Wednesday, June 8, 2011

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது..


திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 6- திங்கட்கிழமையன்று நடைபெற்றது. தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சிபுரியும் அறுபடை வீடுகளில் முதல் படை என்ற பெருமையும், எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக அமர்ந்த நிலையில் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தரும் சிறப்பும், கொண்டதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திங்கட்கிழமை - 6ந்தேதி பூசம் நட்சத்திரத்தில் காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி கடந்த சில மாதங்களாக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தின் முதற் கட்டமாக கடந்த 2-ந்தேதி முதல்கால யாகசாலை பூஜையும், 3-ந்தேதி காலையில் 2-ம் காலமும், மாலையில் 3-ம் காலமும், மறுநாள் 4-ந்தேதி காலையில் 4-ம் காலமும், மாலையில் 5-ம் காலமும்யாக பூஜைகள் நடைபெற்றது. 5ந்தேதி மாலையில் 7-ம் கால பூஜையும், 6-ந்தேதி காலை 4.30 மணி அளவில் 8-ம் கால பூஜையும் நடைபெற்றது.

இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி- தேவசேனா திருமண மண்டபம் முன்பாக பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானுக்கு ஒரு பிரிவாகவும், சத்தியகிரீஸ் வரர்-துர்க்கை அம்மனுக்கு ஒரு பிரிவாகவும், கற்பக விநாயகருக்கு மற்றொரு பிரிவாகவும் யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் சஷ்டி மண்டபத்தில் பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்குமாக 80 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்குள் செல்ல கருணை இல்லம் (ஆஸ்தான மண்டபம்), லட்சுமி தீர்த்தம் (கம்பத்தடி மண்டபம்), கல்யாண மண்டபம் (திருவாச்சி மண்டபம்), லட்சுமி தீர்த்தம் (மடப்பள்ளி மண்டபம்) என்று 4 வழிகள் அமைக்கப்பட்டிருந்தது.

சுமார் 500 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினார்கள். தொடர்ந்து 2-வது, 3-வது, 5-வது யாக சாலை பூஜைகள் நடந்தன, 6-வது கால யாகசாலை பூஜைகளும் மாலையில் 7-வது கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.

ஜூன் 6- திங்கட்கிழமையன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் குடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் 6.45 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தங்கம், வெள்ளிக் குடங்கள் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சமகாலத்தில் 7 கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் கோவிலுக்குள் உள்ள கருவறையில் உள்ள முருகப்பெருமானின் தங்க வேலுக்கு புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகமும், மற்ற விக்கிரகங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகமும் நடைபெற்றது.

அப்போது கும்பாபிஷேகத்தை காண கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என பக்தி பரவசத்துடன் பக்தி கோஷம் எழுப்பினர்.

கும்பாபிஷேகத்தை காண தென்மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்திருந்தனர். கும்பாபிஷேகத்தை காண பக்தர்களுக்கு வசதியாக கோவிலின் மேல்தளத்தில் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.