Thursday, June 9, 2011

1967 தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அண்ணா அமைத்த கூட்டணி .


1967 பொதுத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியுடன், எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, கூட்டணியை தி.மு.கழகத் தலைவர் அண்ணா அமைத்தார். கூட்டணி அமைப்பதற்காக, தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் 1966 டிசம்பர் 29_ந்தேதி முதல் 4 நாட்கள் நடைபெற்றது.

மாநாட்டின் தொடக்க நாளில், பிரமாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம், ஐலண்டு மைதானத்தில் இருந்து புறப்பட்டது. அலங்காரத்தேரில் அண்ணா அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ஊர்வலத்தில் 10 ஆயிரம் தி.மு.க. தொண்டர்கள் சைக்கிளில் சென்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் 400 பஸ்களில் வந்திருந்தனர்.

அந்த பஸ்களில் அவர்கள் ஊர்வலத்தில் சென்றனர். சென்னை மாநகராட்சி தி.மு.க. மேயர் சம்பந்தம், துணைமேயர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடந்து சென்றனர். ஊர்வலம் 5 மைல் நீளம் இருந்தது. ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க 1 மணி நேரம் பிடித்தது. மறுநாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. அண்ணா தலைமை தாங்கினார்.

காங்கிரசுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, காங்கிரசுக்கு எதிராக அகில இந்தியரீதியில் "சுதந்திரா கட்சி"யைத் தொடங்கிய ராஜாஜி, இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். மற்றும் "காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிப் (முஸ்லிம் லீக்), சி.பா.ஆதித்தனார் (நாம் _ தமிழர்), ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) ஆகியோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.

மாநாட்டில் ராஜாஜி பேசியதாவது:

"மாநாட்டு அமைப்பு இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ மாயத்தால் செய்தது போல் இருக்கிறது. தேர்தலிலும் மாயம் செய்து வெற்றி பெறவேண்டும். நான் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறேன்.

முன் சரித்திரங்களைப் பார்த்தால் இது ஆச்சரியமாக இருக்கும். இந்த கூட்டு சரித்திரத்தில் பதிவாகும். தேர்தலில் வெற்றியும் கிடைத்தால் நன்றாக பதிவாகும். "காங்கிரஸ் கட்சி படுத்துக்கொண்டே வெற்றி பெறும்" என்று காமராஜர் கூறுகிறார். படுப்பது நிச்சயம்.

ஆனால் வெற்றி பெறுவது காங்கிரஸ்காரர்களுக்கே காங்கிரஸ் வெற்றி பெறுவதில் சந்தேகம். சந்தேகம் இருக்கும்போது வெளியில் தைரியமாக பேசுவார்கள். அதுபோல் காமராஜரும் தைரியமாக பேசுகிறார். காங்கிரஸ் ஒரு பழம். அது அழுகி விட்டது. துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

இனி அதை குப்பை தொட்டியிலே போடவேண்டும். அண்ணாதுரையுடன் நான் கூட்டு சேருகிறேன் என்றதும் காங்கிரசார் "வேடிக்கை" என்று நினைத்தார்கள். இப்போது எதிர்ப்பு அணியின் பலத்தை தெரிந்து கொண்டார்கள். முயற்சி செய்து கூட்டை உடைக்கப் பார்த்தார்கள். நடக்கவில்லை.

காங்கிரஸ் ஏணியில் ஏறி உச்சத்திற்கு சென்று விட்டது. இனி கீழே விழவேண்டியதுதான். இறங்கும்போது நிதானமாக இறங்க வேண்டும். அகம்பாவத்தில் இறங்கினால் தலைகீழாக விழவேண்டியதுதான். ஆட்சியை ஜனநாயக முறையில் இறக்காமல் பலாத்கார முறையில் இறக்க வழி இல்லை. ஓட்டு மூலம்தான் இறக்கவேண்டும்.

படுத்துக்கொண்டே வெற்றி பெறுவேன் என்று கூறியதன் முடிவை, 1967_ல் ஓட்டு எண்ணும்போது காங்கிரசார் பார்க்கப்போகிறார்கள். தேர்தலில் காங்கிரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவோம். அதற்கு நீங்கள் எல்லோரும் பாடுபடவேண்டும்.

மேற்கண்டவாறு ராஜாஜி கூறினார்.

முஸ்லிம் லீக் தலைவர் இஸ்மாயில் சாகிப் கூறியதாவது:

இனி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. காங்கிரஸ் ஆட்சியை இனியும் சகித்துக்கொள்ளும் பொறுமை மக்களுக்கு இல்லை. காங்கிரஸ் ஒரு யானையாக இருந்தது. அது நன்றாக இருந்த காலத்தில் அதை அலங்கரித்து ஊர்வலம் விட்டு கண்டுகளித்தார்கள். இப்போது புண் ஏற்பட்டு நோய் கண்டுவிட்டது. அதனால் அந்த யானையை வங்கக் கடலில் தள்ளி அழித்து விடப்போகிறார்கள்.

இவ்வாறு இஸ்மாயில் சாகிப் கூறினார்.

மூக்கையா தேவர் பேசுகையில், "காங்கிரஸ் என்ற விஷப்பாம்பின் தோலை உரிக்க வேண்டும். காங்கிரஸ் பாம்பின் தோலை, பக்குவமாக அண்ணா உரித்து எடுத்து விடுவார்" என்று கூறினார்.

சி.பா.ஆதித்தனார், ம.பொ.சிவஞானம் மற்றும் பல தலைவர்கள் பேசினார்கள்.

மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அண்ணா பேசியதாவது:

எப்படியாவது ஆட்சியில் போய் உட்கார்ந்து விடுவது அல்ல நம் நோக்கம். தரணியிலே தமிழகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அந்த வாய்ப்பு, காலத்தால் என் கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. "ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்" என்று மக்கள் கூறினால், "ஆகட்டும்" என்று ஏற்றுக்கொள்வோம்.

இதற்குக் காரணம் பதவியில் லாபம் - சுவை இருக்கிறது என்பதல்ல. நாம் ஆட்சியில் அமர்ந்தால் தமிழ் மரபு காப்பாற்றப்படும் என்ற எண்ணம் தான். இனத்தையும், மொழியையும் காப்பாற்றத்தான் அரசியலில் ஈடுபட்டு இருக்கிறேன்.

மற்றபடி மந்திரிசபை அமைத்து, கருணாநிதிக்கு ஒரு மந்திரி பதவியும், நெடுஞ்செழியனுக்கு ஒரு மந்திரி பதவியும் கொடுப்பதற்கு அல்ல. அரசியலில் நான் ராஜாஜியை கண்டித்தது போல் வேறு யாரையும் கண்டித்தது இல்லை.

அவர் இன்று நம்மை வாழ்த்துகிறார். நினைத்தால் வேடிக்கையாக - விசித்திரமாக இருக்கிறது. "விதி வகுத்தது" என்று சொல்வார்களே - அதுபோல் இருக்கிறது. ராஜாஜி வாழ்த்துவது என்றால் சம்பிரதாயத்துக்காக அவர் வாழ்த்தவில்லை. உள்ளத்தில் இருந்து வாழ்த்துகிறார்.

இது ஒரு அரசியல் திருப்பம். நம்முடன் உடன்பாட்டுக்கு வராமல் இருக்கும் கட்சிகளுக்கு சொல்கிறேன்:

"காங்கிரசை வீழ்த்தும் பொது நோக்குடன் எங்களுடன் வாருங்கள். இடம் ஒதுக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் சொல்கிற இடத்தில் 6 பேர் நின்றால் 4 பேர் வெற்றி பெறுவீர்கள். 10 பேர் நின்றால் 8 பேர் வெற்றி பெறுவீர்கள்."

மேற்கண்டவாறு அண்ணா கூறினார்.

காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்தது, ஆட்சியை தி.மு.க. கைப்பற்றியது. தமிழக முதல் - அமைச்சராக அண்ணா பதவி ஏற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 20 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 1967 தேர்தலில் தோல்வி அடைந்தது. ஆட்சியை தி.மு.கழகம் கைப்பற்றியது. புதிய முதல்_அமைச்சராக தி.மு.கழக தலைவர் அண்ணா பதவி ஏற்றார்.

பதவி ஏற்பு விழா 1967 மார்ச் 6_ந்தேதி, சென்னை ராஜாஜி மண்ட பத்தில் நடந்தது. கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில்தான் பதவி ஏற்பு விழா நடைபெறுவது வழக்கம். முதல் முறையாக, ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு இருந்தது.

குதிரைப் படையினரும், ஆயுதப் படையினரும் சுற்றிலும் நின்று காவல் புரிந்தார்கள். முன் அனுமதி பெற்றவர்களைத்தவிர வேறு யாரும் மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், மண்டபத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான தி.மு.கழக தொண்டர்கள் கொடிகளுடன் நின்று கொண்டு இருந்தார்கள்.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், சத்தியவாணிமுத்து, கோவிந்தசாமி, சாதிக்பாட்சா, மாதவன், முத்துசாமி ஆகியோர் 9.50 மணிக்கு மண்டபத்தின் உள்ளே வந்தார்கள். அவர்களை தமிழ்நாடு அரசாங்க தலைமை செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் வரவேற்றார். அமைச்சர்கள் அனைவரும் அவர்களுக்காக மேடையில் அமைக்கப்பட்டு இருந்த இடங்களில் உட்கார்ந்தார்கள்.

சரியாக 9.56 மணிக்கு அண்ணா வந்தார். அவரை தலைமைச் செயலாளர் வரவேற்றார். பிறகு தமிழ்நாடு கவர்னர் உஜ்ஜல்சிங், அவர் மனைவியுடன் வந்தார். கவர்னருக்கு அண்ணா வணக்கம் தெரிவித்தார். மற்ற அமைச்சர்களை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பிறகு மேடையின் மத்தியில் கவர்னர் உட்கார்ந்தார். அவருக்கு வலது புறத்தில் அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் ஆகியோரும், இடது புறத்தில் கோவிந்தசாமி, சத்தியவாணி முத்து, மாதவன், சாதிக்பாட்சா, முத்துசாமி ஆகியோரும் அமர்ந்தனர். பதவி ஏற்பு விழா 10 மணிக்கு தொடங்கியது.

தலைமை செயலாளர் ராமகிருஷ்ணன் முதலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி அழைத்தார். உடனே அண்ணா பதவி ஏற்புக்காக இருந்த மேஜைக்கு வந்தார். பதவி ஏற்பு உறுதிமொழியை, கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அதன்பின் அண்ணா அந்த உறுதிமொழியை தமிழில் வாசித்தார்.

பின் "ரகசியகாப்பு" பிரமாணத்தை கவர்னர் ஆங்கிலத்தில் படிக்க அதன்பின் அண்ணா தமிழில் அதையும் படித்து கையெழுத்து போட்டார். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, மாதவன், சாதிக்பாட்சா, முத்துசாமி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வந்து, உறுதி மொழியை படித்து பதவி ஏற்றார்கள்.

பதவி ஏற்பு முடிந்ததும் அவர்கள் அனைவரும் கவர்னருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு பத்திரிகை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் வந்திருந்தார்கள்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியைக்காண சுதந்திரா கட்சித்தலைவர் ராஜாஜி, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம், பழைய மந்திரி வெங்கடராமன், பழைய சபாநாயகர் செல்லபாண்டியன், மாணிக்கவேலர் ஆகியோர் வந்திருந்தனர். அண்ணாவின் மனைவி ராணி அம்மாள், மகன்கள், மருமகள்கள் ஆகியோரும் நெடுஞ்செழியன், கருணாநிதி குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும், அண்ணாவும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜியிடம் சென்றார்கள். அவர்களை ராஜாஜி வாழ்த்தினார். பழைய மந்திரி வெங்கடராமன் கை குலுக்கினார். 10.35 மணிக்கு மண்டபத்தை விட்டு அண்ணா வெளியே வந்தார். வெளியே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செயதார்கள்.

அமைச்சர்களை நோக்கி மாலைகளையும், பூக்களையும் வீசினார்கள். கூடி இருந்தவர்களை நோக்கி அண்ணா கைகளை அசைத்தார். பிறகு அண்ணாவும், மற்ற அமைச்சர்களும் கார்களில் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) சென்றார்கள். அண்ணாவின் "அம்பாசிடர்" கார் கோட்டைக்குள் நுழைந்தது.

அதைத்தொடர்ந்து மற்ற மந்திரிகள் அவரவர் கார்களில் வந்தனர். வாசலில் அண்ணாவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சொக்கலிங்கமும், மற்ற அதிகாரிகளும் அவரை வரவேற்றார்கள். மாடியில் உள்ள முதல்_அமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். சரியாக 10.43 மணிக்கு, முதல்_அமைச்சரின் அறைக்குள் அண்ணா நுழைந்து, நாற்காலியில் அமர்ந்தார்.

அமைச்சர்கள் நெடுஞ்செழியன், கருணாநிதி மற்ற அமைச்சர்கள் அந்த அறைக்கு வந்து உட்கார்ந்தார்கள். சுதந்திரா கட்சியைச் சேர்ந்த தலைவர் சா.கணேசன், அண்ணாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் ரோஜாப்பூ மாலை போட்டு வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு அண்ணா ஒவ்வொரு அமைச்சரையும் அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று, விட்டு வந்தார். அண்ணாவின் மேஜையில் வைப்பதற்காக, திருவள்ளுவர் படம் ஒன்றை அன்பில் தர்மலிங்கம் வழங்கினார். மற்ற அமைச்சர்களுக்கு அண்ணாவின் படத்தை கொடுத்தார்.

அண்ணாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்காகவும், மாலைகள் போடுவதற்காகவும் ஏராளமானபேர் கூடி இருந்தனர். அவர்கள் சாரிசாரியாக வந்து மாலை அணிவித்தனர். பழைய மேயர்கள் முனுசாமி, மோசஸ், நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நடந்த அதே நேரத்தில், இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலும் நடந்தது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றபோதிலும், குறைந்த மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.

அண்ணா பதவி ஏற்றபின், அவருடன் டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி டெலிபோனில் பேசினார். "தமிழ்நாட்டில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள தி.மு.க. அமைச்சரவைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், "தி.மு.க. அரசுக்கு, மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும்" என்று தெரிவித்தார். இந்திரா காந்தியின் வாழ்த்துக்கு அண்ணா நன்றி கூறினார்.

அண்ணா அமைச்சரவையில், மொத்தம் 9 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் இலாகா விவரம் வருமாறு:_

1. அண்ணா: முதல் - அமைச்சர் பொறுப்புடன் நிதி, உள்துறை இலாகாக்கள்.
2. இரா.நெடுஞ்செழியன்: கல்வி.
3. கருணாநிதி: பொதுப்பணி.
4. மதியழகன்: உணவு.
5. கோவிந்தசாமி: விவசாயம்.
6. சத்தியவாணிமுத்து: ஆதிதிராவிடர் நலம்.
7. மாதவன்: சட்டம்.
8. சாதிக்பாட்சா: மக்கள் நல்வாழ்வுத்துறை.
9. முத்துசாமி: உள்ளாட்சி.

No comments: