Friday, June 17, 2011

சமச்சீர் கல்விக்கான நிபுணர் குழு விவரம்.



கடந்த ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி புதிதாக பதவி ஏற்ற தமிழக அரசு நிறுத்தி வைத்தது. சட்டசபையில் இதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இக்பால் வழக்கை விசாரித்து தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்கால தடை விதித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அதில் ஐகோர்ட்டின் இடைக்கால தடையை நீக்குமாறு கூறியிருந்தது.

அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்றும் மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி நிபுணர் குழு ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய நிபுணர் குழு இன்று அறிவிக்கப்பட்டது.

நடப்புக் கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 9, 10 வகுப்புகளுக்கு இதை அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு இன்று அறிவிக்கப்பட்டது.

குழு விவரம்:

1. குழுத் தலைவர் - தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி
2. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா
3. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வசுந்தரா தேவி
4 மத்திய இடைநிலைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குநர் ஜி.பாபசுப்ரமணியன்
5. சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிக் பள்ளி முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி
6. கோபாலபுரம் டிஏவி பள்ளி நிறுவனர் ஜெயதேவ்
7. பத்மா சேஷாத்ரி பள்ளி இயக்குநர் திருமதி ஒய்ஜி பாராத்திசராதி
8. தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன பேராசிரியர் பி.கே. திரிபாதி
9. பேராசிரியர் அனில் சேத்தி

இந்தக் குழுவினர் 2 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஒரு வாரத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை 1, 6 ஆகிய வகுப்புகளைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகம் வைத்து பாடம் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த இரு வகுப்புகளுக்கும் 18 லட்சம் பாடப் புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டன. இந்த பாட புத்தகங்களின் பின்பக்க அட்டையில் செம்மொழி மாநாட்டு சின்னமான திருவள்ளுவர் உருவ படம் மற்றும் இலக்கிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த பக்கத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பற்றிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றையும் நீக்கி விட்டு வழங்க முடிவு செய்துள்ளது.

No comments: