Wednesday, April 20, 2011

3 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி 16 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.


இந்திய வானவெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு ராக்கெட்டுகளை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டு முதல் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை 44 செயற்கை கோள்களுடன் 17 முறை விண்ணில் அனுப்பியது. அவற்றில் 16 முறை வெற்றியடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குழுவினர் மிகவும் கவனமாக செயல்பட்டு பி.எஸ்.எல்.வி சி16 ராக்கெட்டை உருவாக்கி உள்ளனர்.

இந்த ராக்கெட் இன்று (புதன் கிழமை) காலை 10 மணி 12 நிமிடங்களுக்கு விண்ணில் சீறிப்பாய்கிறது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவு தளத்தில் இந்த ராக்கெட் அனைத்து ஏற்பாடுகளுடனும் தயார் நிலையில் உள்ளது. அது சீறிப்பாய்வதற்கான கவுண்ட் டவுன்' நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) அதிகாலை 3 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் நமது நாட்டிலேயே, இஸ்ரோ' விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட 1206 கிலோ எடையுள்ள ரிசோர்ஸ் சாட் 2', இந்தியா ரஷியா கூட்டு தயாரிப்பில் உருவான 92 கிலோ எடையுள்ள ழூத்சாட்,' சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட 106 கிலோ எடையுள்ள எக்ஸ்சாட்' ஆகிய 3 செயற்கை கோள்களை ஏந்திச் செல்கிறது. சிங்கப்பூர் செயற்கை கோள் அனுப்புவது இதுதான் முதல் முறை ஆகும்.

இந்தியா ஏற்கனவே ரிசோர்ஸ்சாட் 1 என்ற செயற்கை கோளை கடந்த 2003 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அதன் ஆயுள் காலம் முடிவடைவதால் ரிசோர்ஸ்சாட் 2 என்ற அதிநவீன 2 வது செயற்கை கோள் இப்போது அனுப்பப்படுகிறது. இது இயற்கை வளங்களை கண்டறியவும், அவற்றின் மேலாண்மை பற்றி ஆராயவும் பயன்படுத்தப்படும்.

இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் 3 அதிநவீன கேமராவும், கனடா நாட்டின் காம்தேவ்' என்ற அதிநவீன கருவியும் கூடுதலாக அனுப்பப்படுகிறது. இவை ஒரு நாளைக்கு 14 முறை வானவெளியில் சுற்றி வந்து கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை அனுப்பும்.

பி.எஸ்.எல்.வி சி16 ராக்கெட் பறக்கத் தயார் நிலையில் இருப்பது பற்றி வானவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.சதீஷ் கூறியதாவது:

கவுண்ட் டவுன் நல்ல முறையில் போய்க்கொண்டு இருக்கிறது. ராக்கெட் பறப்பது தொடர்பான அனைத்தும் முன்னேற்றமான முறையில் உள்ளன. பருவ நிலையும் மிக நன்றாக உள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சரியாக, தயார் நிலையில் இருக்கும் நிலையில், திட்டமிட்டபடி நாளை (அதாவது இன்று) காலை 10 மணி 12 நிமிடங்களுக்கு ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments: