Wednesday, July 27, 2011

சமச்சீர் கல்வி வழக்கு : 2-வது நாளாக தமிழக அரசு வக்கீல் வாதம்.

சமச்சீர் கல்வி வழக்கு:    தமிழக அரசு வக்கீல்    2-வது நாளாக வாதம்;    சட்ட திருத்தம் செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி

தமிழக அரசுக்கு கல்வி மற்றும் சட்டம் குறித்து உரிய ஆலோசனை வழங்க சரியான ஆள் இல்லாமல் போய் விட்டது. இதனால்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டது. இப்போது தேவையில்லாத சிக்கலில் மாட்டியுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் தான் இவ்வாறு கூறியது தமிழக அரசின் கருத்து அல்ல என்றும், இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் மாலையில் அவசரம் அவசரமாக விளக்கம் அளித்தார் ராவ். ராவின் இந்த வாதத்தால் தமிழக அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. அந்த மனு மீதான 2வது நாள் விசாரணை நேற்று நடந்தது. நேற்று அரசுத் தரப்பு வாதத்தை வழக்கறிஞர் பி.பி.ராவ் தொடர்ந்தார்.

அப்போது அவர் வாதிடுகையில் குறுக்கிட்ட நீதிபதிகள், சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக கடந்த தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத்தை 2011 அல்லது அதற்குப் பின்னர் அமல்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தெளிவான உத்தரவிட்டிருந்தும், சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது ஏன் என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளிதத ராவ்,

தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் தேவையற்றது என்பதை தைரியத்துடனும், உரத்த குரலிலும் ஏற்றுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறுதலான சட்ட திருத்தம் தேவையில்லை என்று, சரியான ஆலோசனை தமிழக அரசுக்கு வழங்கப்படவில்லை. இது போன்ற தேவையற்ற ஒரு செயலால், தேவையற்ற சிக்கலில் நாங்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறோம் என்றார் ராவ்.

தமிழக அரசின் வழக்கறிஞரே அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. தனது வாதத்தை தொடர்ந்த ராவ் மாலையில் முடிவு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தான் நீதிபதிகளிடம் தமிழக அரசின் புதிய சட்டத் திருத்தம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தமிழக அரசின் கருத்து அல்ல, அவை தனது சொந்தக் கருத்துக்கள் என்று கூறினார்.

பி.பி.ராவின் பேச்சால் தமிழக அரசுக்குப் பெரும் தர்மசங்கடமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. வழக்கின் நிலையை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது ராவின் பேச்சு என்ற கருத்தும் எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பாக ராவ் ஆஜராவதற்கு, தமிழக அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன்தான் பெயரைப் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

முன்னதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான இன்னொரு மூத்த வக்கீலான குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில்,

கடந்த திமுக ஆட்சியில் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில சட்டப் பேரவையில் சமச்சீர் கல்வி தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசியபோது தரமான சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும், அப்போதைய அரசால் கொண்டு வரப்பட உள்ள கல்வி திட்டங்கள் தமிழக மாணவர்களுக்கு எந்த நன்மையையும் அளிக்காது என்று தெரிவித்துள்ளது என்றார்.

No comments: