Thursday, June 9, 2011

ஆவடியில் மின்தடை : மின்சார அலுவலகம் நள்ளிரவில் முற்றுகை.

ஆவடியில் மின்தடை: மின்சார அலுவலகம் நள்ளிரவில் முற்றுகை

ஆவடியில் காலை முதல் இரவு வரை தினமும் மின் தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதுடன் தொழில் செய்பவர்கள் பெரிதும் வருவாய் இழப்பினை சந்திக்க நேரிடுகிறது. ஆவடி பகுதிக்குட்பட்ட காமராஜ்நகர் பகுதி துணை மின் நிலையம் மூலம் வினியோகிக்கப்படும் மின்சாரம் மின் பற்றாக்குறை காரணமாக தினமும் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி மின்சாரம் தடை செய்யப்பட்டு வந்தது. ஆவடி, பட்டாபிராம், திருமுல்லை வாயல் ஆகிய பகுதிகளில் சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் ஒரு மணி நேரம் மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும் மின்தடை செய்யப் படுகிறது.

இது குறித்து மின் அலுவலகத்துக்கு பொது மக்கள் போன் செய்தால், தொலைபேசி எண் உபயோகத்தில் இல்லை என பதில் வருகிறது. பிறகு சில மணி நேரம் கழித்து அந்த தொலை பேசி எண் இயங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

நேற்று இரவு 10 மணி அளவில் தடைப்பட்ட மின்சாரம் நீண்ட நேரமாகியும் வராத காரணத்தினால், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள துணை மின் நிலையத்தை அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

இந்த தகவல் கிடைத்ததும் ஆவடி சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்து பொது மக்களிடம் சமரசம் பேசினர். ஆனால் மின்சாரம் வந்தால் தான் செல்வோம் என்று பொதுமக்கள் பதில் கூறினர். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மின்சாரம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

No comments: