Wednesday, July 27, 2011

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.



முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவருமான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் திங்கள்கிழமை முழுவதும், நேற்றும் விசாரணை நடந்தது. இன்று 3வது நாளாக விசாரணை நடந்தது.

வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸ் காவலில் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கடந்த மூன்று நாட்களாக காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் அவருக்கு இன்று இரு நபர் ஜாமீன் வழங்கி நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டார்.

ரூ. 25,000க்கு இருநபர் ஜாமீன் வழங்கியதை அடுத்து, வீரபாண்டி ஆறுமுகம் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

ஆதரவாளர்கள் கலாட்டா:

முன்னதாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்ட அவர்கள், கற்களைக் கொண்டு நீதிமன்றத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.

No comments: