Friday, April 29, 2011

பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்க கூடாது : ராமதாஸ்.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் விளைவிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயால் பொதுமக்களுக்கும் வேளாண் நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்த கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளே போதுமானது என்று கூறி மரபணு கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசின் வல்லுநர் குழு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

விளைச்சலை அதிகரிப்பதற்காக பொதுமக்களின் உடல்நலனுக்கு தீங்கு ஏற்பட அனுமதிக்க கூடாது.

வேளாண் விளைச்சலை அதிகரிக்க முயற்சி என்ற பெயரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவது என்பது, இந்திய விவசாயிகளின் நலனை புறக்கணித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசும் செயலாகவே இருக்கும்.

இந்தியாவில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: