Friday, April 29, 2011

இயக்குனர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது.

இயக்குனர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பத்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், தங்க தாமரை பதக்கமும் அடங்கிய இந்த விருது 2010 ஆண்டுக்காக இவருக்கு வழங்கப்படுகிறது.

கைலாசம் பாலச்சந்தர் என்பவர்தான் கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப் படுகிறார். இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.

இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின

மேலும் கே. பாலச்சந்தர் எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படத்தின் மூலம் கதைவசனம் எழுத ஆரம்பித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருது அறிவிக்கப்பட்டதும் திரையுலக பிரமுகர்கள் அனைவரும் பாலசந்தருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவர் இயக்கிய இரு கோடுகள்(1969) அபூர்வ ராகங்கள் (1975) தண்ணீர் தண்ணீர் (1981) அச்சமில்லை அச்சமில்லை(1984) உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கியுள்ளது. தமிழ்நாடு, மற்றும் ஆந்திர அரசுகள் பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கியுள்ளது.

அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும்.

கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

"கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார்.

No comments: