Monday, August 1, 2011

காந்திய வழியில் செல்லும் நாம் ஆயுதம் தயாரிப்பது ஏன்? மாணவியின் கேள்விக்கு அப்துல்கலாம் பதில்.

காந்திய வழியில் செல்லும் நாம் ஆயுதம் தயாரிப்பது ஏன்? மாணவி கேள்விக்கு அப்துல்கலாம் பதில்

கோவை பாலக்காடு மெயின் ரோடு நவக்கரையில் ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் யூத் மீட் - 2011 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஏ.ஜே.கே. கல்லூரி தலைவர் லால்மோகன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் அஜ¤த்குமார் லால் மோகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது. :-

நான் கடந்த 10 ஆண்டுகளில் 11 மில்லியன் இளைஞர்களை சந்தித்து உள்ளேன். அதில் அதிகமான இளைஞர்கள் தனித் தன்மையுடன் விளங்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு விளங்க வேண்டுமானால் உடனடியாக தனித் தன்மை கிடைத்து விடாது. அதற்கு கடுமையாக போராட வேண்டும். மாணவர்கள் 4 திட்டங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

பெரிய அளவிலான குறிக்கோள், தொடர்ச்சியான அறிவு தேடல், கடின உழைப்பு, பொறுமை. இந்த 4 குறிக்கோளோடு செயல்பட்டால் தனித் தன்மையோடு செயல் பட முடியும். செல்போன் கண்டுபிடித்த கிரகம்பெல், மின்சார பல்பு கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்தை கண்டு பிடித்த ஸ்ரீதரன் போல் ஒவ்வொரு மாணவரிடமும் கண்டு பிடிப்பு எண்ணங்கள் வளர வேண்டும்.

2020 - ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என ஒவ்வொரு மாணவரும் ஆசைப்படுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரத்தில் முன்னேற ஒவ்வொரு மாணவரும் தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

பின்னர் அப்துல் கலாமிடம் 3 மாணவிகள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி:-நாம் காந்திய வழியில் செல்கிறோம். ஏன் ஆயுதம் தயாரிக்க வேண்டும்.

அப்துல்கலாம் பதில்:- அண்டை நாடுகள் ஆயுதங்களை பெரிய அளவில் தயாரித்து வைத்துள்ளது. நாம் சும்மா இருக்க முடியாது. நாமும் தயாரித்து வைத்து கொள்வோம். நாம் அதை முதலில் பயன்படுத்த மாட்டோம். பிற நாடுகள் தாக்குதல் நடத்தும் போது பயன்படுத்தவே இந்த ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளோம்.

கேள்வி:- வெளி நாடுகளில் இருந்து யூரேனியம் கிடைப்பதில்லையே?

அப்துல் கலாம்:- இந்தியாவில் தற்போது தேவையான அளவு யூரேனியம் உள்ளது. தட்டுப்பாடு இல்லை.

கேள்வி :- இந்தியாவில் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை கூடுதலாக உள்ளதே?

அப்துல் கலாம் :- பெண்கள் தான் அதிக அளவில் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேறி வருகிறார்கள். செக்ஸ் கொடுமையை தடுக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு நாளும் சுமார் 1 மணி நேரம் நல்லொழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். இது வருங்காலத்தில் செக்ஸ் கொடுமையை தடுக்க வழி வகுக்கும்.

என்று கூறினார்.

No comments: