Saturday, June 25, 2011

நீல நிறத்துக்கு மாறிய கிணற்றுத் தண்ணீர் ; ஆத்தூர் அருகே மக்கள் பீதி

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்:    நீல நிறத்துக்கு மாறிய கிணற்று  தண்ணீர்;    ஆத்தூர் அருகே மக்கள் பீதி

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலையோரம் உள்ள கிராமங்களில் கடந்த 21-ந் தேதி அதிகாலை நேரத்தில் திடீரென பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 2.9 ஆக பதிவாகி இருந்தது.

மேலும் பாறைகள், ஒன்றோடு, ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சக்தி என்றும் எனவே மக்கள் இதுப்பற்றி அச்சம் அடைய தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்ட மறுநாளில் பனமரத்துப்பட்டி அருகே ஒரு விவசாய தோட்டத்தில் 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுப்பற்றி காட்டுத் தீ போல் பரவியதால் பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சுமார் 10 அடி தூரத்துக்கு உள்ளே இறங்கி இருந்ததால் மக்கள் பீதி ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

மேலும் அந்த குழியில் தங்க புதையல் இருப்பதாகவும் பொதுமக்கள் பேசி கொண்டனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றி விட்டது. ஆத்தூர் அருகே உள்ள தெற்குகாடு என்ற பகுதி உள்ளது. இங்கு ராமாயி அம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்று நீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

ஊற்று கிணறான இந்த கிணற்றில் எப்போதுமே தண்ணீர் ஊறி கொண்டே இருக்கும். இன்று காலை ராமாயி அம்மாள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது கிணற்றை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கிணற்று தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. பூமி அதிர்ச்சியால் இது போல் மாறியிருக்கலாம் என்று உணர்ந்த ராமாயி அம்மாள் இதுகுறித்து அக்கம், பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ஏராளமான பேர் அங்கு திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து ராமாயி அம்மாள் கூறியதாவது:-

நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த கிணற்று நீரை தான் பயன்படுத்தி வருகிறோம். வழக்கம் போல் இன்று குடிநீர் எடுக்க சென்ற போது தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. இது போல் என்றைக்கும் இருந்தது இல்லை. எனவே கிணற்று தண்ணீரை எடுத்து சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு வித பயமாக இருக்கிறது என்றார்.

இதுப்பற்றி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சிலர் அந்த தண்ணீரை எடுத்து சோதித்து பார்த்தனர். யாரும் அந்த தண்ணீரை குடிக்கவில்லை. சேலம் மாவட்டத்தில் பூமி அதிர்ச்சிக்கு பின்னர் நிகழும் இந்த திடீர் மாற்றங்கள் மக்களை பீதியடைய செய்து இருக்கிறது.

No comments: