Wednesday, May 4, 2011

பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - அமெரிக்கா.


பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை வேட்டையாடியதற்காக அந்த நாட்டிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. பின்லேடன் குறித்த தகவலை பாகிஸ்தானிடம் முன்பே கூறியிருந்தால் அவனை தப்ப விட்டிருப்பார்கள். பாகிஸ்தானை நம்பாததால்தான் நாங்களே நேரடியாக நடவடிக்கையில் இறங்கினோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், பின்லேடன் வேட்டைக்காக நாங்கள் மன்னிப்பு கேட்க மாட்டோம். அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி பின்லேடன். பல அப்பாவிகளின் உயிரை எடுத்தவன். இப்படிப்பட்டவனை கொன்றதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.

அமெரிக்கா ஒருபோதும் இஸ்லாமுடன் போரிட்டதில்லை. இப்போது நடந்திருப்பதும் கூட இஸ்லாமுக்கு எதிரான போர் அல்ல. இதை ஏற்கனவே அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷும் தெளிவாக கூறியுள்ளார். அதிபர் ஒபாமாவும் தெளிவுபடுத்தியுள்ளார். பின்லேடன் ஒரு முஸ்லீம் தலைவர் அல்ல. ஏராளமான முஸ்லீம்களின் உயிரைப் பறித்தவன் பின்லேடன். அதேபோல பல்வேறு மதத்தவர்களின் உயிரையும் பறித்தவன்.

பாகிஸ்தானில் உள்ள முஸ்லீ்ம்கள், பிற நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்களின் ஒத்துழைப்புடன்தான் இதை எங்களால் சாதிக்க முடிந்தது. உலகெங்கும் வாழும் முஸ்லீ்ம்கள் அல் கொய்தா தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்து வரும் ஒத்துழைப்பினால்தான் இதை செய்ய முடிந்தது. அமெரிக்கர்களையும், அமெரிக்காவையும் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை என்றார் அவர்.

No comments: