Monday, June 27, 2011

சீனாவை சேர்ந்த "டிங்டிங்' கிற்கு தேவகோட்டையில் "டும் டும் டும்'.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமது கவனத்திற்கு தெரிந்து இரண்டு சீனப்பெண்கள் தமிழ்நாட்டு மருமகள்களாகியுள்ளனர். வாழ்த்துவோம்!



ஜூன் 27,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சீனாவைச் சேர்ந்த பெண், "டிங்டிங்' கிற்கு, இந்திய கலாசாரப்படி, "டும் டும் டும்' நடந்தது. தேவகோட்டையைச் சேர்ந்த சேதுக்கரசு - காளியம்மாள் தம்பதிகளின் மகன் லெட்சுமண பெருமாள், 29; சிங்கப்பூரில் பொறியாளராக உள்ளார். அந்நிறுவனத்தில், சீனாவைச் சேர்ந்த உபென்ஜிசியங் - சன்சான்குவா தம்பதியரின் மகள், டிங்டிங், 26, பணிபுரிந்தார். அங்கு, இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது.

நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் முடிக்க எண்ணினர். ஒப்புதல் கிடைத்ததும் இந்திய கலாசாரப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். மணமகளுக்கு, இந்தியா வர கடந்த வாரம் விசா கிடைத்தது. இருவரும் திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், தேவகோட்டை வந்தனர். நேற்று, இருவருக்கும் திருமணம் நடந்தது.

இது குறித்து மணமகள் டிங்டிங் கூறுகையில், "தமிழ் இணையதளம் மூலம் தமிழ் கற்றுவருகிறேன். சீன முறைப்படி மோதிரம் மாற்றுவதோடு திருமணம் முடிந்துவிடும். தமிழக கலாசாரம் என்னை அதிகளவில் ஈர்த்துவிட்டது. என் பெற்றோருக்கு விசா கிடைக்காததால், என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தனர். இந்திய குடும்பத்தில் ஒருவராக நான் மாறியிருப்பது, எனக்கு பெருமையை தருகிறது' என்றார்.


இவருக்கு முன்பே ஜூன் 21ல், சேலம்மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில்ராஜாவிற்கும், சீன நாட்டின் ஜுயாங்ஷு மாநிலத்தை சேர்ந்த ஆத்திங் என்கிற ஹுசென்திங்கிற்கும் பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்து முறைப்படி, திருமணம் நடைபெற்றது.



மணமக்கள் சீனாவிலுள்ள கே.ஜே.கே., குரூப் கம்பெனியின், என்டெக் ஜுவல்லரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் திருமணத்துக்கு, இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

No comments: