Saturday, May 14, 2011

கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது ; கி.வீரமணி.


அரசியல் மட்டுமே தி.மு.க.வின் களமல்ல என்று சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத்தக்கவை வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான அனைவருக்கும். வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

இந்தத் தோல்வி, தி.மு.க. அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், “ஆம்” என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று! இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

"இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று சிரித்துக் கொண்டே கருணாநிதி சொன்னார் நேற்று! எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967 இல் காமராசர்கூட தோற்ற நிலையில், “சாதனைகளை அதிகமாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற்கடித்தார்கள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்” என்றார்!

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட்டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்டசபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட்டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார். அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது ; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.விற்குப் பல களங்கள் உண்டே!

கருணாநிதிக்கு, “ஓய்வு” என்பது சட்டசபை ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம், களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன. வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

திராவிடர் தமிழர் இனமானப் பிரச்சினைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக்கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்! இவற்றில் சாதிக்கப்பட வேண்டியவை நிரம்பவே உண்டு. அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப்பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல்படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்? அரசியல் நாகரீகப்படி நமது வாழ்த்துக்கள்.

இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

4 comments:

vijayan said...

திரு.கி.வீரமணி அவர்கள் தம்முடைய திருவாயால் காமராசர் பெயரை எல்லாம் சொல்லவேண்டாம் என்று அவர் பாதம் தொட்டு கேட்டுகொள்கிறேன்.

Yoga.s.FR said...

///சென்று வா தலைவா நீயும்/// முடியதும் உதிர்ந்து போக மூப்பினுக்கு அடிமை யாகி நடையதும் இழந்து நொந்து நாற்காலியே தஞ்ச மென்று ஆயிரம் பிறையைக் கண்ட அண்ணலே கலைஞர் ஏறே!


கடிகமழ் தமிழ் அன்னை தன்னை
கட்டியே அணைத்து நீயும்
முடிவினில் மூச்சடங்கு மட்டும்
முத்தமிழினைக் காப்பேன் என்று
துறவிகள் அணியும் தூய
மஞ்சள் துண்டினை சால்வையாக்கி
செஞ் சொல்லால் மாலை கட்டி
சிறப்புறு மகுடம் சூட்டி
செய்தனை சிறந்த தொண்டு
பாலற்கு முட்டை தந்து
பள்ளியில் படிக்க வைத்தாய்
ஒரு கொத்து அரிசி தன்னை
ஒரு ரூபாய்க்கு உண்ணத் தந்து
செம்மொழி தமிழே என்று
செகத்தினிற்கு எடுத்து ரைத்து
அலைகடல் ஆற்பரித்த தென்ன
ஆர்ப்பரித்து முழக்க மிட்டு
ஒரு கோடி மக்கள் தங்கள்
உள்ளத்தினில் கோயில் கொண்டாய்
அன்பினில் அடக்கம் தன்னில்
அறிவினில் மேதையான
அறிஞராம் அண்ணா கண்ட
அற்புதத் தொண்டனே கேள்!
முடிதனை இழந்தாய் இன்று
முத்தமிழ் இரங்கி நோக்க
அலைகடற் கப்பால் உள்ளோர்
அதிர்ந்தனர் உன் தோல்வி கேட்டு
ஐயனே மக்கள் உன்னை
அதிரடியாய் அகற்றி விட்டு
அம்மைக்கு அரசு ஓச்ச
அளித்தனர் வாக்கை என்றால்
உண்மையில் உனது வீழ்ச்சி
உணர்த்திடும் உண்மை கேளாய்
குடை நிழல் இருந்து நீயும்
குஞ்சரம் ஊர்ந்த வேளை
நீதியை தூக்கி லிட்டு
நிம்மதி கண்டாய் என்றும்
இலஞ்சமும் ஊழல் தொட்டு
நிகரிலா கோடி செல்வம்
பெற்றதைக் குடும்பத்தார்க்கு
பிரித்து நீ தந்தா யென்றும்
செல்வத்தில் நின் குடும்பம்
சீரொடு திகழ வைத்தாயென்றும்
அண்டையில் ஈழம் தன்னில் மக்கள்
அழுதிடும் தமிழ்க் குரலைக் கூட
மெள்ள நீ கேட்டிடாது
மெதுவாகப் பேசினாய் என்று
மேடையில் முழக்க மிட்டார்
மெல்லவே மக்கள் கேட்டார்
போய்வா! தலைவா! என்று
பொன் முடி அகற்றி விட்டார்
சால்வையை மட்டுமல்ல
சரிவர மஞ்சள் கட்டி
போதுமினி அரசியல் என்று
புகன்றொரு பாட்டெழுதி விட்டு
கானகம் தன்னை நோக்கி
கையிலோர் பொல்லு மேந்தி
பொல்லூண்டி மண்மேல்
பல்லாண்டு நீடுழி வாழி! நன்றி:உதயன்,யாழ்

பாலா said...
This comment has been removed by the author.
பாலா said...

கருத்து சொல்லறேன் கருமம் சொல்லறேன்னு உசுரு எடுத்தது போதும் ..........போய் கல்லாவ காப்பாத்திக்க பாருங்க