Friday, May 27, 2011

பள்ளிக்கல்வி அமைச்சருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சமச்சீர் கல்வி அமலாக்கம் சம்பந்தமான அரசின் முடிவு, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமச்சீர் கல்வி சம்பந்தமான தனது நிலைபாட்டை விளக்கி, அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்து 24-05-2011 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சௌந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக்கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்து உரையாடினர்.

சமச்சீர் கல்வி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், குழப்பங்களையும் அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். அமைச்சர் பொறுமையாக விஷயங்களைக் கேட்டறிந்த பின்னர், சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும் எனவும், அதைக் கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதையும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சரவை முடிவின்படி, இன்றுள்ள திட்டத்தை அரைகுறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது எனவும், ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்தபின் சமச்சீரான கல்வி அமலாக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளி கல்விக் கட்டணங்களை அவர்கள் கட்டக்கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அ.சௌந்திரராசன் அமைச்சரிடம் முன் வைத்தார். அமைச்சரவை அதுகுறித்து பரிசீலனை செய்யும் என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: