Monday, May 9, 2011

கனிமொழி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மனு செய்கிறார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி திமுக ராஜ்யசபா எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மனு தாக்கல் செய்யவுள்ளார்.

மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வரும்போது தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரவுள்ளார் கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கடுமையான குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார் கனிமொழி. அவரை கூட்டுச் சதியாளராக சிபிஐ வழக்கில் சேர்த்துள்ளது. அவர் தவிர கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி, குஸேகான் ரியால்ட்டியின் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் 6ம் தேதி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் கனிமொழி. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, கனிமொழி ஒரு பெண், எம்.பி. முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அவரைப் பழிவாங்க வழக்கில் சேர்த்துள்ளனர். அவருக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பில்லை. எல்லாவற்றுக்கும் ராசாதான் காரணம். அவர்தான் பொறுப்பு என்று வாதிட்டார்.

கனிமொழி சார்பில் முன்ஜாமீன் கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை 7ம் தேதியும் நடந்தது. விசாரணைக்குப் பின்னர் மனு மீதான தீர்ப்பை மே 14ம் தேதி வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரவுள்ளார் கனிமொழி.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாவது நினைவு இருக்கலாம்.

No comments: