Saturday, May 21, 2011

உங்கள் மனம் என்ன பாடுபடுமோ - அந்த மனநிலையில் கலைஞர் - பேட்டி.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

கனிமொழி ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்படுவதையொட்டி, அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கலைஞர் நேற்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு சென்றார்.

அங்கு பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் அங்கு வந்தனர். அவர்களுடன் கலைஞர் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெறும் விவரங்களையும் கேட்டறிந்தார்.

விசாரணை மதியம் 2.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டதும் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் மதியம் வீட்டுக்கு வந்தனர். அப்போது கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் கலைஞர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த தகவலைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழுதி, தா.மோ.அன்பரசன், மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பேராயர் எஸ்றா சற்குணம், கலைஞரின் டாக்டர் கோபால், நடிகர் சந்திரசேகர் உள்பட பலர் அங்கு வந்தனர்.

அவர்களுடன் மத்திய மந்திரி சபையில் நீடிப்பதா? காங்கிரசுடன் உறவை தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்தும் கருணாநிதி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டாக்டர் கோபாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கனிமொழி கைதை தொடர்ந்து கலைஞரின் கருத்து, தி.மு.க.வின் நிலை குறித்து அறிய ஏராளமான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அங்கு கூடினார்கள்.

மாலை 5.45 மணி அளவில் கருணாநிதி தனது கருத்தை தெரிவிக்க இருப்பதாகவும், ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் உள்ளே வரும்படியும் அழைப்பு வந்தது.

ஆனால் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள், நிருபர்கள் என அனைவரும் உள்ளே நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிட நேர கூச்சலுக்கு பின்னர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

அது நீதிமன்ற விவகாரம். நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

காங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது?

எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.

இந்த தீர்ப்பின் காரணமாக காங்கிரசுடன் உங்களுக்குள்ள உறவு பாதிக்குமா? என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள், இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா?

தி.மு.க. என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவு எடுக்க முடியாது.

செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப்போகிறீர்கள்?

தேவைப்படும்போது கூட்டுவோம்.

இந்த தீர்ப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறீர்களா?

சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்ன முடிவு என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

உடனடியாக டெல்லி போகிறீர்களா?

இப்போது நான் போகவில்லை.

தேர்தலிலே உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்களும் ஓய்வு கொடுத்தால் நல்லது.

உங்கள் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே, அதன் காரணமாக உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?

உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.

1 comment:

பாலா said...

//உங்கள் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே, அதன் காரணமாக உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?

உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.//அம்புட்டு நல்லவைங்களா ...........நீங்க ....நம்பிட்டோம்!!! எப்பவுமே ....நேர பதில் சொல்ல மாட்டீங்களா?????