Saturday, June 11, 2011

இலங்கைத் தமிழினத்தை காட்டிக்கொடுத்த ஜெயலலிதாவின் செயலை நாட்டிற்குக் காட்டுவோம் : திமுக.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.06.2011 அன்று திமுக தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,

8.6.2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ்ந்திட அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் அனைவரும் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கேட்டுக்கொண்டு முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட அரசினரின் தனித் தீர்மானத்தை திராவிட முன்னேற்ற கழகம் முழு மனதோடு ஆதரிப்பதோடு, அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நேரத்தில் தேவையில்லாமல் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அரசையும், கழகத் தலைவர் கலைஞர் அவர்களையும் ஜனநாயக மரபுகளுக்கு மாறாகவும், கருத்துக்குக் கருத்து என்ற முறையில் எதிர்க் கருத்தை எடுத்து வைத்திட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் - ஒன்றுபட்ட உணர்வோடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் கடுமையாகத் தாக்கி விரோத உணர்வை வெளிக்காட்டிப் பேசியதற்கு இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறத அதே நேரத்தில்,

தமிழகச் சட்டப்பேரவையில் 16.04.2002 அன்று இதே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்போது, கொண்டு வந்த தீர்மானத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றம் கூறியதையும், 17.1.2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டி இலங்கை தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த இழிசெயல், பழிச்செயல் புரிந்தவர்கள் தற்போது தமிழ் இனத்தை எதையும் சொல்லி எல்லாக் காலத்திலும் ஏமாற்றலாம் என்ற மனப்பான்மையோடு இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பதை இந்த உயர்நிலைச் செயல் திட்டக் குழு தமிழ் உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments: