Saturday, May 21, 2011

திமுக அமைதி காப்பது ஏன் ?


ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங்கினால் கட்சியின் பெயர் மேலும் கெட்டு விடும் என்பதாலும், காங்கிரஸ் மேலும் அதிருப்தியாகி, கனிமொழியை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்பதாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது பட்டும் படாமலும்தான் பதிலளித்தார்.

2ஜி வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க. எம்.பி -யும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் தமிழகம் முழுக்க திமுகவினர் சாலை மறியல், போரட்டம், ஆர்பாட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராசா கைது செய்யப்பட்டபோது கூட பெரம்பலூரில் திமுகவினர் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால், தமிழகத்தில் தற்போது, அதிமுக ஆட்சி நடைபெறுவதால் , போராட்டத்தில் ஈடுபட்டால், போலீசார் கைது செய்து சிறையில் வைத்து விடுவார்கல் என்ற காரணத்தால் திமுகவினர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ராசா கைதின்போது திமுக தரப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்போது கனிமொழிக்காக பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கட்சிக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் திமுக தரப்பு அமைதி காப்பதாகவும் தெரிகிறது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறிப்பதாக இப்போது அறிவித்து விட்டால் அது கனிமொழிக்கு மேலும் பாதகமாகி விடும் என்பதாலும் திமுக தரப்பு அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இப்போது திமுகவிடம் ஆட்சிப் பொறுப்பு இருந்திருந்தால் பெரும் பிரச்சினையாக்கி, காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருப்போம் என்றும் திமுகவினர் தரப்பில் பேசப்படுகிறது.

ஆனால் தற்போது ஆட்சி மாறி, காட்சியும் மாறி விட்டது. காங்கிரஸும் இப்போது திமுக மீது பாசமாக இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக திமுகவினர் சோகத்துடன் கூறுகின்றனர்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியை ஆரம்பத்திலிருந்தே தட்டி வைத்திருந்தால் இந்த நிலையே வந்திருக்காது என்றும் தீவிர திமுக அனுதாபிகள் கவலையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியினரால்தான் தங்களுக்கு இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டது. திமுகவை வசமாக மாட்ட வைத்து அதில் அவர்கள் குளிர் காய்கிறார்கள் என்பது இவர்களின் கருத்தாகும்.

No comments: