Wednesday, April 20, 2011

புதிய ரேஷன் அட்டைக்கு நீடிக்கிறது தடை.



தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பிறகும் புதிய ரேஷன் அட்டை தரப்பட வில்லை.அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக இருந்தாலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அவை கொடுக்கப்படாததால் விண்ணப்பதாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. "நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது புதிய சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடக் கூடாது' என்பது விதியாகும். இந்த விதியுடன் புதிய ரேஷன் அட்டையும் சேர்ந்து கொண்டுள்ளது.

அதாவது, நடத்தை நெறிமுறைகள் அமலான காலத்தில் இருந்து அது முடியும் வரை புதிய ரேஷன் அட்டைகள் எதுவும் கொடுக்கக் கூடாது.

இதன்படி, தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் மனுக்கள் நடத்தை விதிகளால் முடங்கியுள்ளன. இதுகுறித்து உணவுத் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கூறுகையில், ""மார்ச் 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வீடுகளை மாற்றிக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்றவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் என பலரும் புதிய ரேஷன் அட்டையைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். நடத்தை நெறிமுûறையைக் காரணம் காட்டி புதிய அட்டையைக் கொடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள மனுக்கள் தேங்கி உள்ளன.

மனுக்கள் சரியாக இருந்து, தளத்தணிக்கை முடிவுற்ற குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆணையம் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்தினால் மட்டுமே அந்த அட்டைகள் கொடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

தத்கால் அட்டையும் இல்லை

வீட்டு முகவரிக்கென பிரத்யேகமான தத்கால் ரேஷன் அட்டைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரேஷன் அட்டைக்கு பொருட்களை வாங்க முடியாது.

வேறு ஊர்களுக்கு இருந்து சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வரும் குடும்பங்கள் தங்களது வீட்டின் முகவரிச் சான்றாக இந்த அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உணவுத் துறை அறிவித்து அது செயல்பாட்டில் உள்ளது.

இந்த புதிய திட்டத்துக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வகையான அட்டைக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

உணவுத் துறை கடிதம் எழுதுமா?

புதிய ரேஷன் அட்டைகளைப் பெற இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொது மக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது உணவுத் துறை கடிதம் எழுதியதன் பேரில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருந்தபோதே புதிய அட்டைகள் கிடைப்பதற்கு வழிவகுக்கப்பட்டது.

ஆனால், புதிய அட்டைகளைப் பெற இரண்டு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழலில் கூட்டுறவு, உணவுத் துறை உயரதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உரிய அனுமதி பெற்று புதிய ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

பிரவீண் குமார் பதில்

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் கேட்ட போது, ""தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் புதிய ரேஷன் அட்டை வழங்கக் கூடாது. அட்டைகளை வழங்குவதற்கு உரிய அனுமதி கேட்டு உணவுத் துறை கடிதம் எழுதும் பட்சத்தில் அது தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆணையத்தின் உத்தரவைப் பெற்று புதிய அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


No comments: