Tuesday, August 2, 2011

இலங்கை எம்.பி.களுக்கு இந்தியாவில் மிக மோசமாக அனுபவம்! அவமானம்!!



வெளிநாட்டு விருந்தினர்களாக இந்திய நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த இலங்கை எம்.பி.க்கள் எதிர்பாராத வகையில் மிக மோசமான அவமானத்தைச் சந்தித்தனர். இவர்களை நோக்கி, “வெட்கம்.. வெட்கம்” என்ற கோஷம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விருந்தினர்களாக ஒரு நாட்டுக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, அவர்களை வரவேற்று அழைத்திருந்த மக்கள் மன்றத்தில் வைத்தே எதிர் கோஷங்கள் எழுப்புவது, ராஜதந்திர நடைமுறைகளில் மிக அவமானத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படும்.

அவமானப்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, இந்தச் சம்பவத்தை தமது நாடாளுமன்றக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டியிருக்கும். அது, சர்வதேச அரங்கில், ‘அவமானத்துக்குரிய பதிவு’ என்ற முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

இலங்கை எம்.பி.க்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பார்க்கப்படும்.

இலங்கை எம்.பி.க்களுக்கு தலைமை தாங்கியிருந்தவர் இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், சபாநாயகருமாக சமல் ராஜபக்ஷே என்பது இதிலுள்ள முதலாவது முக்கிய விஷயம். அதாவது அவமானப்படுத்தப்பட்ட குழுவின் தலைவர், அவரது சொந்த நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

இரண்டாவது, கோஷம் எழுப்பிய எம்.பி.க்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இந்தக் கட்சிதான் தமிழகத்தில் ஆளும் கட்சி. அந்த வகையில், தமிழக அரசே, இலங்கைக்கு இந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சம்பவம் எப்படி நடைபெற்றது? இதோ, இப்படித்தான்!

சமல் ராஜபக்ஷே தலைமையில் இலங்கை எம்.பி.கள் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் காண்பதற்காக அவைக்கு வந்திருந்தனர். அவர்களை சபாநாயகர் மீரா குமார் வரவேற்றார். இலங்கை எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருக்கின்றது என்று அவைக்கு அறிவித்தார். அவர்களை அறிமுகம் செய்யத் தொடங்கினார்.

வழக்கமாக இப்படி வெளிநாட்டு விருந்தினர்கள் வருகைதரும்போது, நாடாளுமன்றத்தில் அவர்களை அறிமுகம் செய்துவைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளைத் தட்டியோ, அல்லது தமக்கு முன்புள்ள மேஜையைத் தட்டியோ வரவேற்பது வழக்கம்.

இலங்கை எம்.பி.களை சபாநாயகர் மீரா குமார் அறிமுகப்படுத்தத் தொடங்கியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்கத் தொடங்கினர். ஆனால், அந்த ஒலியை அடக்கியபடி பெரிதாக சில குரல்கள் “shame, shame” என்று ஒலிக்கவே, அனைவரும் திகைத்துப்போய், இந்தக் குரல்கள் வரும் திசையில் திரும்பிப் பார்த்தனர்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒன்பது பேரும், எஸ்.செம்மலை, முனிசாமி தம்பித்துரை ஆகியோரின் தலைமையில் எழுந்து நின்று, ஸ்ரீலங்கா எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். “வெட்கம், வெட்கம்” என்ற அவர்களது கோஷம் அவை முழுவதும் ஒலித்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.களும் அவையில் இருந்தனர். அவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. தி.மு.க. எம்.பி.க்கள் பலரும் அவையில் மௌனமாக அமர்ந்திருந்தனர்.

கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஆதரவாக வேறு யாரும் எழுந்திராத நிலையில், மிக ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. தமிழக எம்.பி.க்களில் ஒருவர், தமது கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றிக் கவலைப் படாமல் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஆதரவாக எழுந்தார்.

அவர், பி.லிங்கம். தென்காசி தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.

இவர் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக சபாநாயகரின் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்குவதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அவர் சபாநாயகரை நெருங்குமுன், தடுக்கப்பட்டார்.

அவரது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா ஓடிச்சென்று, லிங்கத்தின் கைகளைப் பிடித்துத் தடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதன்பின் அவர் உட்கார்ந்து விட்டார்.

அ.தி.மு.க. எம்.பி.கள் கோஷம் எழுப்பியதை, சபாநாயகர் மீரா குமார் கண்டித்தார். இலங்கை எம்.பி.கள் நமது அழைப்பின் பேரில் வந்துள்ள விருந்தினர். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். ஆனால், இதனை ஏற்காத அ.தி.மு.க. எம்.பி.க்கள், “வெட்கம் வெட்கம்” என்று தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

சமல் ராஜபக்ஷே தலைமையில் இலங்கை எம்.பி.கள், இந்தியாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வந்துள்ளனர்.

viruvirupu.com

No comments: