Sunday, May 15, 2011

சோனியா விருந்துக்கு செல்வீர்களா? : ஜெயலலிதா பதில்.


நாளை முதல்வர் பதவி ஏற்பதை முன்னிட்டு இன்று கவர்னரை சந்தித்த பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நீங்கள் ராஜ் பவனுக்கு வருகை தந்தது பற்றி...?

நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.

தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சப்பட தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.

சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்கு அழைத்து இருக்கிறாரே செல்வீர்களா?

எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலை பேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு உங்கள் பணிகளில் எதற்கு மிக முன்னுரிமைகள் வழங்குவீர்கள்?

முதலாவதாக தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலைமை உள்ளது. இதை சீர்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தொடர்ந்து தமிழத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்.

எப்போது நீங்கள் டெல்லி செல்வீர்கள்?

முதலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி. அதன் பிறகு மற்றவற்றை பார்ப்போம்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?

இது மிகுந்த துரதிருஷ்டவசமான நடவடிக்கை. மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.

பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?

நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர். அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.

No comments: