Friday, May 27, 2011

உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க. தனித்துப் போட்டி.

உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. தனித்துப் போட்டி

தமிழக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. தி.மு.க. 23 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியது. 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. அந்த 5 தொகுதிகளிலும் பா.ஜ.க. அதிக ஓட்டுக்களை பிரித்ததால்தான் காங்கிரஸ் ஜெயித்தது பிறகு தெரிய வந்தது.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் காங்கிரசார் நடந்து கொண்ட விதம்தான் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மிகவும் கறாராக 63 இடங்களை வாங்கிய காங்கிரசார், பல தொகுதிகளை விடாப்பிடியாக அடம் பிடித்து வாங்கினார்கள். அவர்களது இந்த அணுகுமுறை மக்களிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

காங்கிரஸ் மீது ஏற்கனவே மக்களுக்கு இருந்த கோபம்தான் கூட்டணி தோல்விக்கு காரணமாகி விட்டதாக தி.மு.க. நிர்வாகிகள் கருதுகிறார்கள். இதுதவிர ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரசார் நடந்து கொள்ளும் விதமும் தி.மு.க.வினருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

எனவே காங்கிரசுடனான உறவு வேண்டாம் என்று பெரும்பாலான தி.மு.க.வினர் கூறுவதாக தெரிகிறது. இந்த நிலையில் வருகிற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் மேலிடத் தலைவர்களிடம் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments: