Sunday, May 1, 2011

பாலசந்தருக்கு முதல்வர் வாழ்த்து.


சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் பாலசந்தருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் தொடர்ந்து ஒளி வீசி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தயாரித்தவர் பாலசந்தர்.

பல படங்களுக்கு ஏற்கெனவே தேசிய விருதுகளும், பத்மஸ்ரீ விருதும், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். தமிழ் திரையுலகில் பழுத்த அனுபவம் பெற்றவர் அவர், திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தனது சீரிய பங்கை வழங்கியமைக்காக மத்திய அரசு 2010-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதினை அவருக்கு அறிவித்திருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியாகும்.

அந்த விருதைப் பெறும் முதல் தமிழ் இயக்குநர் என்பதும் கூடுதல் சிறப்பாகும். புதிய சிந்தனைகளை பாய்ச்சி திருப்பு முனையை ஏற்படுத்தியவர். நம் சினிமாவில் அவர் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை மறுத்திட இயலாது.

இந்த விருதின் மூலம் இந்திய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்திருப்பது கண்டு என் உள்ளம் பேருவகை கொள்கிறது. பாலசந்தருக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நேரில் சந்திப்பு: இதனிடையே, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் இயக்குநர் பாலசந்தர். அப்போது கவிஞர் வைரமுத்து உடனிருந்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குநர் பாலசந்தரை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

காங்கிரஸ் வாழ்த்து: இயக்குநர் பாலசந்தருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு வாழ்த்துத் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்தியில்,""45 ஆண்டுகால அவரது திரைப்படத் துறை சாதனைகள் அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளன. தமிழ் மொழியில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட அவர் இயக்கிய திரைப்படங்கள் சமூகச் சிந்தனையோடு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவை.

தாதா சாகேப் பால்கே விருது அவரது திரைப்பட ஆற்றலுக்குக் கிடைத்த மகத்தான விருது என்றாலும் அது தமிழகத்துக்கே கிடைத்த பெருமை'' என்று கூறியுள்ளார்.

"நிறைய படங்களை இயக்க ஆர்வம்'

பால்கே விருது அறிவிப்பு இன்னும் நிறைய படங்களை இயக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குநர் பாலசந்தர் தெரிவித்தார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றதையடுத்து முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற பின், செய்தியாளர்களிடம் இயக்குநர் பாலசந்தர் கூறியது:

பெரும்பாலும் வட பகுதிகளில் உள்ளவர்களுக்கே இந்த விருது கிடைத்து வந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது.

ஒரு இயக்குநராக எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த விருது மேலும் உற்சாகத்தையும், இன்னும் நிறைய படங்களை இயக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விருது எனக்குக் கிடைத்தமைக்காக, தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன், அனைத்து தமிழர்களுக்கும் என நன்றியை காணிக்கை ஆக்குகிறேன் என்றார்.

No comments: