Friday, May 6, 2011

குளிர்சாதன பெட்டியில் காதலி பிணம் : குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தியதால் கொன்றேன் ; யோகா மாஸ்டர் வாக்குமூலம்.

குளிர்சாதன பெட்டியில் காதலி பிணம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தியதால் கொன்றேன்;  யோகா மாஸ்டர் வாக்குமூலம்

பெங்களூர் அருகே கனகபுரா ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ் சந்திரதாஸ் (31). யோகா மாஸ்டர். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு கைக் குழந்தை ஒன்று உள்ளது. லோகேஷ் சந்திரதாஸ் பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்தார், அப்போது அவர் கூறியதாவது :-

“நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகேசில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தமர் பெரா ஆப்ரகாம் என்ற பெண்ணுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அங்கு உல்லாசமாக வாழ்க்கை நடத்தினோம்.

பின்னர் நான் அங்கிருந்து பெங்களூர் வந்துவிட்டேன். இங்கு ஜோதி என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் எனக்கு திருமணம் நடை பெற்றது. எங்களுக்கு ஒரு மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தமர் பெரா திடீரென்று பெங்களூர் வந்தார். எனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த அவர் என்னிடம் தகராறு செய்தார்.

என்னை கைவிட்டுவிட்டு எப்படி வரலாம் என்று என்னிடம் சண்டையிட்டார். இது என் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. என் மனைவியும் தகராறு செய்தார். அமைதியாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த தொடர்பை பயன்படுத்தி தமர் பெரா தேடி கண்டுபிடித்து வந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாரே என்று எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

உடனே பெராவை ஒரு அறையில் தள்ளி அடைத்தேன். அங்கு கையில் கிடைத்த இரும்பு கம்பியை பயன்படுத்தி பெராவை தாக்கினேன். இதில் அவர் சரிந்து விழுந்தார்.உடனே கதவை பூட்டி விட்டு என் மனைவியையும் குழந்தையும் நாகரபாவியில் உள்ள அவளது உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டேன். பிறகு மீண்டும் எனது குடியிருப்புக்கு திரும்பி வந்து பார்த்தேன்.

பெரா இறந்துபோய் இருந்தார். பெரா இறந்தது என் மனைவிக்கு தெரியாது. உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டேன். அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தேன். ஆனால் முடியவில்லை. எனவே உடலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு ரூ.30 ஆயிரம் செலவில் பெரிய குளிர்சாதன பெட்டியை வாங்கினேன்.பின்னர் அதனுள் பெராவின் உடலை வைத்தேன்.

உடல் அழுகி துர்நாற்றம் வீசினால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்தேன். இந்த நிலையில் பெராவின் உடலை அப்புறப்படுத்துவற்கு பல முறை முயற்சித்தேன். ஆனால் என்னால் மட்டும் அதை தனியாக செய்ய முடியவில்லை.

இதற்கிடையே ஒரு பெண்ணை கொன்று விட்டோமே குற்ற உணர்வு என்னை துன்புறுத்தியது.உடனே கொலை செய்தது பற்றி என் மனைவியிடம் தெரிவித்தேன். பின்னர் என் மனைவியும் அவரது குடும்பத்தாரும் என்னை போலீசில் சரண் அடையும் படி அறிவுறுத்தினர். அதன்படி நான் போலீசில் சரண் அடைந்தேன், இவ்வாறு கூறி உள்ளார்.

No comments: