Friday, April 8, 2011

ம.தி.மு.க. ஆதரவு : மதுரையில் கருணாநிதி பேட்டி.

ம.தி.மு.க.வும் ஆதரவு:    தி.மு.க. கூட்டணி    வெற்றி பெறும்    மதுரையில் கருணாநிதி பேட்டி


முதல் அமைச்சர் கருணாநிதி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: மிக துல்லியமாக உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் எங்கள் அணி வெற்றி பெறும்.

கே: தி.முக. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு தருவது ஏன்?

ப: கழக அரசின் சாதனைகள். குறிப்பாக தமிழகத்தில் ஏழைகள் குடிசைகள் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு அறிவித்து 20 லட்சம் குடிசைகளை அகற்றி அவற்றுக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டன. அந்த திட்டத்தின்படி இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் காங்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளையும் கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் கட்டி முடிப்பார்கள் என்ற எண்ணம் ஏழை எளிய மக்களிடம் இருப்பதுதான் ஒரு காரணம்.

கே: சட்டசபை தேர்தலில் மின் பற்றாக்குறையை ஒரு காரணமாக வைத்து எதிர்க் கட்சிகள் பிரசாரம் செய்து வருகிறதே?

ப: மின் பற்றாக்குறை என்பது தொடர்கின்ற நிகழ்வு. தொழிற்சாலைகள், வீட்டு பயனாளிகளுக்கு தேவைப்படுகின்ற மின் சாரத்தை உற்பத்தி செய்ய முற்படும்போது மேலும் சில தொழிற்சாலைகள் வரத் தொடங்குகின்றன. தொழிற்சாலைகள் வளர, வளர மின்தேவையும் அதிகப்படுகின்றது. அதற்கேற்ப மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இடையில் அ.தி.முக. அரசு தமிழகத்தை ஆளும் நிலை ஏற்பட்டபோது மின்உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்துள்ளது.

மின் உற்பத்திக்கான திட்டங்கள் கழக ஆட்சியில் தயாரிக்கப்பட்டு தற்போது நல்ல முறைக்கு வரும் நிலை உருவாகி உள்ளது. மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தால் அந்த திட்டங்கள் வரிசையாக நிறைவேறும் போது மின் தட்டுப்பாடு அறவே அகற்றப்படும்.

கே: ம.தி.மு.க.வில் 2-ம் கட்ட தலைவர்கள் தி.மு.க. வுக்கு ஆதரவாக பேசி வருகிறார்களே? ம.தி.மு.க. தொண்டர்களுக்கு நீங்கள் என்ன கூறு விரும்புகிறீர்கள்?

ப: பல இடங்களில் ம.தி. மு.க. தொண்டர்கள் தி.மு.க. வுக்கு தங்களது ஆதரவை மானசீக ஆதரவை தருவதாக நானும் அறிகிறேன். திராவிட இயக்கங்கள் ஒன்றாக இருந்து உறுதிபட தனது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும். இடையே ஏற்பட்ட சில மாறுபாடுகளால் ஒற்றுமை குலைந்து மாற்றாருக்கு இடம் தருவதாக ஆகிவிட்டது. ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணுகிற சூழல் விரைவில் வரும். அதன் அடையாளம் தான் ம.தி. மு.க.வினர் இந்த தேர்தலில் பல இடங்களில் எங்களை ஆதரிக்கிறார்கள்.

கே: தமிழ்நாட்டை மீட்டெடுப்பேன் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசி உள்ளாரோ?

ப: அவர் முதலில் பெங்களூர் நீதிமன்றத்தில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதற்கு அடையாளமாக இருக்கும் நகைகளை முதலில் மீட்கட்டும்.

கே: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எதிராக கெடுபிடி செய்வதாக புகார் எழுந்துள்ளதே?

ப: தேர்தல் ஆணையம் என்பது தன்னை அரசியல் கட்சியின் அங்கமாக ஆக்கிக்கொள்ளலாமல் நடுநிலையாக பணிபுரிய வேண்டிய ஆணையம். நீதிமன்றத்தைப்போல அந்த ஆணையத்தை அவர்கள் நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுகிறதை காணும் போது தேர்தல் ஆணையம் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

தேர்தல் ஆணையம் எவ்வளவு கண்டிப்பாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம். கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மற்ற மாநிலங்களை போல தமிழக அரசும் ரூ.4 கோடி அளவுக்கு பரிசுகள் அறிவித்தது. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதியை நாங்கள் பெற்றுள்ளோம். கிரிக்கெட் வீரர்களுக்கோ, கிரிக்கெட் சங்கத்திற்கோ முதல்-அமைச்சர் வெகுமதியை வழங்குவதை போல படம் எடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

கே: மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதே?

ப: நான் ஒப்பிட்டு பார்க்கும்போது மத்திய மந்திரி மீது இன்றைய எதிர்க்கட்சியில் உள்ள ஜெயலலிதா மற்றும் அவரது அணியில் உள்ள எல்லோருமே கோபம் காட்டி வருகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தில் இருந்த மதுரை மாவட்டத்தில் இன்றைய மத்திய அமைச்சர் செல்வாக்கு பெறுவதும், மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை, நல்ல காரியங்களை செய்வதும் எதிர்க்கட்சி கூட்டணியினரின் வெறுப்பை வெளிபடுத்துகிறது.அதனால் அவர்கள் மத்திய அமைச்சர் மீது அடிக்கடி பொய் புகார் கூறி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை கொண்டுதான் தேர்தல் ஆணையம் இப்போது செயல்படுகிறது என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது என்பது எனது கருத்து.

கே: ஆளும் கட்சி மீது அதிகாரிகள் அதிக கெடு பிடி செய்வதாக கூறப்படுகிறதே?

ப: அரசியலில் மட்டுமல்ல. அதிகாரிகள் மட்டத்திலும் எட்டப்பர்கள் உண்டு.

கே: கோவையில் நேற்று நடந்த அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ள வில்லையே?

ப: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்துள்ளாரே?
அது மாத்திரமல்ல. அவர் பேசும்போது தி.மு.க. குடும்ப கட்சி என்று கூறி உள்ளார். தி.மு.க. குடும்ப கட்சியாக இருக்கலாம். சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி அல்ல.

கே: மத்திய மந்திரி முக.அழகிரி மாநில அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறதே?

ப: அது தாய் நாட்டின் பற்று. தமிழ்நாட்டின் மீது உள்ள பாசத்தை காட்டுகிறது. டெல்லியில் பதவியில் இருந்தாலும் அந்த பதவியை தமிழகத்திற்குதான் பயன் படுத்துகிறார்.

கே: மதுரையில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிக தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே?

ப: ஆட்சிகள் வரும். மீண்டும் திரும்பி வரும்.

கே: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் எதிர்க் கட்சிகள் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுவதாக பாராட்டுகிறார்களே?

ப: தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக நான் கூறவில்லை. சில குறிப்புகளை தெளிவுபடுத்தினேன். எதிர் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

கே: தமிழக சட்டசபை தேர்தல் முடிவு மத்தியிலும் எதிரொலிக்குமா?

ப: எதிரொலிக்கும்.

கே: தி.மு.க. தேர்தல் வாக்குறுதியான மிக்சி, கிரைண்டர் அறிவிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது?

ப: நாங்கள் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள். சிலர் அதனை காப்பி அடித்து ஜெராக்ஸ் எடுத்து படித்துள்ளார்கள். அதனை எப்படி நம்புவார்கள் என்று எனக்கு தெரியாது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய ஒன்று, இந்து மதத்தினர் தங்களுக்கு சொந்தமான இடத்திலோ புறம்போக்கு இடத்திலோ வழிபாட்டு தலங்கள் கட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதுபோல கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினர் வழிபாட்டு தலங்ககளை கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று கட்டிடம் கட்டலாம் என்பதை அரசு பரிவோடு பரிசீலிக்கும். உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்பட்டுள்ள பூலோகமாற்றம் காரணமாக சுனாமி எப்போது வேண்டுமானாலும் வரும் நிலையில் கடலோர மக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கும் வகையில் அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்க மீன்வளம் மற்றும் கடலியல் சம்பந்தப்பட்டகுழு அமைத்து ஆய்வு நடத்தி கடலோர மீனவர்கள் பாது காப்பு செயல் திட்டம் வகுக்கப்படும். ஒத்தக்கடை அருகே உள்ள யானைமலையை மத்திய அரசின் தொல்லி யல் துறை எடுத்துக் கொள்ளப்போவதாக வைகோ உள்ளிட்ட சிலர் எதிர்த்து குரல் கொடுத்தபோது அதனை இந்த அரசு மறுத்ததுடன் அப்படி ஒரு திட்டம் இல்லை என்றும், அதனை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளோம்.

கே:- நேற்று கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா முதல்-அமைச்சராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பார் என்று பேசியிருக்கிறாரே?

ப:- பண்ருட்டியை நினைக்கும்போது அவரை பற்றி மறைந்த கோவிந்தசாமி கூறியது நினைவுக்கு வருகிறது. பண்ருட்டி மாதிரி துரோகிகளை நம்பாதீர்கள் என்றார். அதனையும் மீறி நம்புவது எனது தவறு.

கே:- சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் நடந்த வாகன சோதனையில் பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதே?

ப:- எந்த கட்சியின் பணம் என்று அறிவிக்கப்பட வில்லையே?

கே:- தமிழக வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:- தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

கே:-தமிழக தேர்தல் களம் எப்படி உள்ளது?

ப:- எல்லாம் சரியாக உள்ளது. சில பத்திரிகைகள்தான் சரியாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மத்திய மந்திரி மு.க.அழகிரி உடன் இருந்தார்.

No comments: