Saturday, July 2, 2011

கைகளை சங்கிலியால் கட்டி, மனநோயாளிகளுடன் அடைத்ததால் நரக வேதனையில் இருந்தோம் : விடுதலையான மீனவர்கள் பேட்டி.

கைகளை சங்கிலியால் கட்டி இழுத்து சென்று மனநோயாளிகளுடன் அடைத்ததால் நரக வேதனையில் இருந்தோம்: விடுதலையான ராமேசுவரம் மீனவர்கள் கண்ணீர் பேட்டி

ராமேசுவரத்தில் இருந்து ஜூன் மாதம் 20-ந்தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 5 படகுகளுடன் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய முதல்- அமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மீனவர்களை விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும் மன்னார் நீதிமன்றம் 29-ந்தேதி விடுதலை செய்தது. பின்னர் 23 மீனவர்களையும் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மீனவர்கள் 23 பேரும் நேற்று மாலை மண்டபம் கடலோர காவல்படை நிலையம் வந்து சேர்ந்தனர். மீனவர்களை கண்டதும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். விடுதலையான மீனவர்களில் விஜயன் என்பவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

மன்னார் போலீசார் எங்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வவுனியா சிறைக்கு கொண்டு செல்ல போர் குற்றவாளிபோல எங்கள் கைகளில் சங்கிலியால் கட்டி இழுத்து சென்றனர். வவுனியா சிறையில் 2 நாள் தங்கி இருந்தோம்.

பின்னர் அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். அங்கு எங்களுடன் மனநலம் பாதித்த நோயாளிகள் சிலரையும் அடைத்தனர். சில நேரங்களில் அவர்கள் அலறி சத்தம் போடுவார்கள். இதனால் இரவில் தூங்க முடியாமல் நரக வேதனை அடைந்தோம். மனநோயாளிகளுடன் எங்களை அடைத்து வைத்து இலங்கை போலீசார் அவ மானப்படுத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல மேலும் சில மீனவர்கள் கண்ணீர் மல்க கூறும்போது, இலங்கை சிறையில் கடும் துயரம் அடைந்தோம் என்றனர்.

No comments: