Saturday, May 28, 2011

ரூ.2400 கோடி கடன் : எரிபொருள் நிறுத்தம் , ஏர் இந்தியா விமானங்கள் ரத்து !


ரூ.2400 கோடி வரையிலான கடன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எரிபொருள் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று திடீரென நிறுத்தின. இதனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், மாலையில் நிலைமை சீரானது.

விமானங்களை இயக்குவதற்கு பெட்ரோல் கலந்த 'ஏவியேசன் டர்பைன் ஃப்யூயல்' (ஏடிஎப்) என்ற எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விமான நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. மத்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு தேவையான 63 சதவீத எரிபொருளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்குகிறது.

தனியார் விமான நிறுவனங்களுக்கு கிலோ லிட்டருக்கு ரூ.1800 வரை சலுகையையும் பணம் செலுத்த 90 நாள் வரை அவகாசமும் அளிக்கப்படுகின்றன.

இதே போன்ற சலுகையை அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனமும் கோரிக்கை விடுத்தது. எனவே, மத்திய மந்திரிசபை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்பட்டது.

ரூ.2400 கோடி கடன்

அதைத் தொடர்ந்து, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.5 ஆயிரம் வரை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டது. அதன்படி, தினந்தோறும் ரூ.18 கோடியே 50 லட்சம் வரை எரிபொருளுக்கு ஏர் இந்தியா வழங்க வேண்டும். ஆனால், சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே செலுத்தி வந்தது. இதனால், கடந்த ஒரு ஆண்டாக பெரும் கடன் தொகை நிலுவையில் உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி வரை ஏர் இந்தியாவுக்கு பாக்கி உள்ளது. அதற்கான வட்டியையும் சேர்த்தால் ரூ.2400 கோடி ஆகிறது. இதுபோல, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.300 கோடி வரை ஏர் இந்தியா நிறுவனம் கடன் வைத்துள்ளது.

விமானங்கள் ரத்து

தொடர்ந்து கடன் தொகை அதிகரித்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தன. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான எரிபொருள் வழங்குவதை திடீரென நிறுத்தின. குறிப்பாக கோழிக்கோடு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் எரிபொருள் சப்ளை செய்யப்படவில்லை.

"தனியார் விமான நிறுவனங்கள் அனைத்தும் வங்கி உத்தரவாதத்தை அளித்து தான் 90 நாள் வரை கால அவகாசத்தை பெறுகின்றன. தொடர்ந்து சலுகைகளை கேட்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இந்த தகவல் தெரியுமா?", என எண்ணெய் நிறுவனங்கள் கேள்வி எழுப்பின.

இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. திருவனந்தபுரத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 விமானங்கள் ரத்தாகின.

மீண்டும் எரிபொருள் சப்ளை

உடனடியாக எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டகால், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் நேற்று மாலை முதல் மீண்டும் எரிபொருள் சப்ளை செய்தன. எனவே விமானங்கள் வழக்கம்போல இயங்கின.

No comments: