Tuesday, May 17, 2011

ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை - நடிகர் வடிவேலு வீடு தாக்குதல்.

தாம்பரம் படப்பையில் உள்ள  நடிகர் வடிவேலு பண்ணை  வீட்டில் தாக்குதல்;  ஜன்னல்கள் உடைப்பு

சட்டமன்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார்.தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதால் சென்னை சாலி கிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவின் பண்ணை வீட்டில் திடீர் தாக்குதல் நடந்து உள்ளது. இந்த பண்ணை வீடு தாம்பரம் அருகேயுள்ள படப்பை புஷ்பகிரி பகுதியில் இருக்கிறது. மாமர தோப்புகள் மத்தியில் இவ்வீடு கட்டப்பட்டு உள்ளது. பண்ணை வீட்டில் வேலு என்பவர் காவலாளியாக வேலை பார்க்கிறார்.இவர் தனது குடும்பத்தினருடன் தோப்பில் தனி வீட்டில் வசிக்கிறார்.

நேற்று மாலை இந்த பண்ணை வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வந்தனர். வீட்டை அவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்தனர். வீட்டில் 6 கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்து நொறுக்கினார்கள். காவலாளி வேலுவுக்கும் மிரட்டல் விடுத்தனர். அவரிடம் வடிவேலுவின் செல்போன் நம்பரை கொடுக்குமாறு கேட்டனர். அவர் தெரியாது என்றார்.

உடனே மர்ம ஆசாமிகள் வேலுவின் செல்போனை வாங்கி அதில் வடிவேலு நம்பர் இருக்கிறதா என்று தேடி பார்த்தனர். அதில் வடிவேலு எண் இல்லாததால் மீண்டும் அதை வேலுவிடம் கொடுத்தனர்.

வருகிற சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்து விடவேண்டும். இல்லா விட்டால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று விட்டார்கள். இது குறித்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

1 comment:

பொன் மாலை பொழுது said...

சட்டம் ஒழுங்கள் முதலில் சரி செய்வேன் என்றார் புதிதாக பதவியேற்ற முதலமைச்சர்!