதுமக்கள் பேசி கொண்டனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றி விட்டது. ஆத்தூர் அருகே உள்ள தெற்குகாடு என்ற பகுதி உள்ளது. இங்கு ராமாயி அம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்று நீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

ஊற்று கிணறான இந்த கிணற்றில் எப்போதுமே தண்ணீர் ஊறி கொண்டே இருக்கும். இன்று காலை ராமாயி அம்மாள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது கிணற்றை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கிணற்று தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. பூமி அதிர்ச்சியால் இது போல் மாறியிருக்கலாம் என்று உணர்ந்த ராமாயி அம்மாள் இதுகுறித்து அக்கம், பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ஏராளமான பேர் அங்கு திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து ராமாயி அம்மாள் கூறியதாவது:-

நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த கிணற்று நீரை தான் பயன்படுத்தி வருகிறோம். வழக்கம் போல் இன்று குடிநீர் எடுக்க சென்ற போது தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. இது போல் என்றைக்கும் இருந்தது இல்லை. எனவே கிணற்று தண்ணீரை எடுத்து சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு வித பயமாக இருக்கிறது என்றார்.

இதுப்பற்றி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சிலர் அந்த தண்ணீரை எடுத்து சோதித்து பார்த்தனர். யாரும் அந்த தண்ணீரை குடிக்கவில்லை. சேலம் மாவட்டத்தில் பூமி அதிர்ச்சிக்கு பின்னர் நிகழும் இந்த திடீர் மாற்றங்கள் மக்களை பீதியடைய செய்து இருக்கிறது.

சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி ; விஞ்ஞானிகள் தகவல்.

சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி;  விஞ்ஞானிகள் தகவல்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியில் இருந்து உற்பத்தி ஆவதாக கண்டு பிடித்துள்ளனர்.

இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிக அளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல் - அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய ராணி மேரி கல்லூரிமாணவிகள் .

முதல்- அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய மாணவிகள்: ராணி மேரி கல்லூரி முன்பு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

முதல்- அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராணி மேரி கல்லூரி வழியாகத்தான் தினமும் தலைமைச் செயலகத்திற்கு செல்வார்.

நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு தலைமைச் செயலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக ராணி மேரி கல்லூரி முன்பு முதல்வர், பேராசிரியைகள், மாணவிகள் கூடி நின்றனர்.

அங்கு திரளாக குழுமியிருந்த மாணவிகளை பார்த்ததும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தனது டிரைவரை காரை நிறுத்தச் சொன்னார். உடனே டிரைவர் காரை நிறுத்தினார்.

அப்போது மாணவிகளும் பேராசிரியைகளும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அருகே சென்று அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து, மீண்டும் முதல்-அமைச்சர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் வாழ்த்துக்களை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதா, கல்லூரி முதல்வர், பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதோடு மாணவிகள் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். முதல்- அமைச்சர் தங்களை வாழ்த்தியதை எண்ணி மாணவிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நள்ளிரவு முதல் டீசல் லிட்டருக்கு ரூ.3ம் , கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50 ம், மண்எண்ணெய்க்கு ரூ.2ம் அதிரடி விலை உயர்வு .

நள்ளிரவு முதல் லிட்டருக்கு டீசல் விலை ரூ. 3 உயர்வு

டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை உயர்த்துவதற்காக மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தை கூட்டுமாறு நீண்ட காலமாகவே பெட்ரோலியத் துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில், மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தை இன்று மத்திய அரசு கூட்டியது .

இதையடுத்து டீசல் லிட்டருக்கு விலை ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது இன்று 24-06-2011 நள்ளிரவு முதல் அமல் ஆகிறது, மேலும் சமையல் கியாஸ் சிலிண்ட
ருக்கு விலை ரூ.50ம், மண்எண்ணெய் லிட்டருக்கு விலை ரூ.2ம் மத்திய அரசு விலை உயர்த்தி உள்ளது.


காங்கிரஸ் அரசு பத்தாவது முறையாக
இந்த விலை ஏற்றத்தினைச்
செய்துள்ளது. இன்னும் எத்தனை முறை விலை ஏறுமோ?



எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன என்பதும் தவறான செய்தியாகும்.

இந்தியாவின் பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு 2010 - 11ம் நிதியாண்டில் வரி போக கிடைத்த நிகரலாபம் :

IOC க்கு 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.5294 கோடி,

HPCL 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.2142.22 கோடி,

BPCL 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.2148 கோடி,

இதன் மூலம் அரசுக்கு கிடைத்து வரி ரூ.2340.22 கோடி ஆகும்.

ஆக 2010 - 11ல் அரசுக்கும் எண்ணெய் நிறுவணங்களுக்கும் கிடைத்த நிகர இலாபம் ரூ.11,924.44 கோடி ஆகும்.


பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? அரசின் மோசடி - ஒரு விரிவான அலசல். http://vaiarulmozhi.blogspot.com/2011/06/blog-post_3331.html