Monday, June 6, 2011

இனப்படுகொலை ; ராணுவத்தளபதிக்கு 30 ஆண்டு சிறை : இலங்கை முன்னாள் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு.


ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதி்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994-ம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் துட்சி மற்றும் ஹுட்டு இனத்தைச் சேர்ந்தவர்கள். ருவாண்டா இனப்படுகொலையில் முக்கியப் பங்கு வகித்த அப்போதைய ராணுவத் தளபதி பிசிமுங்கு 2002-ம் ஆண்டு, அங்கோலா நாட்டில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிசிமுங்கு உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதில், 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை 395 நாட்கள் நடைபெற்ற நிலையில், 1994-ல் ராணுவத் தளபதியாக இருந்த அகஸ்டின் பிசிமுங்குவுக்கு 30 ஆண்டுக் சிறைத் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், இனப்படுகொலை குற்றச்சாட்டில் ருவாண்டா ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: