Monday, June 27, 2011

போலீசாருக்கு சவால் விடும் போலி அடகு கடைகள்.

போலீசாருக்கு சவால் விடும் போலி அடகு கடைகள்

கோவையில் காலம் காலமாக தொழில் செய்து வரும் நல்ல அடகு கடைக்காரர் களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போலி அடகு கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

போலி அடகு கடை உரிமையாளர்கள் ஒரு இடத்தில் நிலையாக தொழில் செய்வதில்லை. 6 மாதம் ஒரு இடம் என்று மாற்றி அமைத்து கொள்கிறார்கள். கொள்ளையர்களுடன் கூட்டணி வைத்து திருட்டு நகைகளை வாங்கி குவிக்கிறார்கள்.

அரசு அனுமதியுடன் நியாயமான வட்டிக்கு நகைகளை அடகு பிடிக்கும் கடைகளில் அரசு விதிப்படி நகை கொடுப்பவரின் விவரம், நகையின் எடை,ரசீது, அடகு நகை கொண்டு வருபவர் நம்பிக்கையானவரா? என்று சரிபார்க்கப்படுகிறது.

ஆனால் போலி அடகு கடைக்காரர்கள் இது போன்று எதையும் சரிபார்ப்பது இல்லை. தைரியமாக திருட்டு நகைகளையும், வெள்ளி பொருட்களையும்,பித்தளை பாத்திரங்களையும் அடகு பிடிக்கின்றனர். போலீசாரிடம் சிக்கி கொண்டால் தெரியாமல் வாங்கி விட்டோம். பொருளை எடுத்து செல்லுங்கள். எங்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கெஞ்சுகின்றனர்.

இத்தகைய போலி அடகு கடைக்காரர்கள்தான் நகரில் திருட்டு சம்பவங்கள் நடைபெற காரணமாக இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களது இந்த சமூக விரோத செயல்பாட்டால் நீண்ட காலமாக நியாயமாக தொழில் செய்யும் அடகு கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட நகை அடகு கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நாராயணன் கூறியதாவது:-

திருட்டு நகைகளை எல்லா அடகு கடைகளிலும் வாங்குவதில்லை. குறிப்பாக எங்களது சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அடகு கடைகள் அனைத்தும் முறையான அரசு உரிமம் பெற்று சட்டப்படி தொழில் செய்து வருகின்றோம்.

சமீபத்தில் கோவையில் நடந்து வரும் நகை திருட்டு வழக்குகள் எதிலும் எங்கள் உறுப்பினர்களின் அடகு கடைகள் சம்பந்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
எனவே கொள்ளையர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலீசுக்கு சவால் விடும் போலி அடகு கடைகளை கண்டறிந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் திருட்டு குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

No comments: