Saturday, June 11, 2011

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி.


திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசு, சிபிஐ அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆயுதமாக இருக்கலாம், அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.

கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போல குறிப்பிட்டீர்கள். ஆனால், இன்றைய உங்கள் தீர்மானத்தில் அது குறித்து ஏதும் குறிப்பிட வில்லையே?.

பதில்: திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.

கேள்வி: 'கூடா நட்பு'' என்று சொன்னீர்களே, அது யாரைக் குறிக்கிறது?.

பதில்: உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கேள்வி: காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினீர்கள். இப்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னீர்கள். அதனால் மீண்டும் இப்போது காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?.

பதில்: ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி- அப்போதுள்ள நிலையைப் பொறுத்து கூற வேண்டிய சூழ்நிலையில் நான் அப்படி கூறியிருப்பேன். அதையே இப்போதும் நீங்கள் கூறுவீர்களா என்று கேட்க முடியாது.

கேள்வி: எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் பிரச்சனை இல்லை என்று கூறுவீர்களா?

பதில்: நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?

கேள்வி: டெல்லியில் குலாம்நபிஆசாத் உங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர் களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2ஜி வழக்கு நடப்பதால் தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் நினைப்பவர்களும் அல்ல, செயல்படுகிறவர்களும் அல்ல.

கேள்வி: ஜுலை மாதத்தில் நீங்கள் கூட்டும் பொதுக்குழுவில் திமுக, காங்கிரஸ் கட்சியோடு கொண்டுள்ள உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

பதில்: நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை பூதாகரமாக சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட காரணத்தால், அதை எடுத்து வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையிலே எழுதியிருப்பார்கள்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தேர்தல் தோல்விக்குக் காரணமா, இல்லையா?

பதில்: இல்லை. ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

கேள்வி: பாஜகவுடன் நீங்கள் கூட்டணி அமைக்கப் போவதாக டெல்லியில் சொல்கிறார்களே, அதற்கு ஒரு முயற்சி நடைபெறுவதாகவும் கூறுகிறார்களே?

பதில்: அதைப் பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூடச் சொல்வீர்கள்.

கேள்வி: அடுத்து சிபிஐ தாக்கல் செய்ய உள்ள 3வது குற்றப் பத்திரிகையிலே தயாநிதி மாறனின் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: நீங்கள் முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால் உண்மையா அல்லவா என்பதை சிபிஐ தான் சொல்ல வேண்டும். சிபிஐ இதை 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறது.

கேள்வி: எதிர்க்கட்சிகள் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டுமென்று சொல்கிறார்களே, ஒரு கட்சித் தலைவராக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: ராஜினாமா செய்ய வேண்டாமென்று எதிர்க்கட்சிகள் எப்போதாவது சொல்வார்களா?.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே நீங்கள் ராசாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதி மாறனை ஆதரித்து கருத்துக் கூறவில்லையே, அவரே பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறீர்களே?.

பதில்: நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தயாநிதி மாறனே சொல்வார் என்ற அந்த எண்ணத்தோடு நான் பதில் சொன்னேனே தவிர, நீங்கள் கலகமூட்டுவதைப் போல தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் அவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.

கேள்வி: இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுய மரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்: எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவிலே போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.

கேள்வி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

பதில்: அப்படிப்பட்ட வருத்தம் எனக்குக் கிடையாது. எனக்கு வருத்தம் வரவேண்டுமென்று நீங்கள் தான் படாதபாடுபடுகிறீர்கள்.

கேள்வி: ராசாவும், கனிமொழியும் சிறையிலே இருக்கக் காரணம் காங்கிரஸ் கட்சி தான். அவர்கள் தான் இந்த விஷயத்தை வெளியிலே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று உங்கள் கட்சித் தொண்டர்களே வெளியே பேசுகிறார்களே?

பதில்: எந்தத் தொண்டர் அவ்வாறு பேசினார்?.

கேள்வி: டெல்லிக்கு எப்போது போகிறீர்கள்?

பதில்: போகும்போது சொல்லிக் கொண்டு போகிறேன்.

கேள்வி: போபர்ஸ் வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும், இப்போது 2ஜி வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

பதில்: ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது புதிதல்ல.

கேள்வி: உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்து விட்டார்களே?

பதில்: உயர் நீதிமன்றத்தில் இதைப்பற்றி கேட்கிறீர்களே, இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலே சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா அரசிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்களே அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று யாராவது நினைத்தீர்களா?. அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?.

கேள்வி: உங்கள் தீர்மானத்தில் சிபிஐயை கண்டித்திருக்கிறீர்கள். சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ளலாமா?.

பதில்: நீங்கள் அப்படித் தான் எழுதுவீர்கள். உங்கள் சுதந்திரம் அது.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களையெல்லாம் இந்த ஆட்சியினர் நிறுத்தியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதே?

பதில்: மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. யார் சொன்னார்கள் மக்களுக்குப் பாதிப்பு என்று? பாதிப்பு வருமென்று தெரிந்திருந்தால் மக்கள் அவர்களை தேர்தலில் ஆதரித்திருப்பார்களா?.

கேள்வி: நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நிறுத்தி வைத்ததைக் கண்டித்து நீங்கள் ஏதாவது போராட்டம் நடத்துவதாக இருக்கிறீர்களா?

பதில்: நாங்கள் தற்போது கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். இந்தக் கூட்டங்கள் முடிந்த பிறகு பொதுக் குழுவைக் கூட்டுவோம். அந்தப் பொதுக்குழுவில் போராட்டம் பற்றி தீர்மானிப்போம்.

கேள்வி: நிருபமாராவ், சிவசங்கர்மேனன் ஆகியோர் இலங்கை சென்று இருக்கிறார்கள். பல முறை அங்கே போய் விட்டு வந்து விட்டார்கள். எதுவும் நடக்கவில்லையே?

பதில்: இது செய்தி

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

1 comment:

Unknown said...

இந்த கிழ நரி இன்னும் திருந்தவில்லையே?