Monday, April 11, 2011

துரோகத்தை சாய்க்கும் வகையில் மதிமுக தொண்டர்களின தீர்ப்பு இருக்கும் : நாஞ்சில்சம்பத்.


அதிமுகவின் துரோகத்தை சாய்க்கும் வகையில் தேர்தலின்போது மதிமுக தொண்டர்கள் முடிவெடுப்பார்கள் என, மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

நாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இணைந்திருந்த எங்களை எந்த காரணமும் இல்லாமல் கழட்டிவிட்ட காரணத்தை இதுவரை ஜெயலலிதா கூறவில்லை. அதிமுகவின் துரோகத்தை மறக்காத மதிமுக தொண்டர்கள் தேர்தலில் தக்க முடிவு எடுப்பார்கள்.

எங்கள் மனச்சாட்சிப் படி நாங்கள் வாக்களிப்போம். ஆனால் எங்களை இழந்தவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்படுகிற வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும். எதை வேண்டுமானாலும் நாங்கள் மன்னிப்போம். துரோகத்தை மன்னிக்க மாட்டோம். துரோகத்தை சாய்ப்பதற்கு எங்கள் தோழர்கள் முடிவு எடுப்பார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த ஆலையின் அதிபர் வைகோவை சந்தித்து சரிகட்டிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் வைகோ அவரை சந்திக்க வைகோ முன்வரவில்லை. வைகோவின் குரலும், வைகோவின் சகாக்களின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதால், அந்த ஆலை அதிபரின் பணம் சிலருக்கு போயுள்ளது என்றார்

No comments: