Tuesday, April 5, 2011

ஆ.ராசா விவகாரம் - நீரா ராடியா, ரத்தன் டாடா,அனில் அம்பானி. சொன்னவை

ஆ.ராசா விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை : நீரா ராடியா.


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விவகாரத்தில் எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்று நீரா ராடியா பொதுக்கணக்குக் குழுவிடம் (பிஏசி) தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோரிடம் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

மழுப்பினார் ராடியா

விசாரணையின் போது, பெரும்பாலும் எனக்குத் தெரியாது, எனக்கு மறந்து விட்டது என்று ராடியா மழுப்பலாக பதிலளித்ததாக அதன் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். நீரா ராடியாவுடன் அவரது வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இரு மூத்த அதிகாரிகளும் விசாரணைக்கு வந்திருந்தனர்.

அரசியல் தலைவர்கள், தொழில் துறை பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் நீரா ராடியா நடத்திய தொலைபேசி உரையாடல்கள் குறித்த கேள்விக்கு, அவற்றில் சில பதிவுகள் உண்மையானவைதான், மேலும் சில போலியானவை என்று அவர் குறிப்பிட்டார்

.மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவைப் புகழ்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதம் குறித்தும் நீரா ராடியாவிடம் பொதுக் கணக்குக் குழு விசாரணையின் போது கேள்வி எழுப்பப்பட்டது என்று மற்றொரு பிஏசி உறுப்பினர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக நீரா ராடியா பேசியுள்ளது, ஆ.ராசாவுக்கு மீண்டும் தொலைத்தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவது குறித்துப் பேசியது ஆகியவற்றைப் பற்றி ராடியாவிடம் பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷி விளக்கம் கேட்டார்.

சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக நாடாளுமன்றத்துக்கு அவர் சுமார் 11 மணியளவில் வந்தார். எனினும் ராடியாவிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் சுமார் 1 மணி நேரம் வரை விவாதித்தனர். அதன் பின்னரே ராடியா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

உண்மைகளை மறைக்க முயல்கிறார் ராடியா

பல உண்மைகளை மறைக்கவே நீரா ராடியா முயல்கிறார் என்று நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ராடியாவிடம் விசாரித்தபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உண்மைகளைக் கூற வேண்டுமென்ற எண்ணத்தில் இல்லாமல், மழுப்ப வேண்டுமென்ற நோக்கத்திலேயே ராடியாவின் பதில்கள் இருந்தன. "இந்த உரையாடல்களைக் கேட்டதில்லை, எனக்கு சரியாக நினைவில்லை, எனக்குத் தெரியவில்லை' என்றுதான் அவரது பெரும்பாலான பதில்கள் இருந்தன.

எனினும் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன்தான் பேசியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். எனினும் விசாரணையின் போது நிகழ்ந்த அனைத்தையும் இப்போது கூற முடியாது என்றார் ஜோஷி.

ரத்தன் டாடாவிடம் விசாரணை நடத்தியபோது, தெளிவாகவும், நேரடியான பதில்களையும் அளித்தார். பதிவு செய்யப்பட்ட டேப்பில் இருப்பது தனது குரல்தான் என்பதையும் ஒப்புக் கொண்டார். எனினும் சில விஷயங்களை அவர் தெளிவாகக் கூற முடியவில்லை. இன்னும் ஓரிருநாளில் குழுவை மீண்டும் அணுகுவதாகவும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார் என்று ஜோஷி மேலும் தெரிவித்தார்.

அடுத்தது டாடா

தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்குப் பின் தொழிலதிபர் ரத்தன் டாடா, பிஏசி முன் ஆஜரானார்.ஏற்கெனவே சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் செல்போன் சேவையில் முன்னிலையில் இருக்கும் நிலையில் டாடா நிறுவனம், ஜிஎஸ்எம் முறையிலும் செல்போன் சேவையைத் தொடங்க வேண்டியதன் காரணம் என்ன?பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்து தனக்கு (டாடா) சாதகமாக செய்திகளை வெளியிட்டது தொடர்பாக டாடாவிடம் பிஏசி விசாரணையின் போது கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.




தயாநிதி மாறனுடன் நட்புறவு இல்லை:

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுடன் நட்புறவு இருந்ததில்லை என்று டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா கூறியிருக்கிறார்.

அமைச்சரவை அமைப்பதில் தாம் எந்த விதத்திலும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி ரத்தன் டாடா விளக்கமளித்தபோது இதைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் குறித்து டாடாவிடம் பிஏசி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒரு மத்திய அமைச்சரைப் பாராட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதுவற்குப் பதில் முதல்வருக்கு கடிதம் எழுதியது ஏன்? அப்படி எழுதிய கடிதம் அம்பலமானது எப்படி என்றும் பிஏசி உறுப்பினர்கள் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த ரத்தன் டாடா, இந்தக் கடிதம் அம்பலமானதால் தமக்கு எந்தப் பலனுமில்லை என்று தெரிவித்தார். கடிதம் பற்றி முதலில் குறிப்பிட்டது பார்தி டெலிகாமின் சுனில் மிட்டல்தான் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். எனினும் கடிதம் வெளியானதற்கு யார் காரணம் என்பதை அவர் கூறவில்லை என்று பிஏசி வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பானியிடம் இன்று விசாரணை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானி, எடிசலாட் டிபி டெலிகாம் தலைமை நிர்வாகி அடுல் டாம், எஸ்டெல் தலைமை நிர்வாகி ஷாமிஸ் தாஸ், யூனிடெக் வயர்லெஸ் மேலாண்மை இயக்குநர் சிக்வி பிரிக்கே உள்ளிட்டவர்களிடம் பொதுக்கணக்குக்குழு செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணை நடத்தவுள்ளது.

No comments: