Monday, June 6, 2011

பாபா ராம்தேவ்விடம் ரூ.1000 கோடி சொத்து.


ஊழலுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா ராம்தேவ்வுக்கு எதிராகவே சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.

10 வருடத்துக்கு முன்பு சாதாரண நிலையில் இருந்த அவருக்கு தற்போது பல கோடி ரூபாய் வந்தது எப்படி? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாபா ராம்தேவ் அரியானா மாநிலம் அலிசையத்பூர் கிராமத்தில் 1965ம் ஆண்டு பிறந்தார்.

இவருடைய தந்தை ராம்நிவாஷ்யாதவ், சாதாரண விவசாயி. ராம்தேவ் 9 வயதில் கான்பூர் என்ற கிராமத்துக்கு சென்று அங்குள்ள பள்ளியில் படித்தார். அவர் 9 வயதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

கான்பூர் பள்ளியில் சமஸ்கிருதம் மற்றும் யோகாசனம் படிப்புகளை படித்த அவர் யோகாசனத்தில் தீவிர ஆர்வம் காட்டி சாமியாராக மாறினார். 1995-ம் ஆண்டு திவய் யோகா மந்திர் என்ற அமைப்பை ஏற்படுத்தி யோகாசனங்களை கற்றுக்கொடுத்தார்.

2003-ம் ஆண்டு ஆஸ்தா டி.வி.யில் காலையில் யோகாசனம் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதன்மூலம் தான் அவர் பிரபலமானார். அதன்பிறகு அவருக்கு சொத்து குவியத் தொடங்கியது. தற்போது அவரிடம் ரூ.1000 கோடி சொத்துக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்டம் மாநிலம் ஹரித்துவாரில் அவர் அமைத்துள்ள பதஞ்சலி யோகாபீடம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு 300 படுக்கை கொண்ட ஆயுர்வேத ஆஸ்பத்திரி, யோகாசனம் ஆராய்ச்சி மையம், பல்கலைக்கழகம், உணவுக்கூடம், அழகு சாதன பொருட்கள் தொழிற்சாலை ஆகியவை உள்ளன.

பாபா ராம்தேவ் முன்பு யோகாசனம் நிகழ்ச்சி நடத்தி வந்த ஆஸ்தா டி.வி.யையே தற்போது வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இத்துடன் இங்கிலாந்து அருகே உள்ள ஒரு குட்டி தீவையே ராம்தேவ் விலைக்கு வாங்கியிருக்கிறார்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் தனி விமானம் மற்றும் தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார். இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்பது எல்லோருக்குமே ஆச்சரியத்தை கொடுக்கிறது.

ராம்தேவ் பற்றி அவருக்கு நன்கு தெரிந்தவர்கள் கூறும்போது, ராம்தேவ் 10 வருடத்திற்கு முன்பு ஒரு ஓட்டை சைக்கிளில் சுற்றி வந்தார். அந்த சைக்கிளை பழுது பார்க்ககூட அவருக்கு காசு கிடையாது. இப்போது இத்தனை கோடி சொத்து சேர்த்திருப்பது மர்மமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இதுபற்றி ராம்தேவ்விடம் கேட்டபோது, எனக்கு உலகம் முழுவதும் 5 கோடி சீடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்துதான் ஒவ்வொரு அமைப்பாக உருவாக்கி வருகிறேன். நான் எந்த முறைகேடும் செய்யவில்லை. மத்திய விசாரணை அமைப்புகளாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி எனது ஆசிரமத்தில் சோதனை போட்டு உண்மையை அறிந்து கொள்ளலாம் என்றார்.

No comments: