Saturday, June 11, 2011

தயாநிதி - கலாநிதி சொத்தில் 2130 கோடி மாயம் !


மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவரை சிறைக்கு அனுப்புமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் மாறன் சகோதரர்களின் சொத்துக்களில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாவை மாயமாக மறைய வைத்திருக்கின்றது!

அதாவது, கடந்த 10 நாட்களுக்குள் அவர்களது சொத்து மதிப்பில் 2000 கோடி ரூபா குறைந்திருக்கின்றது.

மாறன் சகோதரர்களின் நிகர வர்த்தகச் சொத்து மதிப்பில் முக்கிய பங்கு வகிப்பவை இரண்டு நிறுவனங்கள். ஒன்று, சன் டீ.வி. நெட்வேர்க். மற்றையது, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ். இந்த இரு நிறுவனங்களின் மொத்த பங்குகளிலும், மாறன் சகோதரர்களின் வசமிருப்பவை எவ்வளவு?

சன் டீ.வி. நெட்வேர்க் – 77%. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் – 38.61%.

இவ்விரு நிறுவனங்களின் பங்குகளும், முன்பு பங்குச் சந்தையில் நல்ல கிராக்கியுடன் இருந்தன. அதற்குக் காரணம், தயாநிதி மாறன் மத்திய அமைச்சர், அவரது தாத்தா தமிழக முதல்வர். இதனால், போட்டி நிறுவனங்களை வியாபார ரீதியாக வீழ்த்தக்கூடிய அரசியல் செல்வாக்கு.

முதலில் தமிழக ஆட்சி கைவிட்டுப் போயிற்று.

அப்படியிருந்தும், தயாநிதி மாறன் மத்திய அரசில் செல்வாக்கான அமைச்சராக இருந்ததால், பங்குகள் நல்ல விதமாகத்தான் ட்ரேட் பண்ணிக்கொண்டிருந்தன.

இப்படியான நேரத்தில்தான் தயாநிதி மீதான பகீர் குற்றச்சாட்டுகள் வெளியாகின. வெளியான குற்றச்சாட்டுகள் இறுகவும் தொடங்கின. தயாநிதிமீது சி.பி.ஐ விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாத் திசையிலுமிருந்து வரத்தொடங்கின.

அடுத்த கட்டமாக, தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தயாநிதி தீகார்வரை போகக்கூடும் என்ற வதந்திகளும் எழுந்தன.

இந்த நிலையில் இரு நிறுவனங்களின் பங்குகளும் சரியத் தொடங்கின. அதில் முதலீடு செய்திருந்தவர்கள், தமது முதலீட்டை மாற்றத் தொடங்கினார்கள்.

இம் மாதம் (ஜூன்) 1ம் தேதி, பங்குச் சந்தை மூடப்பட்டபோது, சன் டீ.வி. நெட்வேர்க் பங்குகள் ரூபா 377.40க்கு ட்ரேட் பண்ணின. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பங்குகளின் பெறுமதி ரூபா 41.10.

இதன் பின்னர்தான் தயாநிதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சூடு பிடிக்கத் தொடங்கின. இந்த வாரத்துக்கான பங்குச் சந்தை நேற்று (10ம் தேதி) மாலை மூடப்பட்டபோது, சன் டீ.வி. நெட்வேர்க் பங்குகள் ரூபா 307.15க்கு ட்ரேட் பண்ணின. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பங்குகளின் பெறுமதி ரூபா 34.05!

இதன் அர்த்தம் என்னவென்றால், மேற்படி இரு நிறுவனங்களின் புக்-வேல்யூவும் முறையே 19, 17 சதவீதங்கள் குறைந்துள்ளன. அவற்றில் மாறன் சகோதரர்களின் பங்குகள் முறையே 77, 38.61 சதவீதங்கள்.

மாறன் சகோதரர்கள், கடந்த 10 நாட்களில், தமது வர்த்தகச் சொத்தில் 2130 கோடி ரூபா தொகையை இழந்திருக்கின்றனர்.

இவ்விரு நிறுவனத்தின் பங்குகளும், பங்குச் சந்தை புரோக்கர்களிடையே ‘ஹாட்-பிக்” என்ற வகையில் கடந்த மாதத்தில் இருந்தன. இந்த மாதம் ‘எபவுட் கோல்ட்-ரேட்டட்” நிலைக்குச் சென்றிருக்கின்றன.

ஏதாவது அதிசயம் நடந்தால்தான், இவை பழைய நிலையை எட்டிப் பிடிக்க முடியும்!

No comments: