Saturday, May 21, 2011

ரங்கசாமி பற்றி குறை கூற ஜெயலலிதாவிற்கு அருகதை இல்லை - நாஞ்சில்சம்பத் கடும் தாக்கு .


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துரோகம் செய்து விட்டார் என, முதல்வர் ஜெயலலிதா கூற, அவருக்கு எந்த வித அருகதையும் இல்லை, உரிமையும் இல்லை என்று ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத் செய்தி யாளர்களிடம் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளது நயவஞ்சக நாடகமாக உள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் தான் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே, சோனியா காந்தியின் சூழ்ச்சியில் விழாமல் இருக்க தேநீர் விருந்தை ஜெயலலிதா புறக்கணிக்க வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனக்கு துரோகம் செய்து விட்டதாக முத்லவர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், இதைச் சொல்ல ஜெயலலிதாவிற்கு எந்த அருகதையும் கிடையாது. காரணம், அதிமுக கூட்டணியில் ஏழு ஆண்டு காலம் உடன் இருந்த ம.தி.மு.க.விற்கு துரோகம் செய்து , வெளியேற்றியது அதிமுக.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று, சுயேச்சை ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். ரங்கசாமியின் அமைச்சர வையில் அ.தி.மு.க.வை சேர்க்க வேண்டுமென கோருவதற்கு ஜெயலலிதாவிற்கு எவ்வித உரிமையும் இல்லை. இதில் ஜெயலலிதாவிற்கு ரங்கசாமி எந்த துரோகமும் இழைக்கவில்லை என்றார்.

No comments: