Saturday, April 23, 2011

மனைவியின் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டல் : கணவன் மீது மனைவி புகார்.

மேல்படிப்புக்காக ரூ.10 லட்சம் தராவிட்டால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர் மீது இளம்பெண் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32). கம்ப்ழூட்டர் என்ஜினீயர். இவருக்கும் மதுரை தெற்கு பெருமாள் வீதியைச் சேர்ந்த சிவகாமசுந்தரிக்கும் (28) கடந்த 2008 ம் ஆண்டில் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சிவகாமசுந்தரியின் பெற்றோர் 60 பவுன்நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் திருமண செலவுக்காக ரூ.2 லட்சம் ரொக்கமும் சீர்வரிசையாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்கள் மட்டுமே வேல்முருகன் எடமலைப்பட்டிபுதூரில் மனைவியுடன் வாழ்ந்தார். பின்னர் அவர் மேல்படிப்புக்காக லண்டனுக்கு சென்றார்.

அங்கு சென்ற பிறகு தன் மேல்படிப்புக்காக ரூ.10 லட்சம் வேண்டும் என்று சிவகாமசுந்தரியிடம் வேல்முருகன் கேட்டார். பின்னர் அந்த பணத்தை உன் பெற்றோர் வீட்டில் வாங்கி வரவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு சிவகாமசுந்தரி இவ்வளவு பெரியதொகையை எப்படி என் பெற்றோரிடம் வாங்க முடியாது என்று கூறி பிடிவாதமாக மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், பணத்தை வாங்கி வராவிட்டால், உன் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிவகாமசுந்தரி எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். அதில் லண்டனில் மேல்படிப்புக்காக என் கணவர் பெற்றோரிடம் ரூ.10 லட்சம் வாங்கி வா என்றார். அதை வாங்க முடியாது என்று கூறியதும் இண்டர்நெட்டில் என் ஆபாசபடத்தை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாகவும் அவருடைய தாயார் சந்திரா ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வரதட்சணை கொடுமை, மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மற்றும் அவருடைய தாய் சந்திரா ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக வேல்முருகன், சந்திரா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: